சனி, 25 ஏப்ரல், 2020

வ உ சிதம்பரனார்

ஆங்கிலேய வல்லாட்சியை மட்டுமல்ல..
ஆரிய வர்ண வெறியையும்..
எதிர்த்தவர் வ உ சி. !

 கப்பலோட்டிய தமிழரின் புகழ் பரப்புவோம்!

- தோழர் பொழிலன் அழைப்பு!
======================================


கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் அனைவராலும் அறியப்பட்டவர் வ உ சிதம்பரனார்.

செப்டம்பர் ஐந்தாம் நாள் அவருக்கு 137-  ஆம் பிறந்தநாள்.

ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொருவரின் பங்கும் தனித்தன்மை வாய்ந்தது.

வ  உ சி,  ஆங்கிலேயனின் சுரண்டல் நோக்கத்திலான வணிகக் கட்டமைப்பை எதிர்த்தவர். மண்ணின் மக்களுக்கான வணிகக் கட்டமைப்பை உருவாக்கக் கப்பல்கள் வாங்கி சுதேசி கப்பல் நிறுவனத்தை அமைத்தார்..

நூற்பாலைத் தொழிலாளர்களை அரசியல் படுத்தி, உரிமைகளைப் பெற வேண்டுமென வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து போராடிடப்  பேசினார்..

 அதனால் நிலைகுலைந்து போன ஆங்கிலேய அதிகார வகுப்பு 
வ உ சி யைத் தேசத்துரோகி என்று அடையாளப்படுத்தி அதற்குரிய வழக்கைப் போட்டு இரட்டை வாழ்நாள் தண்டனையைக் கொடுத்துச் சிறைப் படுத்தியது. ஆங்கிலேய ஆட்சியில் அதுபோல் இரட்டை வாழ்நாள் தண்டனை கொடுக்கப்பட்டவர் அவர் ஒருவரே.

வழக்கறிஞரான அவரின் வழக்காடு உரிமையை நீக்கியதோடு,  சிறையிலும் அவரைச் செக்கிழுக்க  வைத்துக் கொடுமைப் படுத்தியது ஆங்கிலேய வல்லாட்சி..

 சிறையில் அவர் நிறைய படிக்கவும் எழுதவும் செய்தார், பலரையும் படிக்கவும் பழக்கினார்..

 விடுதலையாகி வந்த பின்னும் அவரை எளிதே ஆங்கில அரசு விட்டுவிடவில்லை..

தொடர்ந்து நெருக்கடி கொடுத்தது..

வாழ வழியின்றி அல்லல் படுத்தியது.. அவருக்கு வேலை கொடுத்தவர்களையெல்லாம்கூட ஆங்கிலேய அரசு மிரட்டியது..

மிகவும் தொல்லைப்பட்டு வாழ்ந்தபோதும் தம் கொள்கையில், உறுதியில் அவர் கொஞ்சமும் நெகிழ்ந்துவிடவில்லை..

ஆங்கிலேய அரசை எதிர்ப்பதற்காக ஆரியப் பார்ப்பனியத்திடம் அடிபணிந்தவர்கள்போல் அவர் இருந்திட வில்லை..

கடவுள் பற்றிய கருத்துடையவராக இருந்தாலும், அதிலும்சரி, சிவனியக் கருத்துகளிலும்சரி அடிமையுணர்வும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிகைக்குட்பட்ட கருத்துகளும் கூடாது என்றும் பறைசாற்றியவர்.

பகுத்தறிவு பரப்பும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் என்பதற்காகச் சிவனியர்கள் அவரைப் புறக்கணித்தபோதும், அதுகுறித்தெல்லாம் கவலைப்படாது மக்கள் தொண்டாற்றியவர்..

திருக்குறளுக்கு உரை எழுதினார்..

எல்லாரையும் போல் பரிமேலழகர் உரையை பார்ப்பனியச் சார்பு நிலையில் வழிமொழிந்து எழுதிடாமல், பரிமேலழகரின் பார்ப்பனியச் சார்பு உரை விளக்கங்களைக் கடுமையாக மறுத்து புதிய உரையை விரிவாக எழுதினார்..

தன் ஏழ்மை வாழ்வியல் பின்னணியிலும்கூட திருக்குறளுக்கான மணக்குடவர் உரையை வெளியிட்டார்..

விடுதலைப் போராட்ட எழுச்சியைத் திலகரிடம் கண்டு அவரோடு நட்பு பாராட்டினாலும் அவரிடம் பகவத்கீதையை மறுத்துத் திருக்குறளின் உயர்வைக் கூறித் தருக்கமிட்டவர்..

வேதங்களையும்,   மனுதர்மங்களையும் கடுமையாக மறுத்ததுடன், அவற்றைவிடத்

திருக்குறளே உயர்வானது என்று கருத்து கொண்டிருந்தார், அக் கருத்தைப் பரப்பினார்..

எனவேதான் அவ்விடுதலை வீரணை ஆரியப் பார்ப்பனர்களும், அவர்களின் அடிவருடிகளும் உயர்த்திப்பிடிப்பதில்லை..

ஆக, அவர்  ஆங்கிலேய வல்லரசை எதிர்த்த போராளியாக மட்டுமல்லாமல்

ஆரியத்தை அதன் வர்ணாசிரமப் போக்கை எதிர்த்தவராகவும், தமிழ் இலக்கியங்கள் பயின்று உரை எழுதும் அளவிற்கு திறம் படைத்த தமிழ் அறிஞராகவும் திகழ்ந்தார்..

உண்மைத்  தமிழராய்,
விடுதலை உணர்ச்சி கொண்ட போராளியாய்,
ஆரிய வர்ணத்  திமிரை எதிர்த்த சமூகநீதிக் காப்பாளராய்..

நம் தமிழ்ப் பேரினத்தின் விடிவுக்கு  உழைத்த வ உ சி  யை உயர்த்தி நிறுத்துவதும், அவரின் உணர்வுகளைத் தமிழ் மக்களிடையே பரப்புவதும் தமிழக  மக்கள் விடுதலை நோக்கம் கொண்ட அனைவரின் கடமையுமாகும்..

வ உ சி யை இனம் காண்போம்!

தமிழர்களிடையே இனங் காட்டுவோம்!
==================================
-தோழர் பொழிலன் தமிழ்நாடு
பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக