திங்கள், 27 ஜூலை, 2020

பாசம்


"தமிழ் - சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின்  

ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய உரைகள் (தொகுதி-2) "

 நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
                                                
                                                                பாசம்
சொல் மூலம்:
            பய் > பாய், >பாய் + அம்> பாயம் > பாசம்.

சொற்பொருள்கள் :
            பாசம் : 1. அன்பு 2. பற்று 3. தளை 4. கயிறு 5. தையல் 6. சுற்றம்

பய்: பசுமைக் கருத்து மூலவேர்.
            (இப் "பய்" என்னும் மூலத்தின் வளர்ச்சிகளையும் விளர்ச்சிகளையும்
 "பை" என்னும் உரைக்கட்டுள் கண்டு கொள்ளுக!)

            பசுமைக் கருத்தின் கிளை வளர்ச்சியாக, ஒட்டுதல் கருத்து நிரம்பி, அதனின்றும் பலபடியான சொல்லாக்கங்கள் செழிப்பெய்தின. பசுமையும் ஈர்மையும் (ஈரத்தன்மையும்) உடைய ஒன்றே, ஒட்டுறவுக்கு இயல்வதாகையும், வறட்சியும் உலர்ச்சியும் உடைய ஒன்று, இயைவுக்கு இயலாததாகையும்,ஈண்டுக் கருத்தில் கொள்ள வேண்டிய உண்மைகளாகும்.
பய் > பயின் = பசை, அரக்கு, பிசின்

            (1-1) "பயினொடு சேர்த்திய கல்போல்"
                                                                        (அகம்: 256:9-10)
            (1-2) “பல்கிழியம் பயினும் " (சீவக : 250)
            (1-3) “பிசின் பயினொன்றே பேர்" (சூடா . 6:21:4)

பயின் = பாலேடு (திவாகரம்)
(துளு) Bine = Sticky, adhesive. (
கன்ன டம்) Paginu = gum, resin. (paginu>haginu)
                   Pagil = to be sticky, adhesive

பய்+இர் > பயிர்+பு> பயிர்ப்பு = பசை, பிசின், அழுந்த ஒட்டும் பசை.

(1-1)           "பலவின் பயிர்ப்புறு தீங்கனி" (கலி: 50:12)
(1-2)           “ பயிர்ப்புறு பலவின் எதிர்சுளை அளைஇ"
                                                (அகம். நித்தி. 308.4)

பயிர்ப்பு = பிற ஆடவர் மேனி, தன் மேற்படுங்கால், பெண்டிர்க்கு இயல்பாகவே
                  மனத்துள் தோன்றும் அருவருப்புணர்வு; அருவருப்பு. (திவா),
                  மகடூஉக் குணம் நான்கனுள் ஒன்று.

பய் >பயி >, பசி = உணவின்மையால் வயிறு ஒட்டும் நிலை,
                                    அதனைத் தீர்க்க வேட்கையுறும் உணர்ச்சி.
            “பசியட நிற்றல் பசலை பாய்தல்" (தொல் : 6:22-3)

            “பயி” என்னும் பழந்தமிழ் வடிவம், மலையாளத்தில் பசிய வடிவங்களில்
பரக்கக் கிடக்கின்றது.
 (மலை) பயி, பய், பய்க்கம், பயிப்பு = பசி
(கன்னடம்) பசி = பசி                                                            (தெலுங்கு) பஸ்து.

பயிர் +கை >பயிர்கை = பறவை விலங்கு முதலியன தமக்கு
                                           உடல் வேட்கை எழும்போது, தம் எதிர்பால் இனவுயிரை                                                            விளித்தழைக்க வெளிப்படுத்தும் ஓசை, குரல்.

 பய் +இர்> பயிர் + தல்> பயிர்தல்
             (1-1) ''வீழ்துணை பயிரும் கையறு முரல்குரல்"
                                                                                    (நற்:71:9)
             (1-2) ''புணர் துணை பயிர்தல் ஆனா பைதலங் குருகே"
                                                                                    (நற்:3 88:12)
பய் + இல் > பயில் = ஒட்டு, நெருங்கு
             “மஞ்ஞை ஆலும் மரம்பயில் இறும்பின்"
                                                                                    (பெரும்பாண் : 395)
பயில் + தல் பயிறல் = நெருங்குதல், ஒன்றுதல்,
                                                ஒன்றிப் பழகுகை
. ஒ.நோ : “மெய் தொட்டுப் பயிறல்"
                                                (தொல். பொருள் : 3:11:1)
 பயில்+சி, பயிற்சி = பழகிப் பெறும் கல்வி, பழக்கத் தொடர்ச்சி.

பய் > பயை>  பசை = ஒட்டுதற்குரிய பொருள், கஞ்சி,கூழ்ப்பொருள்.

 ஒ.நோ: நய்> நயை > நசை.                                     இய் > இயை> இசை.
 (துளு): பச = பசை
(மலை) பச்சு, பச, பய = பசை

 "சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி"
                                                                        (மலைபடு : 26)
            (இம் மேற்கண்ட இலக்கிய வரியுள் பற்றியிருக்கும் பசையென்னும்
 சொல்லுக்கு நச்சினார்க்கினியர், 'பற்று" என்று பொருள் குறிப்பார்.)

            (உணவு சமைத்த கலத்தின் அடிப்புறத்தில் படிந்து ஒட்டிப்போயிருக்கும்
தவசப் பசையைப் பற்று” (பத்து) என்னும் சொல்லால் ஊர்ப்புறமக்கள் சுட்டுவர்.)

பசை = ஒட்டும் பசைபோன்றிருக்கும் கஞ்சி.
             ''நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்து"
                                                                                    (குறுந்: 330:1)
பசை = ஒட்டு, ஒட்டிக்கொள், பற்றிக்கொள்

                        "அசைஇய பொழுதில் பசைஇ வந்து" (அகம்: 379:21)
                        (பசைஇ வந்து - பற்றிக் கொண்டு வந்து)

 பசை= பற்று, உள்ளப்பற்று, உள்ள ஒட்டுறவு, அன்பு
பசை = விழைவு.
            "பசைஇய பசந்தன்று நுதலே" (குறுந்:87:4)
(நுதல் பசைஇய பசந்தன்று = நெற்றி, அவர் எம்மை விழைதல் வேண்டிப்
பசந்து காட்டுவதாயிற்று)

பசை+ தல்> பசைதல் = விரும்புதல்
            “ நோக்கிப் பசைதல் பரியாதாம் மேல்"
                                                                        (நாலடி: 60: 3-4)
பசைதல் = நட்புக் கொண்டிருத்தல்
            "பசைந்த துணையும் பரிவு ஆம்" (நாலடி: 187:1-2)

பசை = அன்பு, நெகிழ்வு.
            “அசையியற்கு உண்டு ஆண்டுஓர் ஏஎர் யான்நோக்கப்
 பசையினள் பைய நகும்"                                        (குறள் : 1098)

பய்> பாய்> பாய் +அம் >பாயம் = விருப்பம், விழைவு, அன்பு, புணர்ச்சி
                                                                                                 விருப்பம்.
பாயம் : விருப்பம்.
             "பளிங்கு சொரிவு அன்ன பாய்சுனை குடைவுழி
            நளிபடு சிலம்பில் பாயம் பாடி"                  (குறிஞ்சிப் : 57-58)
(நச். உரை: பாயம் பாடி = மனத்துக்கு விருப்பமானவற்றைப்பாடி......)

பாயம் = புணர்ச்சி, விருப்பம்.
                        "ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்
                        பன்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது"
                                                                        (பெரும்பாண் : 341-342)
            (நச். உரை: ஈரத்தையுடைய சேற்றை அளைந்த, கரிய பலவாகிய குட்டிகளையுடைய , பலவாகிய மயிர்களையுடைய பெண்பன்றிகளுடனே, புணர்ச்சியைக் கருதும் கருத்தாற் போகாமல் ………..)

பாயம் > பாசம் = அன்பு, வேட்கை, உறவன்பு
             ஒ.நோ: தேயம்> தேசம்.                                           நேயம் >நேசம்
                        ஈயல் > ஈசல்                                                  நெயவு > நெசவு.
பாசம் = அன்பு
                        "பாசமாகிய பந்து கொண்டாடுநர்” (சீவக:1320)
பாசம் = பற்று.                       “மனைப்பாசம் கைவிடாய்" (நாலடி:130)

பாசம் = பற்றிமை.                “பாசம் பரஞ்சோதிக் கென்பாய்"
                                                                                                (திருவாச: 7:2)
            தன்னைப் பொருந்திய அன்புடைய சுற்றத்தினர், “பாசம்” என்ற
சொல்லாலேயே குறிக்கப் பெற்றனர்.
                                                                                    (பாசம் = சுற்றம்)
            "ஆசை பிறன்கண் படுதலும், பாசம்
            பசிப்ப மடியைக் கொளலும்"                      (திரிகடு: 20)

            அன்பையும் விழைவையும் வேட்கையையும் குறித்தவாறு வளர்ந்து பயிலப்பெற்றதாகிய, "பாசம்” என்னும் சொல் தமிழ்மொழியில் மட்டுமே
தோன்றிய ஒன்றாகும். தொடர்ந்த பரவலான வழக்காற்றிலும் உள்ளதாகும்.

            இம் மேற்கண்ட பொருள்களையுடைய பாசம்" என்னும் தூய
செந்தமிழ்ச்சொல், சமற்கிருதத்தில் அறவேயில்லை. தமிழ்மொழிப்
 புலவர்கட்கும் பொது மக்கட்கும் உற்ற வடமொழி மயக்கமும்,
தன்னுணர்வின்மையும், அச்சொல்லை வடமொழியென்றே பிழைத்தெண்ணிப்
 பயின்று வருமாறு நேர்வித்துள்ளன.

            “பய்" என்னும் ஒட்டுதல், ஒன்றுதல் கருத்து மூல வழியாகப், பிணித்தல்
 கருத்தும், கட்டுகைக் கருத்தும் விளர்ந்தன.


 பய்>பாய் பாய்+அம்> பாயம்> பாசம்:
            “பாசம்" என்பது, ஒன்றைப் பற்றிப் பிணிப்பதாகிய கயிற்றுக்கும்
ஆகிவந்தது.

பாசம் = கயிறு.
             “விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
            பாசம் தின்ற தேய்கால் மத்தம்" (நற்:12:1-2).
             (உரை: கயிறு ஆடித் தேய்த்தலாலே தேய்ந்த தண்டினை உடைய
பெருமத்து)
பாசத்தளை = பற்றிப் பிணிக்கும் தளைக்கயிறு.
            “பற்று என்னும் பாசத் தளையும், பலவழியும்
            பற்று அறாது ஓடும் அவாத் தேரும்”                        (திரிகடு:22:1-2)

            உயிர் என்று, ஏதோ ஒரு அருவ ஆற்றல்,- உடலுள் ஒளிந்திருக்கின்றது
என்றும், காலங்குறித்து ஒருவன் தன் கையில் வைத்திருக்கும் கயிற்றால்
 அவ்வுயிரைக் கட்டிப் பிணித்துக் கவர்ந்து போகின்றான் என்றும்,- ஒரு
கற்பனையான மூடக் கருத்து, இங்கு நிலவியிருந்தது.

யாமம் = நள்ளிருள், நள்ளிருள் நேரம். யாமன் > யமன்= நள்ளிருள் நேரத்துள்
வந்து உயிரைக் கவர்ந்து போகின்றவன். (ஒரு கற்பனை இல்லுருவோன்.)
(யமன்> எமன்). (யமன்> நமன்).

(கால் = பொழுது, நேரம்.                  கால் + அம் > காலம் = பொழுது.
 கால் + அன் > காலன் = பொழுது அறிந்து வந்து உயிரைக் கவர்ந்து
போகின்றவன். (பகுத்தறிவற்ற பேதையர் ஆக்கிய தமிழ்ச்சொல்)

            அக் கற்பனையுருவோன் கையகத்திருப்பதாகக் கருதப் பெற்ற கயிறு,
 "பாசம்” என்னும் கிளைப் பொருண்மைச் சொல்லோடு பிணிக்கப்பெற்று, ஓர் இருபெயரொட்டுச் சொல்லாகப் 'பாசக்கயிறு" என்றும் பயிலப்பெற்றது.

            அச்சவுணர்ச்சியால் பேதையர் உள்ளத்தே தோன்றிய "பேய்" என்னும் ஒரு கற்பனையுருவும், உயிரைக் கயிற்றில் பிணித்துக் கவர்ந்து செல்கின்றதென்று, மடத்தனமாகக் கருதி,- கயிற்றை வைத்திருப்பது என்ற அடிப்படையில், "பாசம்" என்ற சொல்லாலேயே அப் பேயும் குறிக்கப்பெற்றது.

(பாசம் = பேய்)
 ஒ.நோ: "பலிகொண்டு பெயரும் “பாசம்” போல”
                                                                        (பதிற்: 71:23)
 பாசம் = பாசக் கயிறு
(1-1) “கைக் கொள் பாசத்துக் கைப்படுவோர்"
                                                                        (சிலம்பு: 5:132)
 (1-2) “கறைகெழு பாசத்துக் கையகப் படுதலும்
            பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு
            கட்டிய பாசத்துக் கடிது சென்றெய்தி"
                                                                        (சிலம்பு: 15:79)
(1-3) - கட்டா துன்னையென் கடுந்தொழிற் பாசம்"
                                                                        (மணி: 22; 71)
            பிணிக்கும் கயிற்றைக் குறித்த ''பாசம்" என்னும் சொல், சமற்கிருதத்தில் “
Pasa' எனத் திரிந்தது. "பாசம்" என்ற செப்பவடிவம் அம்மொழிக்கண் இல்லை.

            சமற்கிருத அகராதிகளில், “Pāsa” என்ற செரல்லுக்கு,வலை, கண்ணி,
சுருக்கு, கயிறு, தொடரி, அதனைக் கட்டுவிப்பது என்றவாறான பொருள்களைப்
பரக்கப் பட்டியலிட்டுள்ளனர்.

            அச்சொல்லுக்கு நேரே ,- அன்பு, விழைவு, விருப்பம், அன்புறவு, என்றவாறு, தமிழ்ச்சொல்லாகிய பாசத்துக்குரிய ஒருபுடைப் பரவலான செழும் பொருள்களில் ஒன்றுதானும் குறிக்கப் பெறவேயில்லை.

            பிணித்துத் தளைக்கும் கயிறாகிய "பாசம்” என்னும் தமிழ்ச் சொல்லின், திரிபுகளை, அதன்வழி வடபாலியர் வளர்த்துக்கொண்ட கிளைக் கருத்துகளுடன் கீழ்வரும் பட்டியலில் காணலாகும்.

பாசம் (Sanskrit)           Pāsa = noose,
                                    Pāsaka (Lex), Pāsi = rope (கயிறு)
                                    Pasika = leather strap on plough
 Pali:                 Pāsa = tie                     Pāsiya = little do.          
 Katei:               Pos = trap. (கண்ணி )
Khohistani:        Pas = noose (சுருக்கு, முடிச்சு)
Nepali:              Pāso= net
Oriya:                Pāsa = net
Bengali:             Pās= noose
Mythili:              Pās=net (வலை )
                        Kes-Pās = lock of hair
Hindi:                Pās, Pāsa= noose.
Old Gujarati;      Pāsu= noose.
 Konkani:           Pāsu
Sinhalese:          Pasa= net.


மின்னெழுத்தில் வடித்தது,

பெஞ்சமின் பிராங்கிளின்பி
10 கடகம்  2051
௧०//௨०௫௧]
(25-07-2020)




சனி, 11 ஜூலை, 2020

நேசம்


       "தமிழ் - சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின்  

ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய உரைகள் (தொகுதி-2) "

 நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
                   


                               நேசம்


சொல் மூலம்:
                        ஞய் > நய் > நெய் > நேய் > நேய்+அம்> நேயம்>நேசம்.


சொற்பொருள்கள்:
                     அன்பு, நட்பு, பற்றிமை, தகுதி
                               
ஞய் :
      ஞஃகானும் யகரப் புள்ளியெழுத்தும் கூடி இழைந்தொலிக்கும் அரிய வேராகிய  "ஞய்" என்பதே, நேசம் என்னும் சொல்லின் தோற்றத்திற்கு அடிப்படையானதாகும்.
     
ஞய் > நய்
      "நய்" என்னும் செப்பம் செழித்த ஆணிவேருக்கு முந்தியன்றமை உடையதே இந்த    "ஞய்" என்பது என்னும், மொழியியல் போங்குண்மையை,
ஞண்டு > நண்டு, - ஞரலுதல்> நரலுதல் போலும் பழந்திரிபுச் சொற்களின் நிலைத்த  சான்றுகளிடையே கண்டுணரலாகும்.
     
நய்: நெருங்கு, நெருக்கு, ஒன்று, அழுந்து, நசுக்கு,
      அழி, உருச்சிதை, பொடியாக்கு.
     
நய் > நை
      நகரமும் யகரப் புள்ளியும் இணைந்த "நய்" என்னும் வடிவே, "நை" என்னும் உயிர்மெய் வடிவினும், - ஒலி, எழுத்து ஆகியவற்றின் தோற்றங்களில் முற்பாட்டு நிலைமை பெற்றிருந்ததாகும்.
     
      நை = பொருந்தி அழுந்து, (அழுத்து), நசுங்கு, (நசுக்கு).
     
      (அழுந்துகைக் கருத்தும், நசுங்குகைக் கருத்தும், வேரூற்றம் கொண்டு செழித்த பின்னர்,  அழிப்புக் கருத்துக்குத் தாவிப் பருத்தது.)
     
      நை+ தல்> நைதல் = பொருந்தி நசுங்குதல்.
      நை+ (த்) + தல் > நைத்தல் = நசுக்குதல், அழித்தல், (எரித்தல்)
     
      "வேலே, குறும்பு அடைந்த அரண்கடந்தவர்
      நறுங்கள்ளின் நாடு நைத்தலின்"     (புறம்: 97: 4-5)
     
                  நைத்தலின் = அழித்தலின்
                  நைத்தல் = அழித்தல், சுட்டழித்தல்.
                 
      (1-1)   "நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க" (புறம்: 57:7)
            எரியும் நைக்க = தீயும் அழிப்பதாக....
           
      (1-2) "ஒள்ளெரிநைப்ப உடம்பு மாய்ந்தது"(புறம்: 240:10)
                  ஒள்ளெரி நைப்ப = ஒள்ளிய தீச் சுட.....
                 
      (1-3) "பரந்துபடு கூர் எரி கானம் நைப்ப" (நற்: 177:1)
                        நைப்ப = எரிந்து அழிக்க...
                       
      நய் >நயி> நசி = அழுத்து , நசுக்கு, அழி
            நசி+ தல்> நசிதல் .   நசி+(த்)+தல் > நசித்தல்
           
      .நோ: பய் >பயி > பசி                           வய் >வயி> வசி
               மய்  >மயி >மசி                  நொய்> நொயி> நொசி
1
            நசிதல் = அழிதல்              நசித்தல் = அழித்தல்
      நசி >(Latin) neco
         > neco = to kill; destroy.
         > neceo = to do harm, do hurt to
         > neco > nex = death, a violent death,destruction, ruin.
         > nec eo
         > nec-sa
         > noxa = hurt, harm, injury
         > noxālis = of or relating to an injury
         > nisus = a pressing, a tread.
        
         நய் > நயு > நசு > நசு+கு> நசுகு > நசுக்கு = தேய், அழி
                                   நசுகு, > நசுங்கு = தேய்வுறு, அழிவுறு.
                                     
      (நய் > நய்யம் > நயம் > நாயம்) நாசம் = அழிவு
      நாசம் >(சமற்கிருதம்) nasa = destruction, ruin, death.
     
      Pali: nāsa = destruction
      Prakrit: nāsa = loss
      West pahari: nās = destruction
      Kumauni: nās = loss
      Nepali:   nās = loss
      Bengali: nās = loss
      Oriya: nāsa = loss
      Hindi: nāsa
      Marathi: nāsa
      நாசம் > (Skt) nāsayati = destroys
      நசி > (Skt) nasyati = perishes
      (Prakrit) nassai = perishes

      நய்,>நய்+(ச்)+சு> நய்ச்சு>நச்சு = உயிரை அழிவிக்கும் கடும் பொருள்.
     
      (.நோ : தய் >தய்+ச்+சு>தய்ச்சு >தச்சு)
     
      நச்சு:  "நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று'"  (குறள்: 1008)
     
            அழுந்துகைக் கருத்தும் நகங்குகைக் கருத்தும் செறிந்து நிறைந்தபின், நசுங்கிய ஒன்று குழைவுடைய தாதல் பற்றிக், குழைவுப் பொருளையும் இந்நய்" என்னும் ஆணிவேர் அணிந்து கொண்டது.
     
      நய் > நை = குழைவாகு. 
      நைய = குழைவாக, பொடியாக
      நைபடுதல் = குழைவு படுதல்
      நைச் சாந்து = மிகக் குழைவான சாந்து.
      நையப் புடைத்தல் = குழைவுற்றது போன்று தளரும்படி அடித்துத் தாக்குதல்.

            குழைவுக் கருத்து உள்ளத்தே நேர்வுறும் இழைவுக் கருத்துக்கும்   தாவும். ஒருவர்க்கொருவர் அன்புகலந்து உரையாடுகின்றமையையும்,     நெருங்கிப் பழகுகின்றமையையும்  "அவர்கள் ஒருவரோடு ஒருவர்   குழைகிறார்கள்"   என்று மக்கள் சுட்டிக்காட்டி வழங்குவதில் அப் பொருள்     பசுமையைக் காணலாகும். குழைவில் மென்மையும் ஒட்டுறவும் ஈரமும்       உள்ளமையே, விருப்பத்திற்கும் அன்புக்குமான கருத்துக்குப் பற்றிப் படர்ந்த   அந்நிலைக்கு அடிப்படைக் காரணமாகும்.

      நய் > நய = விரும்பு, அன்பு செய்.
      நய +(த்) + தல் > நயத்தல் = விரும்புதல், அன்பு செய்தல், காதலித்தல்
     
      "நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்" (குறள் : 580)
      நயந்த = விரும்பிய        நயந்தவர் = விரும்பியவர், அன்பு செய்தவர்.
     
      நய>நய +வு >நயவு = விரும்பு
      நயவு + அன் > நயவன் - விரும்புபவன், சுவைஞன்.

      "நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்"       (அகம்: 212)
     
      நயவு++மை> நயவாமை = விரும்பாமை.
      "பிறன் வரையாள், பெண்மை நயவாமை நன்று"       ( குறள்: 150)
     
      நய் + அம் >நயம் = விருப்பம், அன்பு, இன்பம்.
      நய+(ப்)+பு>நயப்பு = விருப்பம்.
      நயந்தனிர் = விரும்பினீர்.
      நயம்தலை மாறுதல் = அன்பு ஒழிதல்.
      நயவந்து = விருப்பம் வந்து.
     
      நய்+அகன்> நயகன் > நாயகன் = விரும்பத் தக்க தலைவன்.
      நய் + அகி > நயகி > நாயகி = தலைவி.
     
      நாயகன்> (Skt) Nāyaka
      நாயகி >(Skt) Nāyaki.

      நய்>நாய்+அன்>நாயன் = விரும்பத் தக்க தலைவன்.
     
      நாயன்+மார் >நாயன்மார் = கடவுளர் (!)
                                                                                                      சிவனடியார் (!)
                                                                                                       
      மகன் >மான்            அதியமகன் >அதியமான்.
                              பெருமகன் > பெருமான்.
                             
      மான் > மார் (பெருமையும் மதிப்புங் குறித்த பலர் பாலீறாகப் பயிலப்                                                        பெற்றது)
     
      நய் > நாய் +சி> நாய்ச்சி= அன்பு மிக்க தலைவி, விரும்பத் தக்க தலைவி,
                                                      அன்பு நிறைந்தோள்

      நாய்ச்சி >நாச்சி = தலைவி. (நாமதீப:183)

      நய் >நய்ம்> நம் = (விருப்பக் கருத்துப் பக்கவேர்)
      .நோ:     வெய் > வெய்ம் > வெம்.
                  செய்> செய்ம் > செம்.

      நம் >நம்+பு > நம்பு = விரும்பு, விருப்பம்.
                  'நம்பும் மேவும் நசையாகும்மே"       (தொல் உரி: 325)
                 
      நம்பி = விரும்பி
            (1-1) ''வாயார நின் இசை நம்பி"    (புறம்: 136:17)
      நம்பி = விரும்பிக் கேட்டு
            (1-2) "சேரியம் பெண்டிர் சிறுசொல் நம்பி" (நற்:175:7)
      நம்பு+ >நம்பி.     ('', ஓர் ஆண்பால் ஈறும் ஆகும்)
           
            .நோ :    நள் +(ள்) + > நள்ளி
                        பார் + >பாரி
                        கார் + >காரி
                        ஓர் + > ஓரி
                       
      நம்பி = விருப்பத்திற்குரியவன், நயந்தவன், தலைவன், அன்பன்
     
      நம் +கை >நங்கை = அன்புடையாள், விருப்பத்திற்குரியாள்,
                                                இளையோள்.
                                               
            "என்னுடன் நங்கை ஈங்கிருக்க" (சிலம்பு: 16:14)
           
                  .நோ:     செம்+கை > செங்கை .
                              வெம்+ கோல் > வெங்கோல்
                                    "வெங்கோலன் ஆயின்'"   (குறள்: 563)

            "கை"  ஒரு பெண்பாலீறு
           
            .நோ :    கணி+கை > கணிகை.        
                        நடி+கை >நடிகை.
                       
      நய் >நயை >நசை. (யகர சகரத் திரிபு)
            .நோ:     இய் > இயை = பொருந்து.
                        இயை+பு> இயைபு
                        "இயைபே புணர்ச்சி" (தொல். உரி: 306)
      இயை >இசை = பொருந்து.           இசைதல் = பொருந்துதல்.

      நசை = விருப்பம், ஆசை
            (1-1)  "நசைதர வந்தோர் நசை பிறக்கொழிய"         (புறம்: 15)
            (1-2) "நசைஇயார் நல்கார் எனினும்" (குறள் : 1199)
      நசைநர் = நண்பர். (பிங்கலம்)
      நய்>நய் + (ச்)+சு >நய்ச்சு > நச்சு = விருப்பம்.
                  நச்சுதல் = விரும்புதல்

      (1-1) "ஒருவரால் நச்சப்படாஅ தவன்' (குறள்:1004)
      (1-2) ''.................................பரிசில்
            நச்சுவர நிரப்ப லோம்புமதி" (புறம்:360: 13-14)

            (உரை: நின்பால் பொருள் நச்சி வருவார்வர அவர்கட்கு வேண்டும்
      பொருளை நிரம்ப நல்கு தலைப் பாதுகாப்பாயாக.....)
     
      நச்சு > நச்சினார் = விரும்பியோர், அன்புடையவர்.
      நச்சினார்க்கு இனியர் = (அன்பர்க்கன்பர்) அன்பர்க்கு இனியர்.
     
      நய் : (குழைவுக் கருத்து வேர்)
      நய்>நை.    நை + தல்> நைதல் = குழைவாதல்
      நைந்து = குழைவாகி
            சோறு நைந்து போய்விட்டது” (உலக வழக்கு)
           
      நை+பு> நைப்பு = குழைவு, மென்மை .
     
            வழவழப்பு நிலையைக் குறித்தற்குச் சிற்றூர் மக்கள், "நைப்பு"
      என்ற சொல்லைப் பயன்படுத்துவது ஒரு பரவலான வழக்காகும்.
     
            நை = மெலிவுறு.        நையல் = மெலியச் செய்யும் ஒருநோய்.
      மெலிந்தவனைப் பார்த்து, "இவன் நையென்றிருக்கிறான்" என்பது
      உலக வழக்கு.
     
            எள்ளனமாகப் (ஏளனம்) பகடி செய்து வெறியேற்றும் செயலை,
      "நைக்காட்டுதல்" என்பர், யாழ்ப்பாணத்தார்.

      நைதல் = மெலிதல்.
     
      "நைந்து உருகி, என் நெஞ்சம் ஒல்கும்வாய் ஒல்கல் உறும்"
                                    (திணைமாலை நூற். 17: 3-4)
                                   
      நைந்து உருகல் = மெலிந்து உருகுதல்.
      நை+து >நைது = மெலிதற் குறிப்பு (சதுரகராதி)
            நைந்து = மெலிந்து, நையலுற்று

            "தொன்று துளை யொடு பருவிழை போகி
                  நைந்துகரை பறைந்த என்னுடையு நோக்கி"
                                                (புறம்:376:10-11)
      நைந்து = தேய்ந்து மெலிதாகி...
      நய் >நய்ம் >நம்.
            நம் + து> நந்து = மெலி, தேய் , உள்ளொடுங்கு
      நந்து = தொட்டவுடன் அல்லது பிற பொருள்கள் பட்டவுடன் கூட்டோட்டுக்குள்
            உள்ளொடுங்கிக் கொள்ளும் உயிரி.   Snail (Buccinum)
           
      நந்து = நத்தை (பிங்கலம்), சங்கு (திவாகரம்)
      நந்து > நத்து = நத்தை ("நத்தொடு நள்ளி" பரிபா: 10:85)
     
      நத்து +> நத்தை
     
      நத்து + அம் > நத்தம் = சங்கு (சூடாமணி) நத்தை (அக. நி.)

      நய் = குழைவு
      நய்,>நெய் = குழைந்த பொருளாய் இருக்கும் ஆன் நெய்.
                  அகர எகரத் திரிபு: .நோ. வல்  > வெல்
                                              வறு  > வெறு
                                              கட்டி > கெட்டி.
                                               
            தொடக்க மொழிமாந்தனின் வாழ்க்கைப் பொருள் பயன்பாட்டில்
            குழைவாயிருந்த பசைப் பொருளாக, நெய்யே இருந்தது.

            ஆவினின்று கிடைக்கும் பாற்பொருள்களில் நறுமணம் மிக்கதும்,
      உணவில் கலந்துண்ணச் சுவையும் நலமும் தருவதுமாகிய அரிய பொருளாக "நெய்" பயன்பட்டது. வெண்ணெயையும், நெய்யையும் தொடக்க மொழி மாந்தர்  "நெய்" என்ற சொல்லாலேயே குறித்து வழங்கலாயினர். நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மொழியானது சிறக்க வளர்ச்சியுற்ற காலத்தில், நெய்க்கு முந்து நிலைத் தன்மைப் பொருளைக் குறித்தற்கு , - வெண்ணிறத் தன்மைக்குரிய அடையை முற்பிணித்து (வெள் + நெய்)> வெண்ணெய் என்றவாறு ஆக்கம் செய்யப்பட்டது. வெப்பத்தில் உருக்கிய நெய்யே, தலை முடியில் தடவிச் சீவுவதற்கு அக்காலத்தில்      பயனாகியிருந்தது.
     
            எள்ளினின்று எடுக்கப் பெற்ற நெய், (எள் + நெய்) எண்ணெய் என்னப் பெற்றது.
           
      நெய்:
            (1-1) "நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி"
                                                (தொல். பொருள் : 144:28)
            (1-2) "கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
                                                (புறம்: 95:2)
            (1-3) "நறுநெய்க் கடலை விசைப்ப” (புறம்: 120:14)
            (1-4) ............................. நெய்யருந்து
                  ஒருங்கு பிணித் தியன்ற வெறிகொள் ஐம்பால்"
                                                (அகம்: 177:4-5)
            (1-5) "நெய்யால் எரி நுதுப்பேம்” (குறள் : 1148)
           
            தமிழிய மொழிகளில் இந் நெய்யென்னும் சொல்லின் படிவுகளாவன:
           
            Kota: Ney = ghee
            Toda: niy = ghee
            Kannada: ney = ghee
            Kodagu: ney   = ghee
            Tulu:   nëyi  =  ghee
            Telugu: neyyi, nëyi = ghee, oil
            Kolami: ney = butter, ghee
            Naiki: ney   = ghee
            Parji: ney  = oil, fat
            Gadba: ney, neyyu = ghee í
            Gondi: nI  = ghee
            (பால் நெய்) > Pal ni - ghee
            Kui: Níyu = Oil
            Kurukh: nëta = grease, fat
           
            (நோல்>)நோலை =எள்ளுருண்டை           
                        (அரும்பத வுரையாசிரியர் கருத்து)
                  "புழுக்கலும் நோலையும்" (சிலம்பு: 5:68)
            நோலை = எள்ளுடைய நெய்க்கசிவு
                        "அணங்குடை நோலை" (பு.வெ.மாலை: 3:5)
            நோல் + நெய் > நோனெய் (> நோனை)

            எண்ணெய்க்கு,நோனெய்" என்பது மற்றொரு பெயராகும். இச்சொல்
      வடுகுத் தமிழாகிய தெலுங்கில் "நூனெ" எனத் திரிபெய்தியது.
     
            தமிழிய மொழிகள் ஒரு சிலவற்றின் இவற்றின் பசிய ஆட்சியைக்
      காணலாகும்:
     
      Telugu:     nüne - oil
                  nüniya - oil
      Kolami:     nu-ne = oil
                  Pal-nüne = ghee
                       
            (எள்ளினின்று எடுக்கப்பெறும் நெய்யையே சிறப்பாகக் குறிக்கும்
      எண்ணெய் என்னும் சொல்லை மேற்கொண்டு, "தேங்காய் எண்ணெய்",
      "கடலை எண்ணெய்" என்றவாறு தவறாக வழங்கப் பெறுகின்றன.
      அவ்வகைத் தவற்று நிலையே Pal-nune என்னும் கோலாமியர்
      வழக்கிலும் படர்ந்திருக்கின்றது.

      Naiki:     nüne = sesame oil.
      Parji:      nuney = sesame oil.

            பசைமை உடைய தேனும், நெய்" என்னப்பெற்றது.
தேன்+நெய்> தேனெய்

(1-1)           “தேனெய் தோய்ந்தன"             (சீவகசிந். 2747)

(1-2)           “தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்"    (பொருநரா: 241)

 (நச். உரை: தேனாகிய நெய்யோடே கிழங்கையும் விற்றவர்கள்...)
தேனை வடிகட்டுவதற்குப் பயன்படுத்திய பன்னாடையை "நெய்யரி” என்ற வழக்கில்,- தேனை நெய்யென்று குறித்த உண்மை , இலங்கலுறக் கண்டு, விளங்கிக் கொள்ளலாகும்.
தேனாகிய நெய்யைப் பிலிற்றிக் கமழும் பூ என்னும் பொருளடிப்படையில் ஒரு வகைப் பூ, நெய்தல்” என்னப் பெயர் பெற்றது.
(1-1) "நெய்தல் கள் கமழ் புதுப்பூ'                             (பெரும்பாண் : 213:4)
 (1-2) “கள்கமழும் நறுநெய்தல்”                                (மதுரைக்: 250)
 (1-3) “மணிகுலை கள்கமழ் நெய்தல்.                     (குறிஞ்சிப்: 84)
(1.4) "வைகறை கள்கமழ் நெய்தல் ஊதி"                (திருமுருகு: 74)

 என்றவாறு பயிலப் பெற்றுள்ள பண்டையிலக்கியச் சான்றுகள், இவ்வுண்மையை நிறக்க மெய்ப்பிப்பனவாகும்.

நெய் > நெய் + அது > நெய்யது = நெய்யையுடையது, தேனையுடையது.

பழைய சோற்றை இக்கால் நாம் “பழையது" என்னுமாறு போல, அக்கால வழக்கில் சுடுசோற்றை “வெய்யது" என்றனர்.

காண்க: வெய்து= வெய்யது. வெய்யசோறு,
                                    வெய்யவுணவு, குடான உணவு.
“நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து”                     (குறள் : 1128)
நெய்> நெய் +து >நெய்து +அல் > நெய்தல் - தேன் நெய்யை மிகுதியாகப் பிலிற்றிக் கமழும் பூ.                                          (“அல்" ஓர் ஈறு)

Malayalam:        Neytal
Kannada;           neydalu, neydilu,
Tulu:                 naidile.

நெய் >நெய்யு = இழையோடு இழையைப் பின்னு, இழைகளைப்பிணை
நெய்+அவு >, நெயவு = நெயவு வினை.
 நெயவு > நெசவு = நெயவு வினை. (யகர சகரத் திரிபு)
தமிழிய மொழிகளில் இதன் திரிபுகளாவன:

Malayalam:        neyka    = to weave.
                        neyttu    =  weaving
                        neyyal    = weaving.
Kota:                 nec        = to weave.
Toda:                nio         =   
Kannada:           ney, neyi, na, nayu = to weave
Kodagu:            ney     = to spin
Tulu:                  neyuni  = to weave
Telugu:              nëyu       = to weave.
Kuwi:                 nahnai     = to inter weave.

நெய்> நெய்வு > (Latin) neo =  to spin, to weave, to interlace, entwine
                        > nexo = to tie or bind together
                        > nexio = a tying
                        > nexibilis = tied or bound together
> nexus    = a tying or binding together,
a fastening, joining.
an interlace, entwining
> (English) nexus = Bond, link, Connection
 > (Old English) nëhsta > (Eng) next = nearest.
> (Old Norse) Near > (ME) near = at a short distance
 (Gothic) nëhwa > (old (English) nëah>(Eng) neigh= near.
 (Old English) nëahgebur> (Eng) neighbour = Dweller of next door, near

நெய் > நெய்யு> (Greek) neö = to weave.
நெய்யுதல் > நெய்தல்> (Greek) Neto = to weave.

>Neith = Goddess Mother of the flax weavers.
N.B:  “ This was the three eyed Shiva of the Hindus whose wife was the 'weaving' Uma, the 'flax (Uma) Goddess, the Goddess mother of flax 'weavers' of Asia Minor who become the Egyptian Goddess Neith".
[History and Chronology of the Myth making age.page: 250. By J.F. Hewitt]
குழைவு, பசைமை ஆகிய கருத்து நிலைகள் அடிக்களனாக அமைந்த "நெய்" என்னும் சொல்லானது, ஆவின் நெய்யையும், தேன்நெய்யையும், மீன்நெய்யையும் ('மீனெய்யொடு நறவு மறுகவும்" பொருநரா: 215) குறித்து வழங்கப்பெற்ற உண்மையைக் கழக இலக்கியப் பரப்பிடத்தில் பரவலாகக் காணலாகும்.

குழைவானதும் பசைமையானதும் ஒட்டுந்தன்மையுடையதும் ஆக இருக்கும் நீர்மப் பொருள், "நெய்" என்னப் பெற்றது போலவே, அத்தன்மைகளே வேறு கோணத்திலமைந்துள்ள உள்ளத்தின் ஒட்டுறவையும், நெகிழ்ந்திழையும் அன்புணர்வையும் சுட்டுவதற்கென்று அம் மூலத்தினின்றே,

(நெய் > நேய்,> நேய் + அம்>) “நேயம்" என்னுமாறு ஒரு சொல்லாக்கம் தமிழ்மொழிக்கண் எழுந்து தழைத்தது!
அன்பு சொதந்திருக்கும் நெஞ்சம் , "நேய நெஞ்சம்" என்னப் பெற்றது.

“நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்
தவிரா ஈகை கவுரியர் மருக'' (புறம்: 3:4-5)
(பழையவுரை: சக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும், ஒழியாத வண்மையினையுமுடைய பாண்டியர் மரபினுள்ளாய்...)

            {இலக்கிய ஆளுமைகளிடையே, 'தேயம்" எனும் செஞ்சொல், “தேஎம்'' என்றவாறு வடிவமைக்கப் பெற்றிருப்பது போலவே,- “நேயம்'' என்னும் சொல்லும் இங்கு “நேஎம்'' என்ற வடிவு நிலையில் நிறுத்தப் பெற்றுள்ளது.]

            “நேஎ நெஞ்சு" என்பது, இங்கு ஈரமுடைய நெஞ்சு எனச் சுட்டப் பெற்றுள்ளது. “ஈரம்" என்பது, பசைமையுற்றிருக்கும் அன்பு என்று பொருள்படும், ஒரு சொல்லாகும். அன்புப் பசையுடைய நெஞ்சம், ஈரநெஞ்சு'' என்றும், ''ஈரநெஞ்சம்" என்றும் இலக்கிய ஆட்சிகளினூடே வழக்குடைய தாயுள்ளது.

(1-1) "ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப"                (நற்: 181:8)
 (1-2) "கடும் பகட்டு யானை நெடுமான் அஞ்சி
ஈரநெஞ்சம் ……………………………………….. “                      (நற்.381:7-2)

            "ஈரம்" என்னும் சொல்லே நேரிணையாக "அன்பு" என்னும் பொருளையும், தனிப்படத் தருதலும் உண்டு.
            ஈரம் = அன்பு
"ஈரமில் லாதது கிளை நட்பன்று" (முது மொழிக்காஞ்சி: 5:3)


            [நெய் தோய்ந்த திரி, "ஈர்ந்திரி' என்னப் பெற்றது, இங்கு மிகவும் கருதிப் பார்த்தற்கு உரியதாகும்.
“ இரும்பு செய் விவக்கின் ஈர்ந்திர் கொளீ இ"                    (நெடுநல்:42),
            நச். உரை: இரும்பாற் செய்த தகளியிலே 'நெய் தோய்ந்த திரியைக்'
கொளுத்தி..........]

 நெய் > நேய் + அம் > நேயம்.
            இச் சொல்லுக்குரிய பொருள்களாக, நெய்யையும் அன்பையும் எண்ணெய்யையும் பிங்கலம் சுருங்கச் சுட்டும்.
“நெய்யும் அன்பும் எண்ணெயும் நேயம்" (பிங்கலம்: 3740)
நேயம் = அன்பு.
“நேயத்ததாய் நென்னலென்னைப் புணர்ந்து"                   (திருக்கோ : 39)
நேயம் = (பற்று, இறைமாட்டு அன்பு கொள்ளுகை.)
 அருள் உணர்வு: ''நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி"
                                                                                    (திருவாச: 1-13)
 நேயம்,> நேசம் = அன்பு, விருப்பு, நட்புணர்வு
(யகரசகரத் திரிபு) ஒ.நோ     : ஈயல் > ஈசல்
                                                தேயம்,> தேசம்
(நேயம், நேசம் என்னும் அன்பு குறித்த தூய செந்தமிழ்ச் சொற்களின் வடிவங்களே சமற்கிருதத்தில் இல்லை. அவர்களிடம் வழக்கே இல்லாத பலசொற்களை, அவர்களுடைய சொற்கள் என்று தவறாக அறியாது கருதிக்கொண்டு பயன்படுத்தத் தயங்குவதும், அஞ்சியவாறு பயன்படுத்துவதும், அவற்றிற்கு இணையாகப் புதுச்சொற்புனைவு மேற்கொள்ள முனைவதுமாக ஓர் இறங்கல் நிலை, நம்மிடம் உள்ளமைக்கு. இந்த நேசம் என்னும் சொல்லின்பால் உள்ள ஒருவகை மயக்கமும், ஓர் அருமையான எடுத்துக் காட்டாகும்.)

            இனி, இவ்வுரைக்கண் பயின்ற "நெய்" என்னும் சொல்லையும், நேயம் என்னும் சொல்லையும் சமற்கிருதம் திரித்துப் பயன்படுத்திக் கொண்டுள்ள வடிவங்கள் சிலவற்றைக் காண்போம்.

            "நெய்" என்னும் தூய செந்தமிழ்ச்சொல், சமற்கிருதத்தில்  “Snih" என்றவாறு திரிபடைந்துள்ளது. இவ்வகையில், இத் திரிபுச்சொல்லினின்று பன்மடித் திரிபாக்கங்களைச் செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட சொல்லமைப்புகளைச் சமற்கிருதவாணர் யாத்துள்ளனர். அச் சொற்குலத் தொகுதிக்கு மூலவேர்ச்சொல்லாக, இந்த "Snih" என்பதையே ஆங்காங்கும் காட்டி, மருட்டலும் செய்துள்ளனர். “நெய்" என்னும் செந்தமிழ்வடிவத்தை "neh" என்றவாறு வடநாட்டுப் பகுதி தமிழிய மாந்தர் அக்கால் திரித்தொலித்த பின்றையே, அப்பால் வந்திருந்த ஆரியர், அதனின்று 'Snih" என்னும் கடுந்திரிபை மேற்கொண்டு பயின்று பயனடைந்துள்ளனர்.
            சில தமிழ்ச்சொற்களில் பலுக்கப்பெறும் யகரவொலி மெல்லிய ககரவொலியாகத் திரிபடைவது, தமிழின் அணுக்க இனமொழிகளான தென்றமிழிய மொழிகளிலேயே பொதுவான போக்குடையதாகும்.

            ஒப்பு நோக்க ஓரிரு சான்றுகள் :
(1)     பய்> பயின் = பிசின், ஒட்டும் பசை
"பயின் பிசினொன்றே பேர் "                - (சூடாமணி நிகண்டு)
"பயினொடு சேர்த்திய கல்போல்"
                                                (அகம். நித்திலக்- 256:9.10)
            இந்தப் “பயின்" என்னும் சொல், கன்னடத்தில் – “Paginu" என்றவாறு பயிலப் பெறுகின்றமை இங்குக் கருதுவதற்கு உரியதாகும்.

Kannada:           Paginu = gum, resin.
(2)        வாய் > வாய் + இல் > வாயில்
            வாயில் >(கன்ன டம்) Bagilu
(நெய்) neh என்றவாறான படிவத் திரிபுகளடங்கிய பிற வடபால் மொழிகளாவன:

Sindhi:                           nehu, nihu = oiliness, grease
 Lahnda:                        nehü
Punjabi:                         nëh, nih, nehü, nëhu, niHu nehura
Kumauni:                       neh
Assamese:                     nehä
Bengāli:                         neh
            (வங்காள மொழியில் "nei" என்ற சொல்வடிவமும் உள்ளது)
Maithili:                         neh, nehu
Bhojpuri:                       neh
Old Awathi:                    neha
 Hindi:                           neh
Gujarati:                        neh

            இம் மேற்கண்ட  “neh" என்ற வடிவத்தின், பிறிதொரு புடை வடிவமான “nih" என்பதனொடு, “S" என்னும் முந்துருத்திய ஒலியைப் பிணைத்து "Snih” என்ற வடிவை திரித்தமைத்துக் கொண்டனர்.

            தமிழ்ச்சொற்களைத் தம்மவை ஆக்கிக் கொள்ள, அச் சொற்களின் முன்னர்
“S" புணர்த்தியொலித்துக் கொள்வது சமற்கிருதமொழியியல்பு.

துண்> தூண் > தூணம்) (Skt) ஸ்தூண
 ஊசி > (Skt) சூசி
 மயிர் > (மயிரு)> (Skt) Smasru

            இவ்வகைப் போக்குத் திரியே, “Snih" என்பதுமாகும். நிலையுண்மை இவ்வாறிருக்க, நெய் என்ற சொல்லுக்கு Snëha என்பது ஒருகால் மூலமாயிருக்கலாம் என்று சென்னைப் பல்கலைக் கழக அகராதி குறித்துப் பரப்பி வருகின்றது!

நெய்,> (>நேய்> ) நேயம் என்னும் இரு சொற்களின் கொடுந்திரிபுகளாகவுள்ள “snih" snëha என்ற சமற்கிருத வடிவப் பிரிவுகளும், பொருள்களும்:

>(skt)    snih = to be adhesive, or Sticky
            Snigdha = Sticky
             Snëha = Oiliness, greasiness, lubricity, oil, grease, love, attachment
            Snëhin = Oily
            Snëha = grease, Oiliness, love.

            நேயம் என்னும் தூய் தமிழ்ச்சொல்லின் செப்ப வடிவம் பிராகிருதத்தில்,
 ''ne-am" என்றவாறே நலித்தலின்றிப் பயிலப் பெறுகின்றது.



மின்னெழுத்தில் வடித்தது,

பெஞ்சமின் பிராங்கிளின்பி
28 ஆடவை  2051
/०௬/௨०௫௧]
(12-07-2020)