வியாழன், 30 ஏப்ரல், 2020

தமிழர் இழந்த நிலம்-7

                                           தமிழர் இழந்த நிலம்-7

(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)

தேனியிலிருந்து சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம்,குமுளி, பீர்மேடு வழியாக கோட்டயம் செல்லும்  தேசிய நெடுஞ்சாலை எண்  183 ல் நீங்கள் பயணம் செய்தால்,,, பல இடங்களில் கொட்டாரக்கரா எத்தனை கிலோமீட்டர்கள் என்று பதிவிடப்பட்ட அளவை கற்களை காணமுடியும்.

எங்கோ கொல்லம் மாவட்டத்தில் வரும் கொட்டாரக்கரையை சுட்டுவதற்கு, எதற்காக கம்பத்தில் அடையாளக் கற்களை நடவேண்டும்.

திண்டுக்கல்லில் இருந்து கோட்டயம் செல்லும் அந்த தேசிய நெடுஞ்சாலையில், பல இடங்களில் நீங்கள் பார்க்கும் கொட்டாரக்கரை அளவைக் கற்களுக்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது.

இந்தக் கதையை எதற்காக கூறுகிறேன் என்றால்...

பாண்டிய மரபைச் சார்ந்த பூஞ்ஞார் சமஸ்தானத்தின் எல்லை எதிலிருந்து எதுவரை இருந்தது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்...

இன்றைக்கு கொல்லம் மாவட்டத்தில் உள்ளடங்கி இருக்கும் கொட்டாரக்கரைதான், பூஞ்சார் சமஸ்தானத்தின் தெற்கு எல்லை...அதனால்தான் அன்றைக்குப் பூஞ்சார் சமஸ்தானத்தின் கிழக்கு எல்லையாக இருந்த உத்தமபாளையத்தில் இருந்து, அதனுடைய தெற்கு எல்லையான கொட்டாரக்கரையை குறிப்பதற்கான கல்வெட்டுகள் இருந்திருக்கிறது.

அந்தப் பாரம்பரியத்தை தொடரும் விதமாகவே இன்றைக்கும் தேனி மாவட்டத்திலிருந்து குமுளி வழியாக கோட்டயம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் கொட்டாரக்கரை என்கிற பெயரை நீங்கள் காணமுடியும்...

தெற்கு எல்லை கொட்டாரக்கரை என்றால், வடக்கு எல்லை எங்கே இருக்கிறது என்று தேடினோமானால்,இன்றைக்கு கோதமங்கலம் தாலுகாவில், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நேரியமங்கலம் முல்லை ஆற்றுப்பாலம் தான் அதனுடைய வடக்கு எல்கை.

கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நேரியமங்கலம் பாலத்திற்கு கீழேதான் முல்லைப் பெரியாறு எர்ணாகுளத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. பாலத்தின் தெற்கு முனையில் இன்றும் பூஞ்சார் சமஸ்தானத்தின் அடையாளங்களை நம்மால் காணமுடியும். அதுபோல் வடக்கு முனையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது மறைந்த கே, எம், மாணியின் சொந்த தொகுதியான பாலா, தொடுபுழா வழியாக நேரியமங்கலத்தை வந்தடைய நீங்கள் பயணிக்க வேண்டிய தூரம் 157 கிலோமீட்டர்கள்.

இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் கொட்டாரக்கரையிலிருந்து, 38 கிலோமீட்டர் கிழக்கு நோக்கி பயணித்தால், பழைய செங்கோட்டை தாலுகாவினுடைய எல்லையான தென்மலை வந்துவிடும்...இது இன்றைக்கு தேசிய நெடுஞ்சாலை எண் 744 என்று பெயர் சூட்டப்பட்டு, மதுரை மாவட்டத்தின் திருமங்கலத்தையும்- கொல்லத்தையும் ராஜபாளையம், செங்கோட்டை வழியாக இணைக்கிறது.

ஆக திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்கை, கொட்டாரக்கரையிலிருந்து, புனலூர், தென்மலை வரையிலான 37 கிலோ மீட்டர்கள் மட்டுமே ஊடுருவி நிற்கிறது.

இத்தனை பெரிய பூஞ்ஞார் சாம்ராஜ்ஜியத்தினுடைய வரலாறுகளை தந்தைபெரியாரும், காமராஜரும் படிக்காமலா போயிருப்பார்கள்...

எத்தனை பெரிய பரப்பு

எத்தனை பெரிய வரம்

எத்தனை பெரிய ஆறுகள்

எத்தனை எத்தனை மலைகள்...

அத்தனையையும் கணப்பொழுதில் தமிழர்  கண்களைவிட்டு மறையச் செய்த கண்கட்டி வித்தைக்கு சொந்தக்காரரான தந்தைபெரியார்,,,,
தேவிகுளம் பீர்மேட்டுகாக சண்டை போட்டார் என்று சொல்வதுதான் இரண்டு நூற்றாண்டுக்கான மிகப்பெரிய நகைச்சுவை.

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதில், தந்தை பெரியாரை அடித்துக்கொள்ள ஆசிய துணைக்கண்ட வரலாற்றில் எவரும் இல்லை என்பதுதான் என்னுடைய வாதம்.

இந்தப் பட்டியலில் தந்தை பெரியாரோடு நாம் கம்யூனிஸ்டுகளையும் கண்டிப்பாக வரவு வைக்கவேண்டும். அவர்களுடைய துரோகம் இதனினும் மகத்தானது.

தேவிகுளம் -பீர்மேடு தமிழகத்தோடு சேர வேண்டும் என்பது குறித்தான விவாதம், தமிழக சட்டமன்றத்தில் 21 -11-1955 முதல் 24 -11-1955 வரை காரசாரமாக நடந்தது.

அன்றைக்கு தமிழக நிதியமைச்சராக இருந்த மரியாதைக்குரிய சி.சுப்பிரமணியம் அவர்கள், பல்வேறு சான்றுகளின் அடிப்படையில், தேவிகுளம் -பீர்மேடு தமிழகத்திற்கே சொந்தம் என்று வாதாடினார்.ஆளுங்கட்சியின் நிதி அமைச்சரே தேவிகுளம் -பீர்மேட்டை தமிழ்நாட்டோடு சேர்க்கவேண்டும் என்று வாதாடிவிட்டதால்,,, தமிழகத்தோடுதான் அவையிரண்டும் சேரும் என்று நம்பியவர்கள் பலர்.

இந்த விடயத்தில் நிதி அமைச்சர் திரு சி. சுப்பிரமணியம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய மிக முக்கியமான ஆளுமை,,, சுவாமி ஸ்ரீ சித்பவானந்தர் அவர்கள். ராமகிருஷ்ண மடத்தின் துறவிகளில் ஒருவரான இந்த சித்பவானந்தர், மாண்புமிகு நிதியமைச்சர் சி சுப்பிரமணியம் அவர்களின் தந்தையின் உடன் பிறந்தவர் ஆவார்.

பின்னாட்களில் திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில், காவிரிக் கரையையொட்டி, திருப்பராய்த்துறை எனுமிடத்தில் ராமகிருஷ்ண தபோவனம் எனும் தலைமை மடத்தை உருவாக்கிய இந்த சித்பவானந்தர், தன்னுடைய ஆன்மிகம் சார்ந்த கட்டுரைகளிலேயே தேவிகுளம் பீர்மேடு பற்றி குறிப்பிடுகிறார்.

இறுதியில் விவாதம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. தேவிகுளம் -பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடு சேர வேண்டுமென்று 122 வாக்குகளும்,சேரக்கூடாது என்று 18 வாக்குகள் எதிராகவும் விழுந்தது. இதில் பெரும்பாலானவை, தூக்குத் தண்டனைக்கு எதிராக நீட்டி முழக்கிய பின்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளுடைய வாக்குகள்.

தமிழக கம்யூனிஸ்டுகளான,
காமராஜரின் செல்லப்பிள்ளைகள், ஜீவா
கு.ராமமூர்த்தி கல்யாணசுந்தரம்  உள்ளிட்ட 13 பேர், நடுநிலைமை வகித்து தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொண்டார்கள்.

ஒருவழியாக தமிழக சட்டமன்றத்தில்  தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடு சேர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டதால், அது நடந்துவிடும் என்றே நம்பினார்கள் தமிழ் நிலத்து அப்பாவிகள்.

ஆனால் மலையாள நெருக்கடி முற்றிய காரணத்தால்,மாமா நேரு அவர்கள்,25-11-1955 அன்று நாடாளுமன்றத்தில், பசல் அலி கமிஷனின் பரிந்துரைகளை விவாதத்திற்கு வைத்தார்.

மார்ஷல் நேசமணி உள்ளிட்ட தமிழகத்தின் எம்.பிக்கள் எவ்வளவோ போராடியும், மலையாள மாஃபியாக்கள் தாங்கள் எடுத்த காரியத்தில் வெற்றிக் கொடி நாட்டினார்கள்.

இதோ கிளர்ச்சி, அதோ  கிளர்ச்சி என்று விடுதலையில் வேதம் ஓதிய தந்தை பெரியார், நாடாளுமன்றத்தில் தேவிகுளம்- பீர்மேடு உள்ளிட்ட தமிழர் பகுதிகள், கேரளாவோடு சேர வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்பட்ட செய்தியை அறிந்தும், கடைசிவரை கிளர்ச்சிக்கு தயாராகவே இல்லை.

நாடாளுமன்றத்தில் தேவிகுளம்- பீர்மேடு கேரளாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்தை அவ்வளவு எளிதாக அன்றைக்கு டெல்லியில் கொடி நாட்டியிருந்த கிருஷ்ணமேனன் போன்ற மலையாளிகளால் கடந்து செல்ல முடியவில்லை...

பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு அவர்கள் கொடுத்த நெருக்கடியை அடுத்து, தமிழக முதல்வர் காமராஜர் அவர்களும், நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்களும்... டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டதின் விளைவு, மறுபடியும் தமிழக சட்டமன்றத்தில் 23- 03 -1956 முதல்,31-03-1956  வரை பெயருக்கு ஒரு விவாதம் நடந்தது.

அன்றிலிருந்து இன்று வரை தமிழகத்திற்கு இரண்டகம் மட்டுமே செய்து பழகிய, காங்கிரஸ் கட்சி நடுநிலைமை வகித்தது. மானங்கெட்ட கம்யூனிஸ்டுகள் கொக்கரித்து சிரித்தார்கள்...

கடைசியில் தேவிகுளம் பீர்மேட்டுக்காக, சான்றுகளை காட்டி, எந்த சி சுப்பிரமணியம் வாதாடினாரோ, அவரே தேவிகுளம்- பீர்மேடு பகுதிகள் கேரளாவோடு சேர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி
தன்னுடைய ராஜ விசுவாசத்தை காட்டிக் கொண்டார்.

அந்த தீர்மானத்தின் மீதும், குளமாவது மேடாவது என்கிற பதம் காமராஜரால் பயன்படுத்தப்பட்டது...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மலையாளியான
கிருஷ்ணய்யர் போன்ற துரோகிகள், பக்கம் பக்கமாக எழுதி தீர்த்தார்கள்... தமிழகத்து  கம்யூனிஸ்ட்களுக்கோ நமட்டுச் சிரிப்பு வந்து வந்து போனது...

எந்தக் கட்சிகள் தமிழகத்தினுடைய வளம் பொருந்திய நிலம் பறி போவதற்குக் காரணமாக இருந்ததோ...அந்தக் கட்சிகள் இன்னமும் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான், தமிழ் நிலத்திற்கான பெருத்த அவமானம்...

வரலாறு நீளும்....

- ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

புதன், 29 ஏப்ரல், 2020

தமிழர் இழந்த நிலம்-6

                                      தமிழர் இழந்த நிலம்-6

(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)

இன்றைக்கு துல்கர் சல்மான் என்கிற ஒரு கத்துக்குட்டி மலையாள நடிகன், தலைவர் பிரபாகரனை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தில் வைத்த பெயர்,எத்தனை பெரிய வேதனையை இந்தத் தமிழர் நெஞ்சங்களில் உருவாக்கி இருக்கிறது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.

துல்கர் சல்மானுடைய எண்ணவோட்டத்தில் மட்டுமே இந்த வக்கிரம் இருக்கிறது என்று நினைத்தால்,,, நாம்தான் கத்துக்குட்டிகள். தமிழரை பழிப்பது என்றால், ஆனந்த களிநடனம் புரிபவர்கள் அவர்கள்.இன்னும் சொல்லப் போனால் பட்டம் தாணுப்பிள்ளை, கே.எம். பணிக்கரின் தொடர்ச்சி இந்த சல்மான்... அவர்கள் செயலில் காட்டியதை, இந்த கத்துக்குட்டி சொல்லில் காட்டுகிறது, அவ்வளவே.

"ஆயிரம் ஆண்டுகளாய் வண்டி இழுக்கின்றன தன் கொம்பை மறந்த மாடுகள்" எனம் காசி ஆனந்தனின் கவிதைவரிகள்... யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தன் பலம் என்னவென்றே தெரியாத இந்த தமிழினத்திற்கு கண்டிப்பாக பொருந்தும்.

1956 மொழிவழி பிரிவினை, நாடு முழுவதும் பெரும் கலகங்களை ஏற்படுத்திய நிலையில், கேரளாவோடு அநியாயமாக இணைக்கப்பட்ட தேவிகுளம், பீர்மேடு பகுதிகளைத் தாய்த் தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று கண்டனக் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடாயிற்று.

சிலம்புச் செல்வர் ம. பொ. சி இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தார்.

அன்றைக்கு தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக இருந்த திரு பி.டி.ராஜன் தலைவராகவும்...

மா பொ சி அவர்கள் அமைப்புச் செயலாளராகவும்...

ஜீவா
என்.வி நடராஜன், அந்தோணிப்பிள்ளை, சுப்பிரமணி ஆகியோர் செயலாளர்களாகவும் முன்னெடுத்த அந்தக் கண்டனக் கூட்டம் 27- 01 -1956 அன்று நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

1950 காலகட்டங்களில் திராவிட எதிர்ப்பு மாநாட்டை தமிழகம் முழுவதும் நடத்திய சிலம்புச் செல்வர் ம பொ சி,,,இந்தப் பொதுப் பிரச்சினைக்காக சற்று கீழிறங்கி தந்தை பெரியாரை நேரில் சென்று சந்தித்து நிலைமையை விளக்கினார்.பெரியார் இல்லாமல்தான் அன்றைக்கு அணுவும் அசையாதே இந்த தமிழ் நிலத்தில்...

திமுக
தமிழரசு கழகம், சோசலிஸ்ட் கட்சி, திராவிட பார்லிமென்டரி கட்சி,
தாழ்த்தப்பட்டோர் கழகம்,
வடக்கு எல்லை பாதுகாப்பு கமிட்டி, திரு-கொச்சி இணைப்பு கமிட்டி, புதுவை முன்னணி, ஜஸ்டிஸ் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஒருங்கிணைந்து இந்த கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

நொடிக்கு நொடி என்ன நடக்கிறது என்கிற தகவல்கள் தந்தை பெரியாருக்கு பரிமாறப்பட்டதாகவே எழுதுகிறார் ம.பொ.சி.

இந்தக் கூட்டம் நடந்த மறுநாள் அதாவது 28-0 1- 1956 அன்று, ராஜாஜி தலைமையில் இன்னொரு கூட்டமும்  நடக்கவிருந்தது.

ம. பொ. சி முன்னெடுத்த கூட்டத்தின் பிரதான கோரிக்கை தேவிகுளம் பீர்மேடு...

ராஜாஜி முன்னெடுத்த கூட்டத்தின் பிரதான கோரிக்கை, இந்தியா முழுவதும் ஆங்கிலமே அலுவல் மொழியாக வேண்டும் என்பதைக் குறித்தானது...

உண்மையிலேயே இரண்டு கூட்டங்களிலும் தந்தை பெரியார் கலந்து கொண்டு, உரையாற்றுவதாகத்தான் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் ம.பொ.சி தலைமையிலான கூட்டத்தில்,தான் கலந்து கொள்ள வேண்டுமானால், வெறுமனே தேவிகுளம் பீர்மேடு பற்றி மட்டும் பேசக்கூடாது. கூடுதலாக இன்னும் நான்கு கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும் என்கிற முன் நிபந்தனையை விதிக்கிறார் தந்தை பெரியார்.

அதாவது

* ராணுவம், போக்குவரத்து, வெளிநாட்டு தொடர்பு தவிர்த்த மற்ற அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கு ஒப்படைப்பு செய்யப்பட வேண்டும்...

* மதராஸ், சென்னை ராஜ்ஜியம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்துவது...

* தமிழ்நாடு- கேரளா- கர்நாடகா ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தட்சிணப்பிரதேசம் அமைப்பதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்வது...

* இந்தியை தடுத்து, ஆங்கிலத்தை அலுவல் மொழியாக தொடரச் செய்ய வேண்டும் என்பது குறித்தானது...

ஆரம்ப நிலையில் ம.பொ.சி யால் இதற்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை என்றாலும்,,, நாட்கள் நெருங்க நெருங்க அவரை ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டது.

தந்தை பெரியாரின் இன்னபிற கோரிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் வைத்துப் போராட முடியும். எப்போதுமே எதிரும் புதிருமாக நிற்கும் இயக்கங்களும், தலைவர்களும் இனத்தின் தேவை கருதி ஒருங்கிணைந்திருக்கும் இந்த நிலையில்,பெரியாரின் கோரிக்கைகளையும் கூட்டத்தில் அஜெண்டாவாக வைத்தால், எங்கே தேவிகுளம், பீர்மேடு முக்கியத்துவம் பெறாது போய் விடுமோ என்று அஞ்சினார் ம.பொ.சி.

ஆனால் அதற்கு அடுத்த நாள், ராஜாஜி தலைமையில் நடக்க விருந்த கூட்டத்தில்,ம.பொ.சி யிடம் முன்வைத்த இந்த கோரிக்கைகளை, தந்தை பெரியார் முன் நிபந்தனைகளாக வைக்கவில்லை என்பது இன்றைய இளைஞர்களுக்கான செய்தி.

தேவிகுளம் பீர்மேட்டுக்கு முழு ஆதரவு என்று அடிக்கடி விடுதலையில் வியாக்கியானம் பேசிய தந்தை பெரியார்...ம.பொ.சி ஏற்றெடுத்த தேவிகுளம் பீர்மேட்டுக்கான கூட்டத்தை புறக்கணிப்பதற்கு இரண்டு காரணங்களை என்னால் அவதானிக்க முடிகிறது.

திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை தமிழகம் முழுவதும் நடத்திய ம. பொ சி யின் கீழ் நாம் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதா என்பது ஒன்று...

இரண்டாவதாக அறிஞர் அண்ணா அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டால்,
தான் கலந்து கொள்ள முடியாது என்று சி பா ஆதித்தனாரிடம், தந்தை பெரியார் தெரிவித்ததாக, அண்ணாவே தன் தம்பிகளுக்கு எழுதிய கடிதம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது.

முரண்படுவதில் வட கொரிய அதிபர், நகைச்சுவைத் திலகம் கிம் ஜோங் உன்னை தாண்டிய தந்தை பெரியார்,அன்றைக்கு பற்றி எரிந்துகொண்டிருந்த தேவிகுளம் -பீர்மேடு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,,, எதற்காக முன்நிபந்தனைகளாக நான்கு கோரிக்கைகளை வைக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது.

குளமாவது மேடாவது என்று பெருந்தலைவர் காமராஜரையே,தியாகி பி.எஸ். மணியிடம் சொல்ல வைத்த பெரியாரின் பேனா, சம்பந்தமே இல்லாமல் தட்சிணப் பிரதேசத் தை அமைக்கப் போகிறார்கள் என்று அங்கலாய்ப்பு செய்தது ஏன்  என்பதுதான் இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது.

அன்றைக்கு பெரியார் வைத்த கோரிக்கைகள் இந்தியா முழுவதற்குமான கோரிக்கைகள்...

ஆனால் ம.பொ.சி முன்வைத்த தேவிகுளம் பீர்மேடு கோரிக்கை என்பது, அது தாய்த்தமிழகத்திற்கு உரிய தலையாய பிரச்சனை என்பதை பெரியார் கவனமாக கடந்து போய்விட்டார்.

தமிழ், தமிழர், தமிழகம் என்று தொடர்ந்து பேசி வரும் ம.பொ.சி யை குறிவைத்து தாக்குவதற்கு இதுவே தக்க தருணம் என்பது தான் பெரியாரின் எண்ணவோட்டம்.

ஆனால் தேவிகுளம் பீர்மேடு பிரச்சினையை  ம.பொ.சி யோடு இணைந்து முன்னெடுத்து கொண்டு செல்ல நினைத்த திரு பி.டி. ராஜனும், திரு என்.வி. நடராஜனும் யார் என்கிற கேள்வியை திராவிட இயக்க தோழர்கள் முன்வைக்கிறோம்.

ஆனால் 28ஆம் தேதி நடந்த கூட்டத்தில் சிரித்த முகத்துடன் சகஜமாக கலந்து கொண்ட தந்தை பெரியார், தேவிகுளம்- பீர்மேடு பிரச்சனையை எந்த நிலையிலும் கண்டுகொள்ளாத ராஜாஜியை வானளாவப் புகழ்ந்தார் என்கிறது வரலாறு.

யாரையெல்லாம் அதுநாள்வரை திட்டித் தீர்த்தாரோ, அவர்களில் முக்கியமானவர்களான கிருஷ்ணசாமி ஐயர், கே எஸ் ராமசாமி சாஸ்திரி, வெங்கட்ராம ஐயர் உள்ளிட்டவர்களெல்லாம் அந்தக் கூட்டத்தில் பெரியாரின் பேச்சை கேட்டு புளங்காகிதம் அடைந்து போனார்கள்.

மறந்தும்கூட அந்த கூட்டத்தில் தேவிகுளம் பீர்மேடு குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை தந்தைப்பெரியார்.

இந்த இடத்தில்தான் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மீது நமக்கு சந்தேகம் வலுக்கிறது.

அந்த நிலையிலும் கூட தன்னை நியாயப்படுத்துவதற்காக பெரியார் 26-01- 1956- அன்று ம.பொ.சிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்...

தட்சிணப் பிரதேசம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடப்பதாகவும், அதற்கு எதிராக நாம் கிளர்ச்சி செய்யவேண்டும் என்பது குறித்தான அந்த கடிதத்தில், தந்தை பெரியார் கிளர்ச்சிக்கு கொடுத்த விளக்கத்தை கீழே தருகிறேன்...

"எனது கிளர்ச்சி திட்டம் பலாத்காரம், உயிர்சேதம், நாசவேலை, பொருள் நஷ்டம், பொதுசன அசவுகரியம் ஆகிய காரியங்களுக்கு பெரிதும் இடமில்லாமல் இருக்கும்படியாக இருக்கும். எதிர்பாராமல் அவை நேரிடும் ஆனால் சமாளிக்கும்படி இருக்குமே தவிர ஓடும்படி இருக்காது"

இதுதான் பெரியார் கண்ட பெரும் கிளர்ச்சி.

தேவிகுளம் பீர்மேடு குறித்து
ம. பொ. சி க்கு கடிதம்...

விடுதலையில் குமுறல்...

அறிஞர்
அண்ணாவுக்கு எச்சரிக்கை...

மத்திய சர்க்காருக்கு எச்சரிக்கை...

அடடா
அவதாரங்கள் புல்லரிக்கிறது...

தமிழ்நாடு கேரளா கருநாடகம் ஒன்றிணைந்த
தட்சிணப் பிரதேசம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இதே தந்தை பெரியார்தான்...

இவைகளோடு ஆந்திராவையும் ஒருங்கிணைத்த திராவிட நாடு வேண்டும் என்று மும்பைக்கு சென்று, பாகிஸ்தான் கேட்ட முகமது அலி ஜின்னா விடம் நீட்டி முழக்கி னார்.

பார்ப்பானும் மலையாளியும் ஒன்று என்கிற கருத்தை தட்சிணப்பிரதேச பிரச்சினையில் முன்வைத்த தந்தை பெரியார்,,,எந்த அடிப்படையில் அவர்களையும் உள்ளடக்கிய திராவிட நாடு வேண்டும் என்று நீண்ட காலமாக கேட்டார் என்கிற கேள்வியோடும்... மன வேதனையோடு இன்றைய செய்தியை நிறைவு செய்கிறேன்.

வரலாறு கண்டிப்பாக நீளும்...



- ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

தமிழர் இழந்த நிலம்-5

                                 மிழர் இழந்த நிலம்-5 


(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)


மார்ஷல் நேசமணி யோடு தந்தை பெரியாருக்கு சீரான உறவு இருந்திருக்கும் என்றால்... கே எம் பணிக்கர் எப்படி தமிழகத்திற்குள் நுழைந்து இருக்க முடியும்...?

குளமாவது மேடாவது என்கிற காமராஜரின் வார்த்தை,தந்தை பெரியாரால் முன்மொழியப்பட்டு காமராஜரால் வழிமொழியப்பட்டது என்பதே சத்தியமான உண்மை. இதை மறுக்கிறவர்கள் மறுத்துப் பாருங்கள் பார்க்கலாம்.

ஒரு புறத்தில் மார்ஷல் நேசமணியோடும் நட்பு... இன்னொரு புறத்தில் கே.எம். பணிக்கருடனும் நட்பு...
பல வரலாற்றுக் கதாபாத்திரங்களை தன்னுடைய நாவல்களில் உலவ விட்ட ஷேக்ஸ்பியரின் கற்பனைக்குக் கூட எட்டாத ஒரு கதாபாத்திரம் தந்தைபெரியாருடைய கதாபாத்திரம்.

அவ்வளவு எளிதில் அவரது உள்ளக் கிடக்கையில் என்ன இருக்கிறது என்பதை எவராலும் கணித்து விட முடியாது. தனித்த சக்தியாக வெகுண்டெழுந்து நின்ற தந்தை பெரியாருடைய தயவு, அன்று காமராஜருக்கு இல்லை என்று சொன்னால், ராஜாஜி போன்ற ராஜதந்திரிகள் நிறைந்த நாட்டில், ஒன்பதரை ஆண்டுகள் தமிழக முதலமைச்சராக... அவரால் காலம் தள்ளி இருக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுந்து நிற்கிறது.

பச்சைத் தமிழன் என்று காமராஜருக்கு, தந்தை பெரியார் கொடுத்த ஒரே அடைமொழிக்காக, பச்சைத் தமிழகத்தின் பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள் ஆந்திராவிற்கும், கருநாடகத்திற்கும், கேரளாவிற்கும் தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை.

10-10-1955 அன்று மொழிவழி பிரிவினை குழுவின், அதிகாரப்பூர்வ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

மார்ஷல் நேசமணிக்கு தந்தை பெரியார் நெருங்கிய நண்பராக இருந்தார் என்ற கூற்று உண்மையானால்...
தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளாவிற்கு சொந்தம் என்று அறிவித்த மொழிவழி பிரிவினை குழுவை எதிர்த்து,அவரது வாயும், கையும் சும்மா இருந்திருக்குமா என்ன. மலையாளப் பணிக்கருக்கு எதிராக
"விடுதலை" அனலை கக்கி இருக்கும். ஆனால் இவற்றில் எதுவும் நடக்கவில்லை.

ஒருவேளை என் கண்களுக்குத் தெரியாமல் பணிக்கருக்கு எதிராக விடுதலையில் எங்கேனும்,பெரியார் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருப்பாரானால்,ஆயிரம் முறை தூக்கு மாட்டி செத்தாலும் பணிக்கரின் ஆன்மா சாந்தியடையாது.

தாம் செய்யும் செயல்களுக்கு மறுப்புத் தெரிவிக்க தாய்த் தமிழர் நிலத்தில், எவனும் பிறக்க மாட்டான் என்று கூட தந்தை பெரியார் நம்பி இருக்கக்கூடும், அந்தோ பரிதாபம். திரும்பும் திசையெல்லாம் மொபைலும் கையுமாக இளைஞர் பட்டாளம் தந்தை பெரியாரை இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறது.

ஆனையிரங்கல்
சின்னக்கானல்
பெரியகானல்
ராஜகுமாரி
ராஜாக்காடு
பூப்பாறை
கோவிலூர்
சூரியநல்லி
மூணாறு
பெரிய பாறை
தென்மலை
குண்டுமலை
ராஜமலை
கன்னிமலை
பனையூர்
அஞ்சு நாடு
பட்டிக்காடு
இரவிகுளம்
இடமலைக்குடி
பள்ளிவாசல்
பண்ணையாறு
நல்லதண்ணி
நடையாறு
எல்லப்பட்டி
உடுமஞ்சோலை
வண்டிதாண்டாபெரியாறு,
பின்னாளில் குமுளி என்றழைக்கப்பட்ட நீர்க்குமிழி மேடு,..

என அழகு செழித்த தமிழ்ப் பெயர்களை தாங்கி நின்ற ஊர்களை எல்லாம்...

பணிக்கரும்
பட்டம் தாணுபிள்ளையும் பற்றிக் கொண்டு போக காரணமாக இருந்தது எவராக இருந்தாலும்,அது எத்தனை பெரிய பிம்பமாக இருந்தாலும் என்றாவது ஒருநாள் உடைந்து நொறுங்கத்தான் செய்யும்.

அடிமையாகப் போனவன், அடிமையாகத்தான் வாழ வேண்டும் என்கிறதா வரலாறு...

ஒரு தேயிலைத் தோட்டத்தில்,அங்குள்ள கங்காணிகளாலும், முதலாளிகளாலும் அப்பாவி தொழிலாளிகளுக்கு என்ன நடக்கும் என்பது... பன்முக சிந்தனை படைத்த பெரியாருக்கு தெரியாமல் போனதுதான் விந்தை.

அதே கேரளாவில் வைக்கத்தில் நடந்த கோவில் நுழைவு போராட்டத்திற்காக சென்று, தன் பெயரைத் தக்க வைத்துக் கொண்ட பெரியார் அவர்கள்...

1954 முதல் 1956 வரை
தேவிகுளத்திலும், பீர் மேட்டிலும்...அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக, மலையாள அரசு கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளுக்கு எதிராக, பெரியார் செய்த பெருந்தொண்டு என்ன...?

கடந்த நூற்றாண்டின் மத்தியக்காலம் என்பது பெரியார் வலுவாக தமிழ் நிலத்தில் ஆளுமை செலுத்திய காலம்.அன்றைக்கு காந்திஜிக்கு எதிர்முனையில் நின்ற அம்பேத்கரே அளவளாவும் அளவிற்கு சக்தி பெற்ற
பெரியார், தேவிகுளம் பீர்மேடு வாழ் தமிழர்களுக்காக, செய்த அரும்பணி என்ன...?

தமிழ் வட்டெழுத்துக்கள் 28 மட்டும் இல்லாதிருந்தால் மலையாள மொழி என்றொரு மொழியே இன்று கிடையாது... தமிழிலிருந்து இரவல் வாங்கி தங்களுடைய மொழியை செப்பனிட்டுக் கொண்டவர்கள், நிலத்தையும் அபகடமாய் பறித்தார்கள் என்பது, செவிட்டு காதுகளுக்கு வேண்டுமானால் இனிக்கலாம்... உறைக்கும் காதுகளுக்கு அது உவப்பான செய்தி அல்ல.

சோசலிசம் என்கிற தத்துவத்தை தாங்கிநின்ற பட்டம் தாணுபிள்ளையும்...

பகுத்தறிவு என்கிற பரந்துபட்ட சிந்தனையின் பிதாமகர்களில் ஒருவரென பீற்றிக்கொண்ட தந்தை பெரியாரும்...

மேலைநாடுகள் நம்மை அடிமைப் படுத்தியது ஏன் என்பது குறித்து அக்கறை கொண்டு அலைந்து திரிந்த பணிக்கரும்...

பச்சைத் தமிழர் என்று இன்றளவும் நம்மால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் கருமவீரர் காமராஜரும்...

பெயர் சொல்ல விரும்பாத சில கத்துக்குட்டிகளும் தான்,,,

தேவிகுளம் பீர்மேடு பகுதிகள், தமிழர் நிலத்திலிருந்து அந்நியப்பட காரணமானவர்கள்...

வரலாறு நீளும்...


- ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

தமிழர் இழந்த நிலம்-4

                                             தமிழர் இழந்த நிலம்-4


(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)

தேவிகுளம் பீர்மேடு பகுதி கேரளாவோடு இணையவேண்டும் என்று அக்கறை காட்டிய திரு கே.எம். பணிக்கர் என்பவர், இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக அறியப்படுகிறார்.

கேரளாவிலுள்ள நாயர் மற்றும் நம்பூதிரி உள்ளிட்ட வந்தேறிகளால் ஒடுக்கப்பட்டு கிடந்த, ஈழவ சமூகத்தில் ஒரு உயர்குடும்பத்தில் பிறந்த இந்த காவலம் மாதவ பணிக்கர்... ஒரு பன்முக சிந்தனையாளன்.

வரலாற்றாசிரியராக, எழுத்தாளராக, இராஜதந்திரியாக, இதழாசிரியராக சிந்தனையாளராக, பேராசிரியராக,
தூதுவராக,
சட்ட வல்லுநராக அறியப்படும் இந்த பணிக்கர், எளிதில் எத்தனை பெரிய ஆளுமையையும் வசீகரம் செய்யும் தன்மை படைத்தவர்.பொதுவாக மலையாளிகளுக்கு இது கைவந்த கலை என்றாலும், கே எம் பணிக்கர் அதில் ஒரு படி மேலே நின்றார்.

இவர் எழுதிய

A Survey of Indian history

Asia and Western dominance

Malabar and Portuguese

The history of Kerala

உள்ளிட்ட நூல்கள் சாகாவரம் பெற்றவை.

இந்தியாவின் முதல் பிரதமரான
பண்டித ஜவஹர்லால் நேருவோடு இவருக்கு இருந்த தொடர்புதான், இவரால்  தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை எளிதாக கைப்பற்றுவதற்கு வழிவகுத்துக் கொடுத்தது.

நேருவோடு மட்டுமல்ல அவரின் உடன் பிறந்த தங்கையான விஜயலட்சுமி பண்டிட்டோடும் நெருக்கமாக இருந்தார் இந்த கே.எம். பணிக்கர்.

1500 லிருந்து 1945 வரையிலான ஆசிய நாடுகள் மீது மேற்கத்திய நாடுகளின் அதிகாரப் பரவலாக்கம் குறித்த இவருடைய தொகுப்புகள், வரலாற்றுச்சிறப்பு மிகுந்தவை.

ஆக்ஸ்போர்டில் சட்டம் பயின்ற இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியராகவும் சிலகாலம் இருந்தார்.

சீனத்து கதாநாயகன் மா சே துங் குடன் நெருங்கிய நட்புக் கொண்டு,
1950 முதல் 52 வரை சீனாவுக்கான இந்திய தூதராக இருந்த இந்த கே.எம். பணிக்கர், நாடு மொழிவழியாக பிரிக்கப்பட போகிறது என்பதை அறிந்ததும், அவசரஅவசரமாக இந்தியா திரும்பினார்.

காரணம் எந்த அடிப்படையில் நாடு பிரிக்கப்பட போகிறது என்கிற செய்தியை உணர்ந்ததே ஆகும்.

இன்றைக்கு டெல்லியை ஆட்டிவைக்கும் இதே மலையாள கூட்டம் அன்றும் அங்கே இருந்தது என்கிறது வரலாறு.

இந்த நிலையில் 22- 12-1953 ஆம் ஆண்டு மொழிவழி பிரிவினை கமிஷன் உருவாக்கப்பட்டது...

பீகாரைச் சேர்ந்த நீதியரசர் சையத் பசல் அலி தலைவராகவும்,,,

உறுப்பினர்களாக பண்டிட் எச்.என். குன்ஸ்ரு அவர்களும்...
கே.எம்.பணிக்கர் அவர்களும் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.

நாடு முழுவதும் மொழி அடிப்படையில், பிரிவினை, பேதமின்றி, மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதுதான் இவர்களுக்கான அஜெண்டா.ஆனால் அந்த வேலையை இவர்கள் சரியாகச் செய்தார்களா என்கிற கேள்வி இன்றளவும் எழுந்து நிற்கிறது.

அதனால்தான் நான் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறேன் மொழிவழி பிரிவினை என்பது ஒரு மோசடி என்று...

இன்றைக்கும் கர்நாடகத்தின் வட எல்லையில் உள்ள பெல்காம் மாவட்டம், தங்களை மராட்டியத் தோடு சேர்க்கச் சொல்லி, பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

அந்த பெல்காமின் பெயரைக்கூட கர்நாடக அரசு பெலகாவி என்று மாற்றி விட்டது. கூடுதலாக அங்கு ஒரு துணை சட்டமன்றத்தை யும் (வழிதான் சவுதா) கட்டி இருக்கிறார்கள். பெல்காமை தக்கவைக்க கர்நாடகம் ஆயிரம் முயற்சிகளை மேற்கொண்டாலும், மராட்டிய மாநிலத்தில் உள்ள சோலாப்பூருக்கும்- பெல்காமுக்கும் இடையிலான சாலைப் போக்குவரத்து, மாதத்தில் 10 நாட்கள் நிறுத்தும் அளவிற்கு சண்டை தீவிரம் அடைந்திருக்கிறது.

இந்தநிலை தேவிகுளம் பீர்மேட்டில் உள்ள தமிழர்களிடம் இல்லாத காரணத்தினால்தான், மலையாளிகளால் இன்னும் அங்கு வலுவாக ஆதிக்கம் செலுத்த முடிகிறது.

பச்சை தமிழன் ஒருவன் பெயரில்
பெரியகருப்பன் மேடு என்று இருந்த பீர்மேட்டை, எங்கோ பெரும்பாவூரிலிருந்து பிழைக்க வந்த ஒரு மலையாள முஸ்லிமான பீர்முகமது பெயரில்,பீர்மேடு என்று அழைக்கிறோம் என்று அவர்கள் கதை எழுதிய பின்னும் அதை மறுப்பதற்கு அங்கு நம்மவர்கள் உணர்வோடு இல்லை என்பதுதான் வேதனையான உண்மை.

இந்தக் குழுவின் தலைவரான திரு பசல் அலி அவர்கள், அவர் சார்ந்த பீகாருக்கும், மேற்குவங்கம் மற்றும் ஒரிசாவுக்கும் எல்லைத் தாவா வரும்போது, மிகவும் நேர்மையாக அந்த விவாதத்தில் கலந்து கொள்ளாது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

அது அவரது நேர்மை என்றால் கூட, மொழிவழி பிரிவினை குழுவின் விதியும் அவ்வாறுதான் இருந்தது.ஒரு உறுப்பினர், அவர் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கும், அண்டை மாநிலத்திற்குமான எல்லை பிரிவினை வரும்போது, சம்பந்தப்பட்ட உறுப்பினர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்பதுதான் விதி.

ஆனால் அதையும் மீறி தமிழக-கேரள எல்லை பிரிவினையின்போது, தைரியமாக கூட்டத்தில் அமர்ந்ததோடு, தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை கேரளாவோடு சேர்ப்பதற்காக, மிகப்பெரிய போராட்டத்தையே நடத்தினார்.

இதை குழுவின் தலைவர் திரு பசல் அலி அவர்களோ, அல்லது இது தவறு என்று அவரை அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நம்மவர்களும் அன்று தயாராக இல்லை.இந்த ஒற்றை நம்பிக்கையில்தான், மிகத் துணிச்சலாக தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில், எனக்கு ஏலக்காய் தோட்டம் இருக்கிறது... அதனால் அது கேரளாவிற்கு வேண்டும் என்றதோடு, தேவிகுளம் பீர்மேடு மட்டும் கேரளாவிற்கு வரவில்லை என்றால் கேரளா தலையில்லாத முண்டம் போல் ஆகிவிடும் என்று தன்னுடைய வாதத்தை முன்வைத்தார்.

இவருடைய வாதம்,பிரதானமாக நடந்து கொண்டிருந்த காலகட்டங்களில், அந்த வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, அதாவது  1954 மார்ச் மாதம் கேரளாவின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் பட்டம் தாணுபிள்ளை...

இயல்பிலேயே மொழிவெறியும், இனவெறியும் கொண்ட பட்டம் தாணுப்பிள்ளையினுடைய வரவு, எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல் ஆயிற்று.

கே.எம்.பணிக்கர் ஒருபுறம் மொழிவழி பிரிவினை குழுவில் தன்னுடைய வாதங்களை முன்வைத்து கொண்டிருந்தாலும், இன்னொரு புறத்தில் தமிழகத்தில் எவரை வளைக்கலாம் தனக்குச் சாதகமாக என்றும் ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் தான் திராவிட நாட்டிற்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்த வைக்கம் வீரர் அவருடைய கண்களில் படுகிறார்.உடனடியாக தேவிகுளம் பீர்மேடு எதற்காக கேரளாவிற்கு வேண்டும் என்பது குறித்தான கடிதம் ஒன்றை பெரியாருக்கு எழுதியதோடு,தங்களை சந்திப்பதற்கு எனக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார்.

உலகமெல்லாம் சுத்திவந்த கே.எம். பணிக்கருக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்து போவது என்ன பெரிய விடயமா...

சென்னை வந்தார், சென்னையிலிருந்து திருச்சி வந்தார்...
வந்த வேலை வெற்றிகரமாக முடிந்தது.

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே, கேரள முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பட்டம் தாணுபிள்ளை,அவசர அவசரமாக கோட்டயம் சிறையிலிருந்த அதிதீவிர குற்றவாளிகளை விடுதலை செய்ததோடு, அவர்களை ஒட்டுமொத்தமாக பீர்மேடு தாலுகாவில் குடியேற்றுவதற்கான அத்தனை வேலையையும் செய்து கொண்டிருந்தார்.

அன்றைக்கு தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் அத்தனை பேரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என்பதால், வாயில்லா ஜீவனாக, தேயிலை கம்பெனிக்காரனின் பிடியில் சிக்கி, வதைபட்டுக் கொண்டிருந்தார்கள்.

தமிழகச் சட்டமன்றத்தில் ஆரம்பத்தில் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்கு ஆதரவாக இருந்த மரியாதைக்குரிய சி. சுப்பிரமணியம் போன்றவர்கள், காமராஜருடைய நெருக்கடிக்கு பயந்து,ஒருகட்டத்தில் தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளாவிற்கு போவதை நியாயப்படுத்திய கதையும் நடந்தது.

அன்றைக்கு பட்டம் தாணுப்பிள்ளை முதல்வராக இருந்தபோது, திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத்தில்,மரியாதைக்குரிய மார்ஷல் நேசமணி தலைமையிலான திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 12.அந்தப் பன்னிரண்டு பேரும் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்காக திருவாங்கூர் -கொச்சி சட்டமன்றத்தில் எழுப்பிய உரத்த குரலைக் கூட, அன்றைக்கு தமிழக சட்டமன்றத்தில் பச்சை தமிழர்களால் எழுப்ப முடியவில்லை... அந்தோ பரிதாபம்.

இன்றைக்கு கேரள மாநில அரசின் வரி வருவாயில் 11.7 விழுக்காடு வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கிறது தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்கள்.

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, குமரி மாவட்டத்திலும், தேவிகுளத்திலும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டார் திருவிதாங்கூர் கொச்சி முதல்வர் திரு பட்டம் தாணுப்பிள்ளை அவர்கள்...

திருவிதாங்கூர் தமிழர் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்த தேவிகுளத்து தமிழர்களை அடித்து உதைத்தது கேரள காவல்துறை. தேயிலைத் தோட்ட முதலாளிகளும் பட்டம் தாணுபிள்ளையோடு கரம் கோர்த்துக் கொண்டார்கள்.

இந்த அத்துமீறல்களுக்கு எதிராக மூணாறு விரைந்த மார்ஷல் நேசமணி, அப்துல் ரசாக் போன்றவர்களின் கைகளில் விலங்கு மாட்டி, வீதிகளில் இழுத்துச் சென்றது பட்டம் தாணுப்பிள்ளையின் அரச கூலிப்படை.

மார்சல் நேசமணி அவர்களோடு மூணாறு சென்றிருந்த குப்புசாமி என்றொரு அப்பாவியின், செவிப்பறையை கிழித்தெறிந்தது ஒரு கும்பல். இந்த குப்புசாமிதான் பின்னாட்களில் இடுக்கி மலையகத்தில்
South Indian plantations workers Union எனப்படும் மாபெரும் தொழிற்சங்கத்தை வெற்றிகரமாக நடத்திய மனிதன்.

இந்தக் குப்புசாமியின் செவிப்பறையை கிழித்தது மலையாளிகள் அல்ல...

பச்சை தமிழனாக அறியப்பட்ட தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் கணபதியின் அடியாட்கள்... விட்டிருந்தால் இவர்கள் மார்சல் நேசமணியையும் கூட தாக்கி இருக்கக்கூடும்...

வரலாறு நீளும்...


- ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

தமிழர் இழந்த நிலம்-3

                                        தமிழர் இழந்த நிலம்-3

தேவிகுளம்-பீர்மேடு பறிபோன கொடுங்கதை...

(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)

வன வளம் மிகுந்த தேவிகுளம் பீர்மேட்டை கேரளாவின் பக்கம் தள்ளிவிட்டதில் பலருக்கு பங்கு இருக்கிறது.நம்முடைய பட்டறிவுக்கு அவர்களெல்லாம் பிம்பமாக எழுப்பிக் கட்டப்பட்டிருப்பதால்,,,
பகிரங்கமாக அவர்களைப் பற்றி யாரும் விவாதிக்கத் தயாராக இல்லை.

அதையும் மீறி
வெளிப்படையாக
விவாதித்தோம் என்றால், மாய பிம்பங்களும், மாயக்கண்ணாடிகளும் நொறுங்கி விழுந்து சிதறும் என்பதில் ஐயமில்லை.

நம்முடைய துரதிர்ஷ்டம் என்னவென்றால், மொழிவழி பிரிவினையில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு, கிட்டத்தட்ட 70,000 சதுர கிலோமீட்டர்களை, அண்டை மாநிலங்களுக்கு தள்ளிவிட்டது இன்னார்தான் என்று நம்மால் குற்றம்சாட்ட முடியாததுதான்...

மேற்கத்திய நாடுகளில் வரலாற்றை அச்சுப் பிசகாமல் எழுதுவார்கள்.1765-1783 காலகட்டங்களில், தன் தாயகமான இங்கிலாந்தை எதிர்த்து புரட்சி செய்த ஜார்ஜ் வாஷிங்டனுடைய அமெரிக்க புரட்சி, புள்ளி விவரத்தோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.1789 ல் நடந்த லூயி மன்னர்களுக்கு எதிராக நடந்த பிரஞ்சுப் புரட்சியைப் பற்றியும், காலவரிசைப்படி உங்களால் வாசிக்க முடியும்.

ஆனால் இந்த மண்ணில் பிரிட்டிஷ் காரர்களுக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது யார் என்பதிலேயே ஆயிரக்கணக்கான குழப்பங்கள் நீடித்துக்கொண்டிருக்கிறது.

1751 ல் உருவிய உடைவாளோடு பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக களத்தில் நின்ற,நெற்கட்டான் செவ்வல் பூலித்தேவரை, நரித்தனமாக பின்னுக்குத்தள்ளி, 1857 ல் நடந்த சிப்பாய் கலகத்தை முதல் இந்திய சுதந்திரப் போராக வரிந்துகட்டி அறிவித்திருக்கும் வட வர்களின் வரலாற்றுத் திருட்டால்... விக்கிப்பீடியாவில் வரலாற்றைத் தேடும் லட்சணத்தில்தான் இருக்கிறது நம்முடைய வரலாற்று அறிவு.

11- 10- 1955 ம் நாளன்று தினத்தந்தியில் ஒருவருடைய செவ்வி (பேட்டி) வந்திருந்தது...

 "தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்கு தமிழர்கள் தொழிலுக்காகத்தான் வந்தார்களே தவிர, நிலம் மலையாள நாட்டை சேர்ந்தது என்று சர்தார் பணிக்கர் என்னிடம் சொன்னார், நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன்" என்கிறார் நம்மால் பெரியார் என்று இன்றுவரை கொண்டாடப்படும் ஈ.வெ.ரா அவர்கள்.

கே.எம்.பணிக்கர் என்கிற அந்தக்கால மலையாளி சொன்னதை இன்று வரை அரசிதழில் ஏற்றிவைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது கேரள மாநில அரசு.

கிட்டத்தட்ட 140 ஆண்டுகளுக்கு முன்னால் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்குச் சென்ற தமிழர்கள், இன்றளவும் மலையாள அரசின் பதிவிதழில்,
Floating Labour என்றுதான் அழைக்கப்படுகிறார்கள்.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் மேற்கத்திய நாடுகளில் குடியேறிய ஈழத் தமிழ் உறவுகள், இன்று அந்த நாட்டின் பிரஜை ஆகிவிட்ட நிலையில், 140 ஆண்டுகளுக்கு முன்னால் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்கு சென்ற பச்சைத் தமிழர்கள், இன்றளவும் வந்து போகிற கூலிக்காரர்களாகவே காட்சியளிக்கிறார்கள்... மலையாள நாட்டின் கண்களுக்கு.

இன்றும் இடுக்கி மாவட்டத்தில் வாழும் ஒரு தமிழன், தனக்கு பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டுமானால்,1956 க்கு முன்பு அவனுடைய முன்னோர்கள் வாங்கிய இருப்பிடச் சான்றிதழ் வேண்டும். அது இல்லாமல் அவனால் பிறப்புச் சான்றிதழை பெற முடியாது.

உலகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசு அமைந்த கேரள நாட்டில் வாழும், ஒரு தமிழ்க் கூலித் தொழிலாளியின் நிலை இதுதான்.

விடயத்திற்கு வருகிறேன்...

கே .எம். பணிக்கர் எங்கள் நிலம் என்று என்னிடம் சொன்னார், நானும் ஆமாம் என்று சொல்லிவிட்டேன் என்று சொன்னவர் அன்றைக்கு முதலமைச்சராக இல்லை... ஒரு இயக்கத்தின் தலைவர் அவ்வளவே.

திரு கே.எம்.பணிக்கர் அவர்கள், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த திரு காமராஜர் அவர்களை சென்று சந்திக்காமல், எதற்காக திரு ஈ.வெ.ரா அவர்களை சந்தித்தார் என்கிற கேள்வி நெருப்பாய் என் நெஞ்சில் எழுந்து நிற்கிறது.

திரு பசல் அலி தலைமையிலான மொழிவழி பிரிவினை குழுவின் ஒரு உறுப்பினரான திரு கே.எம். பணிக்கர்,எந்த அடிப்படையில் திருச்சிக்கு வந்து, ரத்னவேல் தேவர் மாளிகையில் தங்கியிருந்த, திரு ஈ வெ ரா அவர்களை சந்தித்தார் என்கிற இன்னொரு கேள்வியும் மானத்தமிழர் வரலாற்றில் தொக்கி நிற்கிறது.

திரு கே.எம்.பணிக்கர் எவராக வேண்டுமானாலும் இருக்கட்டும்... அவருடைய கூற்றுக்கு விடைபகர வேண்டிய தேவை, திரு ஈ வெ ரா அவர்களுக்கு எங்கே வந்தது.

பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே, பாண்டிய மரபைச் சேர்ந்த பூஞ்ஞார் அரசு இன்றைய கோட்டயத்திற்கு அருகாமையில் உருவாக்கப்பட்டாயிற்று.

இன்றைய ஈராட்டுப்பேட்டை,
பாலா,
காஞ்சிரப்பள்ளி,
முண்டக்காயம்,
பாம்பனார்,
பீர்மேடு
வண்டிப்பெரியாறு
குமுளி
கூடலூர்
கம்பம் உத்தமபாளையம் வரை
பூஞ்சார் சமஸ்தானத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதிதான்.

இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு மூணாறு சுற்றுவட்டாரம் எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தேயிலை காடுகளை, பிரிட்டிஷ் வியாபாரியான தாமஸ் மன்றோ என்பவன் 1870 காலகட்டங்களில் குத்தகைக்குப் பெற்றது,திருவிதாங்கூர் சமஸ்தானத்திடமல்ல, பூஞ்சார் சமஸ்தானத்திடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அப்படி இருக்கையில் ஒரு தமிழ் மரபைச் சார்ந்த அரசன் ஆளக்கூடிய பூமிக்குத்தான்.... தமிழர்கள் 1870 காலகட்டங்களில் சென்றிருக்கிறார்கள். பிறகு எப்படி அவர்கள் Floating Labour ஆவார்கள்.

இதுபோக வரையாடுகளின் சொர்க்க பூமியான இராஜமலை அருகே இருக்கும் இடமலைக்குடியில் வாழும் முதுவான்கள் என்பவர்கள் ஆதித்தமிழர்கள் என்கிறது வரலாறு.எங்களுடைய ஆய்வுப்படி கிட்டத்தட்ட 600 ஆண்டு கால வரலாறு இடமலைக்குடி முதுவான்களுக்கு இருக்கிறது. அப்படியானால் தமிழர்கள் இடுக்கி மலையகத்திற்கு சென்ற காலத்தை,நேற்றுப் பிறந்த கே.எம். பணிக்கரால் ஒரு நொடியில் கணித்து விட முடியுமா என்ன..?

எந்த அரசுப் பதவியிலும் இல்லாத திரு ஈ.வெ.ரா அவர்கள்,,,தேவிகுளம் பீர்மேடு கேரளாவிற்கு சொந்தமானது எப்படியென்று எந்த அடிப்படையில் தீர்மானித்தார்...

கரும வீரர் காமராஜர் அவர்கள் தென் எல்லை போராளி திரு பி.எஸ். மணி அவர்களிடம் "குளமாவது மேடாவது எல்லாம் இந்தியாவில் தானே இருக்கிறது" என்று போகிற போக்கில் கூறிய கூற்றுக்கு பின்னால் இருப்பது திரு ஈ வெ ரா அவர்களா..

அல்லது பண்டித நேரு வா...

வரலாறு நீளும்...

- ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

தமிழர் இழந்த நிலம்-2

                                                  தமிழர் இழந்த நிலம்-2

 தேவிகுளம்-பீர்மேடு தட்டிப் பறிக்கப்பட்ட கொடுங்கதை...

(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)


காலையில்  யதேச்சையாகத்தான் ஆரம்பித்தேன்...இந்த ஓய்வு நேரத்தில் நம்முடைய விவசாய சங்க உறவினர்களுக்கு ஒரு வரலாறை சொல்லிவிட வேண்டும் என்று மனசு துடித்தது...

ஆனால் எனது சிந்தனையில் போன்சாய் மரங்களாக இருந்த நினைவுகள், தம்பிமார்களின் கேள்வியில்... ஆல மரமாய் எழுந்து நிற்கிறது.

தேசிய,
திராவிட அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுகளில் ஏதோ அருகருகே இருப்பது போல வந்து விழும் தேவிகுளமும், பீர்மேடு ஒன்றும் அருகருகே இல்லை.

பீர்மேட்டிலிருந்து தேவிகுளத்திற்கு செல்வதற்கு நீங்கள் வண்டிப் பெரியாறு,குமுளி, நெடுங்கண்டம், பூப்பாறை வழியாக 117 கிலோமீட்டரை கடக்க வேண்டும்.

அதோடு பழைய தமிழக எல்கை முடியவில்லை. தேவிகுளத்திலிருந்து மூணாறு நகருக்கு 8 கிலோமீட்டர். அங்கிருந்து சட்டமூணாறு வழியாக மறையூருக்கு 42 கிலோமீட்டர் பயணித்து அங்கிருந்து 13 கிலோ மீட்டர் பயணித்து சின்னாறு வனத்துறை சோதனைச் சாவடியை அடைந்தால்தான் பழைய தேவிகுளம் பீர்மேடு எல்கை முடிவடையும்.

அதாவது பீர்மேட்டில் ஆரம்பித்து தேவிகுளம் எல்லை வரையிலான பயண தூரம் மட்டும் 180 கிலோ மீட்டர்கள்.

நேர் வழியான இந்த 180 கிலோமீட்டர்கள் போக... மூணாறில் இருந்து டாப்ஸ்டேஷன் வழியாக வட்டவடை,கோவிலூருக்கு ஒரு ஐம்பத்தாறு கிமீ என நீளுகிறது பழைய தமிழகம்.

தென்மலை சோத்துப்பாறை குண்டுமலை என மூணாறு- உடுமலை சாலையிலிருந்து சற்று பிரிந்து வலது புறம் மேலே ஏறினால் அது ஒரு 22 கிலோமீட்டர்.

மூணாறில் இருந்து அடிமாலி செல்லும் சாலையில் உள்ள பள்ளிவாசல் வரை பழைய தமிழகம் தான்.

வளத்திற்கு சற்றும் பஞ்சமில்லாத வளம் கொழிக்கும் பூமி.

டாடா,
ஏவிடி,
கன்னிமாரா,
போப்ஸ்,
ஹாரிசன் மலையாளம் லிமிடெட்,
என ஆளையே முழங்கும் பெரிய தேயிலை தோட்ட கம்பெனிகளும், துண்டு துக்கடா கம்பெனிகளும் நிறைந்து கிடக்கிறது தேவிகுளம் பீர்மேடு தாலுகாவில்.

இந்த கம்பெனிகளில் பண்ணையார் ரத்தன் டாடா.KDHP (kannan Devan hills plantation) என அழைக்கப்படும் டாட்டா கம்பெனியினுடைய மொத்த பரப்பு மட்டும் 48,000 ஹெக்டேர்கள்.

இதற்கு அடுத்த இடத்தில் ஏ வி டியும், அதற்கு அடுத்த இடத்தில் ஹாரிஸன் மலையாளம் லிமிடெட்டும் வருகிறார்கள்.

எத்தனை கம்பெனிகள் வந்தாலும் தேயிலையை கொழுந்தாக எடுப்பதிலிருந்து, தேயிலையை பொட்டலமாக அனுப்புவது வரை அத்தனையையும் அச்சுப்பிசகாமல் செய்வது பச்சை தமிழர்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வருடத்தில் 6 மாதங்கள் மைனஸ் டிகிரி குளிரில் இருந்த மூணாறு மலையகத்தில் பணிசெய்ய... தமிழனைத் தவிர வேறு எவனுக்கும் ஆண்மையும், நெஞ்சுரமும் இருந்ததாக தெரியவில்லை.

இத்தனை பெரிய பரப்பை, எப்படி போகிறபோக்கில் கே.எம். பணிக்கரின் காலடியில் காமராஜராலும், தந்தை பெரியாராலும் தள்ளிவிட முடிந்தது என்பது எனக்கு தெரியவில்லை.

குளமாவது மேடாவது எல்லாம் இந்தியாவில்தானே இருக்கிறது என்று உதறித் தள்ளிவிட, தேவிகுளமும் பீர்மேடும், கொடுங்கையூர் குப்பை மேடு அல்ல.

அந்த மண்ணினுடைய வளத்தை மலையாளிகள் கண்ணுற்ற அளவிற்கு, நம்மவர்கள் கண்ணுறாததின் விளைவு, தேவிகுளம், பீர்மேட்டை தமிழகம் இழந்தது.

இன்றைக்கு மொத்த மலையாள நாடும் குடியேறும் இடமாக தேவிகுளமும், பீர்மேடும் மாறிவிட்டது.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலேயே, மறையூர் பகுதியில் தமிழர்கள் அடர்த்தியாக வாழ்ந்திருக்கிறார்கள்.

காந்தலூர், கீழாத்தூர், காரையூர், மறையூர், கொட்டகுடி  என்கிற ஐந்து தமிழர் கிராமங்களும், இன்றளவும் மறையூர் அஞ்சுநாடு என்று பெருமையோடு அழைக்கப்படுகிறது..

அங்கு உற்பத்தியாகும் வெல்லம் கேரளா முழுக்க ஏற்றுமதியாகும் அளவிற்கு விவசாய வளம் செறிந்த பூமி. ஆனால் அந்த காந்தலூரிலிருந்து எங்கேயோ இருக்கும் ஆலுவா விற்கு கோட்டயம் வழியாக தனியார் பேருந்துகள் இயங்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.

பி பி கே
பி எம் எஸ் எனும் தனியார் பேருந்துகள் இன்றளவும் இயங்கி வருகிறது. அதனுடைய நோக்கம் வெறும் போக்குவரத்து மட்டுமல்ல.

எப்படியாவது மலையாளிகளை மறையூர் பகுதிகளில் குடியேற்ற வேண்டும் என்கிற வெறி தான் அதற்கு காரணம்...

அதுபோல கேரளாவின் வர்த்தகத் தலைநகராக அறியப்படும் எர்ணாகுளத்தில் இருந்து...எங்கேயோ இருக்கும் டாப் ஸ்டேஷனுக்கு அருகாமையில் உள்ள கோயிலூருக்கு கேரள அரசு பேருந்து வர ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.

தமிழர்கள் ஆதிக்கம் பெற்று விடக்கூடாது,,, மறையூரும் வட்டவடையும், கோவிலூரும் முழுமையாக தமிழர்களுடைய கட்டுப்பாட்டில் போய்விடக்கூடாது என்பதற்காகவே, இந்தப் பேருந்துகள் மலையாளிகளை பத்திரமாக தமிழர் பூமியில் கொண்டு வந்து இறக்கியது.

அவர்களும் இன்றைக்கு நமக்கு சரிசமமாக வாழத் தலைப்பட்டு விட்டார்கள்.தமிழர்கள் மட்டுமே வெற்றி பெற்று வந்த மறையூர் பஞ்சாயத்து இன்றைக்கு மலையாளிகளுடைய கைகளுக்கு போய்விட்டது...

தமிழர்கள் மட்டுமே வெற்றி பெற்று வந்த கேரளாவின் மிகப்பெரிய பஞ்சாயத்தான வண்டிப்பெரியாறு, தமிழர் கைகளிலிருந்து மலையாளிகளுடைய கைகளுக்கு மாறி ஆண்டு 15 கடந்துவிட்டது.

இடுக்கி மாவட்டத்தின் மிகப் பெரிய ஏலக்காய் நகரமான வண்டன்மேடு, முன்னொரு காலத்தில் திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் கட்சி கொடி கட்டி பறந்த ஊர்.மார்ஷல் நேசமணியும் அப்துல் ரசாக்கும் நடைபயின்ற இடுக்கி மாவட்டத்து ஊர்களில் வண்டன்மேடும் ஒன்றாக இருந்தது...
இன்று நிலைமை மாறிவிட்டது.

வண்டன்மேட்டின் முதலாளிகள் மலையாளிகள்...

முதலாளிகளாக இருந்த தமிழர்கள் கூலிகள்...

பட்டம் தாணுபிள்ளை,
கே.எம். பணிக்கர்,
காமராஜர்,
ஈ.வெ. ராமசாமி நாயக்கர்,
தேவிகுளத்தின் முதல் தமிழ் சட்டமன்ற உறுப்பினரான கணபதி,
ரோசம்மாள் புன்னூஸ்,
பிரிட்டிஷ் நயவஞ்சகர்கள்,
கேரள காங்கிரஸ் துரோகிகள்...
மொழிவழி பிரிவினை குழுவின் அறிக்கையை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்ட வடநாட்டு மார்வாடிகள்...

என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது விவாதிப்பதற்கு...

விவாதிப்போம்...

தேவிகுளம் பீர்மேடு மட்டுமல்ல... கிட்டத்தட்ட 1400 சதுர கிலோமீட்டர் பரப்பை தமிழகம் கேரளாவிடம் அனாதியாய் இழந்திருக்கிறது...

வரலாறு நீளும்...


- ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

தமிழர் இழந்த நிலம்-1

                                              தமிழர் இழந்த நிலம்-1

(இக்கட்டுரையை எழுதியது:

ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)

இது ஓய்வுக் காலம் என்பதால் பல சுவராசியமான வரலாறுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்...

சுற்றுலாத் தலங்களாக இன்று அறியப்படும் பல்வேறு இடங்களுக்கு பின்னால் பல கொடூரமான கதைகள் இருப்பது எவருக்கும் தெரிவதில்லை.

அவற்றைக் குறித்த பல புரிதல்களை தமது தோழர்களுக்கு உருவாக்குவதற்காகவே இந்தத் தொடர்...

அந்த வரிசையில்
எனக்கு எப்போதுமே பிடித்த மூணாறில் இருந்து கதைகளை ஆரம்பிப்போம்...

மூணாறு-துயரின் உச்சம்...

கடல் மட்டத்திலிருந்து 4700 அடி உயரத்தில் அமைந்திருக்கும் மூணாறு இன்றைக்கு ஒரு சர்வதேச சுற்றுலா தலம். இந்த சுற்றுலா தலத்திற்கு தமிழகத்திலிருந்து பிரதானமாக இரண்டு சாலைகள் இருக்கிறது.

ஒன்று தேனி மாவட்டத்திலுள்ள போடியில் இருந்து போடிமெட்டு, பூப்பாறை, ஆனையிறங்கல், லாக்காடு, தேவிகுளம் வழியாக மூணாறு செல்லும் சாலை.

இந்தச் சாலை ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். தனுஷ்கோடியில் இருந்து ராமேஸ்வரம் இராமநாதபுரம்  பரமக்குடி மதுரை தேனி போடி போடிமெட்டு தேவிகுளம் மூணாறு அடிமாலி வழியாக கொச்சி செல்லும் சாலை ஆகும். எண்- 49.

இன்னொன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக... சின்னாறு, மறையூர், சட்டமூணாறு, வாகுவாரை தலையாறு, பெரிய பாறை வழியாக மூணாறு செல்லும் சாலை...

இரண்டுமே ஆபத்தான சாலைகள் என்றாலும் உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் பகல் நேரத்தில் கூட நாம் யானைகளையும் காட்டுமாடுகளையும் காண முடியும்.

ஆனால் போடிமெட்டிலிருந்து மூணாறு செல்லும் வரை, இரண்டு இடங்களில் மட்டுமே யானைகளை காண்பதற்கு வாய்ப்பு இருக்கிறது ஒன்று ஆனையிரங்கல், இரண்டாவது தேவிகுளத்திற்கு முன்பாக ஒரு இடம்.

போடியில் இருந்து போடி மெட்டு சாலை போடுவதற்கு முன்பாக...

தமிழர்களுடைய பயணம், போடியில் இருந்து முந்தல், குரங்கணி சென்று அங்கிருந்து கால்நடையாக டாப் ஸ்டேஷன் செல்வது.

டாப் ஸ்டேஷன் சென்று அங்கிருந்து எல்லப்பட்டி, மாட்டுப்பட்டி கிராம்ஸ்லேண்ட் வழியாக மூணாறை அடைவது.1870 காலகட்டங்களில் தமிழகத்திலிருந்து தேயிலைத் தோட்டத் தொழிலுக்காக பிரிட்டிஷ்காரர்களால் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்ட பாதை இதுதான்.

குரங்கணியிலிருந்து டாப் ஸ்டேஷன் வரை வளைந்து நெளிந்து கிட்டத்தட்ட 18 கிலோ மீட்டர்கள் செல்ல வேண்டும்... அங்கிருந்து 38 கிலோமீட்டர்கள் சென்றால் மூணாறை அடையலாம்.

இந்தப் பாதை வழி நெடுக யானைக் காடுகள்தான்.ஆனால் நீண்ட காலமாக மூணாறு மலையகங்களில் இன்றளவும் வாழும் அப்பாவித் தமிழர்கள், இந்தப்பாதையைத் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த டாப் ஸ்டேஷனில் இருந்து மேற்கு நோக்கி சென்றால் 38 வது கிமீ ல் மூணாறும், வடக்கு நோக்கி சென்றால் 10 கிமீ ல் கோவிலூர், வட்டவடை, கொட்டக்கம்பூர் உள்ளிட்ட 22 மலை கிராமங்கள் வருகிறது.

அதிர்ஷ்டவசமாக இந்த 22 மலை கிராமங்களில் வாழும் தமிழர்களும், தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் அல்ல, மாறாக பிரிட்டிஷ்காரர்கள் காலத்திலேயே சொந்தமாக பட்டா பெற்று, பட்டா நிலத்தில் விவசாயம் செய்பவர்கள்.

இந்த வழியாக இரண்டு இணைப்புச் சாலைகள் இருக்கிறது.

தமிழ் விவசாயிகள் நிறைந்த
கொட்டக்கம்பூரிலிருந்து 28 கிலோ மீட்டர்கள் நடந்தால், பேரிஜம் ஏரியை அடைந்து அங்கிருந்து கொடைக்கானலுக்கு சென்றுவிட முடியும்...

இந்தச் சாலைக்கு பெயர் -எஸ்கேப் ரோடு-.

கோவிலூரிலிருந்து ஒரு மலை ஏறி இறங்கினால், உடுமலைப்பேட்டை மூணாறு சாலையில் இருக்கக்கூடிய மறையூருக்கு சென்று விட முடியும்...காந்தலூர்  வழியாக.

இது குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்.

இதுபோக குமுளியிலிருந்து உடுமஞ்சோலை, நெடுங்கண்டம், சாந்தம்பாறை வழியாக மூணாறுக்கு வரும் பாதை,,, போடி மூணாறு சாலையில் இருக்கும் பூப்பாறையில் வந்து சேர்கிறது.

இன்னொரு பாதை கொச்சியில் இருந்து கோதமங்கலம், அடிமாலி வழியாக மூணாறுக்கு வருகிறது.
சர்வதேச சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் சாலை இதுதான்.

இப்படியாக இன்று சாலை மார்க்கமாக மூணாறை எளிதாக நம்மால் அடைந்துவிட முடியும். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியில்லை.மனிதர்கள் என்றால் கால்நடையாக செல்ல வேண்டும். பொருள்கள் என்றால் கழுதையில் ஏற்றி சென்றிருக்கிறார்கள்.மாட்டு வண்டியிலும்  பொருள்கள் நீண்ட காலமாக போடியில் இருந்து மூணாறுக்கு ஏற்றிச் செல்லப்பட்டு இருக்கிறது.

இப்போது குமுளியில் இருந்து உடுமஞ்சோலை,நெடுங்கண்டம் வழியாக பூப்பாறை வரை வந்து சேரும் சாலை 1968 வரை இல்லை.

திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பும் ஒரு மலையாளி, பீர்மேடு, குமுளி வழியாக கம்பம் போடி வந்து, போடி மெட்டு வழியாகவே செல்ல முடியும்.பிறகு என்ன யோக்கியதையில் தேவிகுளத்தையும் பீர்மேட்டையும் மலையாளிகள் சொந்தம் கொண்டாடினார்கள் என்பது இன்றளவும் எனக்கு வியப்பளிக்கக்கூடிய செய்தியாகும்.

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட கடந்த இந்த தேவிகுளமும், பீர்மேடும் நம் கையை விட்டு போனதினால், இன்றைக்கு கிட்டத்தட்ட 11.7 விழுக்காடு வரி வருவாயை தமிழகம் இழந்திருக்கிறது.

கூடுதலாக 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள். வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கும் மூணாறு தமிழர்களின் கதையை தொடர்ந்து பார்ப்போம்...


ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

சனி, 25 ஏப்ரல், 2020

தமிழ்ச்சுவடிகள்

( திரு. அண்ணாமலை சுகுமாரன் அவர்களின் முகநூல் பதிவு இது


#உலகிலேயேஅதிகமான தமிழ்ச்சுவடிகள்# 

உலகிலேயே அதிகமான தமிழ்ச் சுவடிகள் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள்  நூலகத்தில்தான் உள்ளது. இங்கு, 26 லட்சம் ஓலைச்சுவடிகளை கொண்ட, 72,748 சுவடி கட்டுகளும், 25,373 ஆய்வு நூல்களும் உள்ளன

பலரும் ஓலைச் சுவடிகள் என்றதும் தஞ்சை சரபோஜி நூலகத்தையே எண்ணுவர் .ஆயினும் உண்மை சற்று ஆழத்தில் அறியப்படாமலேயே எப்போதும் இருக்கிறது .
இந் நூலகம் ஆராய்ச்சிக் கருவூலமாகத் திகழ்வதைக் கருத்திற்கொண்டு முனைவர் சு.சௌந்தரபாண்டியனின் முயற்சியால் ’அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்’ என்று பெயர் மாற்றப்பட்டுத் தற்போது இப்பெயரிலேயே இது இயங்கிவருகிறது.

இம் மையத்தில் தற்போது தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பாரசீகம், அரபு, உருது, சிங்களம் ஆகிய மொழிகளிற் சுவடிகள் உள்ளன. சுவடிகளில் ஓலைச்சுவடிகளும் தாட் சுவடிகளும் அடங்கும்.இது முழுக்க முழுக்க மாநில அரசு நிறுவனமானமாகும்
காலின் மெக்கன்சி (1754-1821), லேடன் (Dr.LeYdan), சி.பி.பிரௌன் (Mr.C.P.Brown) ஆகிய மூவரின் தொகுப்புக்களே இந் நூலகம் உருவாவதற்கு ஆதாரமாகும். இம்மையத்தில் இலக்கியம், இலக்கணம், வரலாறு, தத்துவம், அறிவியல், வானியல் முதாலன பிரிவுகளைச் சேர்ந்த சுவடிகள் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திர மாநில வரலாறுகளைக் கூறும் கைபீதுகளும் (Kaifyats) இருக்கின்றன.
காலின் மெக்கன்சி (Colin Mackenzie, 1754 – 8 மே 1821) ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்காட்லாந்திய இராணுவ அதிகாரி. 1815 ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் முதல் தலைமை மதிப்பீட்டாளர் ஆனார்.

மெக்கன்சி, தொல்பொருள் சேகரிப்பு மற்றும் ஒரு கீழ்த்திசை நாட்டு ஆர்வலர்.ஆரம்பத்தில் தனிப்பட்ட ஆர்வத்தாலும் பின்னர் மதிப்பீட்டாளர் பணியின் பொருட்டும் தென்னிந்தியாவின் சமயம், செவிவழி வரலாறு, கல்வெட்டுகள் முதலியவற்றை உள்ளூர் உரைபெயர்ப்பாளர்களையும் அறிஞர்களையும் பயன்படுத்திப் பட்டியலிட்டார். 1799 ஆம் ஆண்டு திப்பு சுல்தானை ஆங்கிலேயர்கள் வென்ற பிறகு மைசூர் வட்டாரத்தை மதிப்பிட பணிக்கப்பட்டார்.

மைசூர் வட்டாரத்தின் நிலப்பரப்பு விளக்கப்படங்கள், குறிப்புகள், தொல்பொருள் சிறப்புமிக்க இடங்கள் முதலியவற்றைக் கொண்ட நில வரைபடங்களை முதன்முதலாக உருவாக்கினார். ஆயிரக்கணக்கான சுவடிகள், கல்வெட்டுகள், மொழிபெயர்ப்புகள், நாணயங்கள் மற்றும் ஓவியங்களைக் கொண்ட அவரது திரட்டுகளை இந்திய அரசு நூலகம் அவரது இறப்பிற்குப் பின் கையகப்படுத்தியது. அவரது திரட்டுகள் இந்திய வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள இன்றியமையாத சான்றுகளாகத் திகழ்கின்றன.
சுவடிகளைக் கொண்டு ஆராய்ச்சிகள் 5தற்போது அரிதாகவே நடைபெற்றுவரும் நிலையிலும் இம்முயற்சி முற்றிலும் மானுடவியல் துறைகளில் முழுமையான தரவுகளாகப் பயன்படுத்தப்படாத சூழலிலும் ‘மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடிமக்கள்’ என்ற தலைப்பில் தஞ்சைத் தமிழ் ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர்  ம.இராசேந்திரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சியே நூலாக்கம் பெற்றுள்ளது.   அவரின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழகமெங்கும் ஓலைச் சுவடிகள்  தேடும் பணி நடைபெற்றது .அதில் பெரும் பங்காற்றும் நல்வாய்ப்பும் எனக்கு கிடைத்தது

தென்னிந்திய மொழி மற்றும் வரலாறு குறித்த ஆய்வுகளில் எல்லீஸ், கால்டுவெல் போன்ற குறிப்பிடத் தக்க சிந்தனையாளர்களில் ஒருவர்தான் ஐரோப்பியரான கர்னல் காலின் மெக்கன்சி என்ற ஸ்காட்லாந்து நாட்டவர். இவர் இந்தியாவில் வட இந்திய வரலாறு பெறுகின்ற முக்கியத்துவத்தைப் போன்று தென்னிந்திய வரலாறு கவனம் பெறாத சூழலில் தென்னிந்திய வரலாறு குறித்து பல்வேறு ஆவணங்களைப் பல்வேறு உதவி யாளர்களின் துணைகொண்டு தொகுத்தவர். தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த இவரது ஆவணத் தொகுப் பானது 1816இல் தொடங்கப்பட்டுள்ளது. இவர் 1783இல் கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு வந்தவர். இவர் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி நடத்திய போர்களில் பங்கு பெற்ற தோடு பல்வேறு பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் முதலில் சென்னை மண்டலத்திற்கும் பின்பு அனைத்து இந்தியாவிற்குமான முதல் தலைமை நில ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெற்றார். இவர் இத்தகைய பணிகளுக்கிடையேதான் தொல்பொருள் களைச் சேகரிக்கும் பணியை மேற்கொண்டார். இவர் சேகரித்தவற்றுள் கல்லிலும் செம்பிலுமாக இடம் பெற்றுள்ள 3000 சாசனங்களும் 15 மொழிகளைச் சேர்ந்த 1568 சுவடித் தொகுப்புகளும் 8076 கல்வெட்டுகளும் 2630 பாறை ஓவியங்களும் 78 வரைபடங்களும் 6218 நாணயங்களும் 102 படிமங்களும் அடங்கும் என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு தொகுக்கப்பட்ட மெக்கன்சியின் சுவடிகளில் 1534 சுவடிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவடிகளாகும். இவை இலக்கியம், வரலாறு, பண்பாடு, வாழ்க்கைமுறை, சாதியமைப்பு, அரசர்கள், பாளையக் காரர்கள், பழங்குடி மக்கள் பற்றிய செய்திகளை உள்ளடக்கியது. இவற்றுள் தமிழகப் பழங்குடி மக்கள் பற்றிய 16 சுவடிகளை ஆசிரியர் இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ளார். இவற்றுள் 11 மூலச் சுவடி களும் 5 படியெடுக்கப்பட்ட சுவடிகளும் அடங்கும். இச்சுவடிகளில் இடம்பெற்ற குறும்பர், வேடர், இருளர், ஏனாதியர், குறவர், வில்லியர், கரையர், பட்டணவர் லம்பாடியர், மலையரசர், குண்ணுவர் போன்ற பழங்குடி மக்கள் குறித்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற் கொண்டு தொகுக்கப்பட்ட விவரங்களே இங்கு நூலாக்கம் பெற்றுள்ளது.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்கால மற்றும் பத்தொன் பதாம் நூற்றாண்டின் தொடக்கால சேகரிப்புகள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அட்டவணைப்படுத்தும் பணியை ஐரோப்பியச் சமூகம் செய்தது. ஆனால் அவை முழுநிறைவாக நடை பெற்றதாகக் கூறமுடியாது. இருபதாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் தமிழ்ச்சூழலில் மெக்கன்சி சேகரிப்புகள் ஆவணப்படுத் தப்பட்டன.
-           மெக்கன்சியின் கல்வெட்டுக்களை ‘தென்னிந்திய கோயிற் சாசனங்கள்’ எனும் பெயரில் பதிப்பித்த ஆய்வாளர் தி.நா.சுப்பிரமணியன்

இப்போது, 2,400 சுவடிக் கட்டுகளில் உள்ள 3 லட்சம் ஓலைச்சுவடிகள் எண்மப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து ஓலைச்சுவடிகளும் எண்மப்படுத்தப்பட்டு வெளியிடப்படும்'' என தொல்லியல் துறை ஆணையர் தா.கார்த்திகேயன் கூறினார்.
2015 ஜனவரி அன்று நடைபெற்ற விழாவில் கூறியுள்ளார் .
எண்மப்படுத்தப்பட்ட (டிஜிட்டல்மயமாக்கப்பட்ட) மூன்று லட்சம் ஓலைச்சுவடிகளை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி இணையதளத்தில் அன்று  வெளியிட்டார்.
தொல்லியல் துறையின் www.tnarch.gov.in என்ற இணையதளத்தில் நிகண்டு, இலக்கண விளக்கம், தொல்காப்பியம், நன்னூல், பன்னிரு பாட்டியல் உள்ளிட்ட ஓலைச்சுவடிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்-ஆய்வு மையத்தில் உள்ள 72,648 சுவடிக் கட்டுகளில் 26 லட்சம் ஓலைச் சுவடிகளையும், 25,373 ஆய்வு நூல்களையும் கொண்டிருக்கிறது.

""இப்போது,சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள்  நூலகத்தில் உள்ள 2,400 சுவடிக் கட்டுகளில் உள்ள 3 லட்சம் ஓலைச்சுவடிகள் எண்மப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து ஓலைச்சுவடிகளும் எண்மப்படுத்தப்பட்டு வெளியிடப்படும்'' என தொல்லியல் துறை ஆணையர் தா.கார்த்திகேயன் கூறினார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுற்றுலா, பண்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரா.கண்ணன் பேசியது:

இந்த ஓலைச்சுவடிகளை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடலாம். பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் ஓலைச்சுவடிகளுக்கு உரையெழுதி வெளியிடுவார்கள். அந்த உரைகளின் அடிப்படையிலேயே அனைத்து ஆய்வுகளும் நடக்கும். ஓலைச்சுவடிகளைப் பார்த்து யாரும் புதிதாக ஆய்வு செய்யவில்லை. ஆனால், இப்போது ஓலைச்சுவடிகளையே இணையதளத்தில் வெளியிடுவதால் யார் வேண்டுமானாலும் ஓலைச்சுவடிகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை நேரடியாகப் படித்துத் தெரிந்துகொள்ளலாம் என்றார் அவர்.

தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் பேசியபோது, ""இந்த 26 லட்சம் ஓலைச்சுவடிகளை எண்மப்படுத்தி வெளியிட்டால், புதிதாக இணையதளத்தில் ஆய்வாளர்களை உருவாக்க முடியும். இது நவீன காலத்தில் மிகப்பெரிய தமிழ்க் களஞ்சியமாக விளங்கும்'' என்றார் அவர்.
உலகின் முதல் இணைய சுவடிகள் நூலகம் என்ற பெருமையை பெற்றுள்ளது, அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம்.

இவாறே நானும் தனிப்பட்ட முறையில் 2018 வரை எனது குழுவால்  சேகரிக்கப்பட்ட சுவடிகளை
www .tamilsiddharsuvadigal .com எனும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளேன் .இதைப்பயன்படுத்தி அந்த சுவடிகளில் பொதிந்துள்ள அரி ய செய்திகளை அறியலாம், பிறரும் அறி யச் செய்யலாம் சுவடிகள் பேணப்பட்டு பதிவுக்குப்பின் வைத்திருந்தவர்கள் வசமே  ஒப்படைக்கப்பெற்றது .எதோ அடியேனின் ஒரு சிறிய தமிழ்த் தொண்டு !

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள்  நூலகத்தில்தான் உள்ளஅனைத்து ஆவணங்களையும், ஸ்கேன் செய்து, இணையதளத்தில் வெளியிட தொல்லியல் துறைமுடிவு செய்தது. அதன் அடிப்படையில், எல்காட் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், ஓலைச்சுவடிகளை, லெமன்கிராஸ் எண்ணெய், சிட்ரெனெல்லா எண்ணெய், கார்பன் உள்ளிட்டவற்றை கொண்டு பதப்படுத்தி ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்து வருகிறது, தொல்லியல் துறை.

இந்த ஆவணங்கள், 600 டி.பி.ஐ., கொண்ட, டிப் வகை வண்ணப் படங்களாக மாற்றப்பட்டு, பி.டி.எப். வடிவத்தில், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை மூன்று லட்சம் பக்கங்களுக்கு மேல் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. அவை, http:/www.tnarch.gov.in என்ற இணையதளத்தில், பதிவேற்றப்பட உள்ளன.
இந்த செய்திகள் தினமணி நாளிதழில் 2015 பிபரைவரி 01 அன்று வெளிவந்தது .மேலும் இந்த கட்டுரையில் இடம்பெற்ற செய்திகள் பலவும் இணையத்தில் தேடி தொகுக்கப்பட்டவை .தற்போது நண்பர்களின் நினைவூட்டலுக்காக மீண்டும் இதை தொகுத்து வழங்குகிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
12/8/19

முயற்சிக்கவும்

முகநூலில் படித்தது;


கேள்வி:


முயற்சிக்கவும் என்று சொல்வது சரியா?

அல்லது முயற்சி செய்யவும்  முயலவும் என்று தான் சொல்ல வேண்டும்?

அப்படி எனில் கீழுள்ள சொற்கள்?

அனுபவிக்கவும்
அருள் பாலிக்கவும்
அன்பே இறுக்கமாய் என்னை அணைக்கவும்
தருவிக்கவும்
எடையை குறைக்கவும்



செ.இரா.செல்வகுமார் அவர்களின் பதில்:

///முயற்சிக்கவும் என்று சொல்வது சரியா?///

தவறு.

முயல் என்பது வினை. முயல்கின்றேன், முயலவும் முயலவேண்டும் என்றெல்லாம் வரலாம்.
முயற்சி என்பது பெயர்ச்சொல். உணர்ச்சிக்கிறேன். வளர்ச்சிக்கிறேன் என்றெல்லாம் சொல்வதில்லை.
உணர், வளர் என்பன வினைச்சொற்கள்.

நீங்கள் தந்துள்ள சொற்கள் பல விதமானவை!!

அணைக்கவும் என்பது அணை > அணைக்க > அணைக்கவும்
தருவி என்பது பிறவினை. தா என்பது தன்வினை.
தருவிக்கவும் என்பது தருவி என்னும் பிறவினையில் இருந்து பிறந்தது. வெறும் -க்கவும் என்பதை மட்டும் பார்க்காதீர்கள். வினை என்ன வினைவடிவம் என்ன
என்று பாருங்கள்.

முயற்சி என்பது வினை அன்று. பெயர்ச்சொல்.

குறை என்பது வினையும் ஆகும் பெயர்ச்சொல்லும் ஆகும். ஆனால் முயற்சி அப்படியானது அன்று.

உணர்ச்சிக்கவும் வளர்ச்சிக்கவும் என்பீர்களா? பயில் > பயிற்சி (பெயர்ச்சொல்).  பயிலவும், பயிற்சி செய்யவும் என்பன சரி. பயிற்சிக்கவும் என்பது தவறு இதுபோலவே முயற்சிக்கவும் என்பதும் தவறு.

உயர் என்பதில் இருந்து உயர்ச்சி என்றும் ஒரு பெயர்ச்சொல் உண்டு. இதனை உயர்ச்சிக்கிறேன் எனலாமா? கூடாது. உயர்கிறேன். உயரவும், உயரவேண்டும் என்றெல்லாம் சொல்லலாம். பெயர்ச்சொல்லில் இருந்து இப்படி ஆக்கக்கூடாது.

இந்தியம் என்பது பொய்மை

இந்தியம் என்பது பொய்மை
==========================
இந்தியன் என்றால் என்னது தம்பி?
===============================

சாதியும் இருக்கும்;
மதமும் இருக்கும்;
சாத்திரம் மக்களை
வேறெனப் பிரிக்கும்!

மோதலும் இருக்கும்;
முதலாளி இருப்பான்;
முன்னேற்றம் சிலர்க்கே
வாய்ப்பாக இருக்கும்!

குந்தியே தின்பான்
ஒருவன்; மற்றவன்
குடல்வற்றிச் சாவான்;
இவற்றிடை யாவரும்

இந்தியன் என்றால்
என்னது தம்பி?
எல்லாரும் சம்மென்றால்
எப்படித் தம்பி?
கொள்ளையன் ஆள்வான்;
கொடுமைகள் செய்வான்;
கொடுக்கும் உரிமைகள்
கொடாது தடுப்பான்!

வெள்ளையன் ஆண்டதும்
வெறியர் ஆள்வதும்
வேறுபா டின்றி
விளங்கிடும் தம்பி!

முந்திய ஆட்சியை
அடிமைஎன் றார்கள்!
முன்னினும் இவர்கள்
அடிமைசெய் தார்கள்!

இந்தியன் என்றால்
என்னது தம்பி?
எல்லாரும் சமமென்றால்
எப்படித் தம்பி?
========================
-பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1988

இந்திக் கோட்டையை

இந்திக் கோட்டையைச் சுக்குநூ றாக்குக!
===================================
இந்தி என்னும் இரும்புக் கோட்டையை
இடித்துச் சுக்குநூ றாக்குக! அங்கே
செந்தமிழ்க் கோட்டையைச் செழிப்புடன் எழுப்புக!
சிறுமைச் சாதி மதங்களை அகற்றுக!
சொந்தமென் றொருநிலம் தமிழருக் காக்குக!
சோர்வையும் அடிமைத் தனத்தையும் விலக்குக!
இந்தவோர் கொளகையில் தமிழினம் இளைத்தால்
எந்தமிழ் இருக்கும்; இனமிருக் காதே!
=======================================
- ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1982
=======================================

பேசுதல்

வகையறிந்து தமிழ் பேசுவோம்!
(What’s up-ல் வந்தது)
—————-
நம் எண்ணங்களைப் பிறருக்கு எடுத்துரைக்க உதவும் தொடர்புக் கருவியே பேசும் கலை. அத்தகைய பேசுதலைக் குறிக்க நம் தமிழில் உள்ள பெயர்கள் பல்வகையாகும். ஒவ்வொரு சூழலுக்கும் இணையாக நுண்ணிய வேறுபாடுகளோடு தமிழில் சொற்கள் வழங்கப்பட்டுள்ளன.

1. பேசுதல்* என்பது சொல்லும் தகவலின் பொருள் கெடாமல் ஒரு மொழியிற் ஒழுங்கச் சொல்லுதல் என பொருள்படும்.

2. அறைதல்* என்பதோ ஓங்கிப் பேசுதல் அல்லது உரக்க வன்மையாகச் சொல்லுதல்.

3. இயம்புதல்* என்பது இனிமையாகச் சொல்லுதல் அல்லது இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்.

4. இசைத்தல்* என்பது கோவையாகச் சொல்லுதல்.

5. உரைத்தல்* என்பது ஒன்றை விளக்கிச் சொல்லுதல்.

6. கூறுதல்* என்பது கருத்துக்களைக் கூறுபடுத்தி அல்லது பாகுபடுத்திச் சொல்லுதல்.

7. சாற்றுதல்* என்பது பலரறிய ஓர் தகவலை அறிவித்தல்.

8. நவிலுதல்* என்பதோ நாவினால் பலகால் ஒன்றை ஒலித்துப் பயிலுதல்.

9. நுதலுதல்* என்பது ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.

10. நுவலுதல்* என்பதோ ஒரு நூலின் பொருளடக்கத்தை எடுத்துரைத்தல் ஆகும்.

11. பகர்தல்* என்பது பண்டங்களின் விலை கூறுதல்.

12. பறைதல்* என்பதோ ஒன்றை உரக்கத் தெரிவித்தல்.

13. பன்னுதல்* என்பது பணியின் நிமித்தமாகய் விவரித்துச் சொல்லுதல்.

14. புகலுதல்* என்பதோ விரும்பிச் சொல்லுதல்.

15. புலம்புதல்* என்பது தனிமையில் தனக்குத் தானே சொல்லுதல்.

 16. மாறுதல்* என்பது திருப்பிச் சொல்லுதல் அல்லது  மறுமொழி கூறுதல்.

17. மொழிதல்*  என்பது சொற்களை நன்றாய்த் திருத்தமாய்ச் சொல்லுதல்.

18. பொழிதல்* என்பது இனிமையாகப் பேசுதல்.

19. இயம்புதல்* என்பது அழுத்தமாகப் பேசுதல்.

20. அருளுதல்* என்பது தவத்தில் சிறந்தோர் பேசுதல்.

21. அசைத்தல்* என்பது அசை பிரித்துச் சொல்லுதல்.

22. உளறுதல்* என்பது அச்சத்தினால் ஒன்றிற்கு இன்னொன்றைச் சொல்லுதல்.

23. என்னுதல்* என்பது ஒரு செய்தியைச் சொல்லுதல்.

24. ஓதுதல்* என்பது ஒருவரின் காதில் மெல்லச் சொல்லுதல்.

25. கரைதல்* என்பது அழுது அல்லது அழைத்துச் சொல்லுதல்.

26. கழறுதல்* என்பது கடிந்து சொல்லுதல்.

27. கிளத்தல்* என்பது ஒன்றைத் தெளிவாய்க் குறிப்பிட்டுச் சொல்லுதல்.

28. குயிற்றுதல்* என்பது குயிற்குரலிற் சொல்லுதல்.

29. குழறுதல்* என்பது நாத்தடுமாறிச் சொல்லுதல்.

30. கொஞ்சுதல்* என்பது செல்லப் பிள்ளைபோற் சொல்லுதல்.

31. செப்புதல்* என்பது வினாவிற்கு விடை சொல்லுதல்.

32. நொடித்தல்* என்பது கதை சொல்லுதல்.

33. பலுக்குதல்* என்பது உச்சரித்தல்.

34. பிதற்றுதல்* என்பது பித்தனைப் போலப் பேசுதல்.

35. மிழற்றுதல்* என்பது கிளிக்குரலிற் சொல்லுதல்.

36. வலித்தல்* என்பது வற்புறுத்திச் சொல்லுதல்.

37. விள்ளுதல்* என்பது  வெளிவிட்டுச் சொல்லுதல்.

38. விளம்புதல்* என்பது பலருக்கு அறிவித்தல்.

39. நொடுத்தல்* என்பது விலை கூறுதல்.

இங்கணம் சுமார் 39 வகையான சொற்கள் தமிழில் பேசுதலைக் குறிப்பதற்காகத் திகழ்கின்றன. இவற்றை நாள்தோறும்  வாழ்வியலில் பயன்படுத்துவோம். நம்  தமிழ்மொழி ஆற்றலை மேலும் மேம்படுத்துவோம்.

கற்போம்! கற்பிப்போம்!

ஏகார வரிசை

தமிழ் அறிவோம்:

(தென்மொழி இதழில் இருந்து எடுத்தது )

ஏகார வரிசை:

ஒரு சொல் ஒரு பொருள்:

ஏ -  ஐந்து வினா எழுத்துக்களுள்   
         ஒன்று (ஏன்? ஏது?)
ஏ  - அம்பு
ஏ  - எய்தல்
ஏ  - ஏவு
ஏகல்  - ஏகுதல்= போதல்= செல்லுதல்
ஏக்கரவு - ஏக்கம்
ஏக்கறுதல்  - அவாவினால் தாழ்ந்து
                          நின்றல்
     (குறள்: உடையார் முன்
       இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்)
ஏசல்  - வைதல் (திட்டுதல்)
ஏடகணி - ஓலையின் நார் (ஏடு=ஓலை,
                   அகணி=நார்)
ஏண் - உயரம்
ஏணி   - ஏறிச்செல்ல உதவும் கருவி
ஏணை - உயரத்தில் கட்டித்தொங்க
                விட்டுள்ள தொட்டில்
ஏதம்  - குற்றம்
ஏந்தல்  - நீர்நிலை. (நீரினை நிலம்
                 ஏந்தியிருப்பது)

ஏமம்  - பாதுகாப்பு
ஏமருதல்  - பாதுகாக்கப்படுதல்
ஏமாப்பு   - அரணாதல் (குறள்:
                  எழுமையும் ஏமாப்புடைத்து)
ஏமாற்றம்  -  மனக்கலக்கம்
ஏம்   - ஏமம் = பாதுகாப்பு
ஏயது   - ஏற்புடையது
ஏரி   - நீர்நிலை (ஏர் =அழகு)
ஏல் (ஏலல்)  - ஒப்புக்கொள்ளுதல்
ஏவலாளர்   - பணியாளர்
ஏழிசை  - ஏழு வகையான இசை (குரல்,
                  துத்தம்,கைக்கிளை,உழை,
                   இளி,விளரி,தாரம்)
ஏழ்   - ஏழு
ஏறக்கட்டுதல்-உயரமாகும்படி குவித்தல்
ஏறு - காளை
ஏறன்  - சிவன் (ஏறு ~ஏறன்)
ஏறாண்முல்லை  -  ஏறு
               +ஆண்+முல்லை. ஏறு (காளை)
               போன்ற ஆண்மையுடைய
                வீரக்குடியின் ஒழுக்கத்தைப்
                புகழும் புறத்துறை
ஏறுபொழுது - முற்பகல் (கதிரோன் 
                      மேலெழும்பும் பொழுது)
ஏறெடுத்துப் பார்  - தலையை உயர்த்தி
                                      பார்
ஏற்கை- ஒப்புக்கொள்வது(ஏல்~ஏற்கை)
ஏற்றம்- நீர் இறைக்கும் கருவி
ஏற்றை  - ஆண்சீயம் (மடங்கல்)
        பெண்சீயத்தின் மேல் ஏற்றுவதால்
        ஏற்றை எனப்பட்டது (ஏறு- ஏற்றை)
ஏனோர்  - மற்றோர்


ஒரு சொல் பல பொருள்கள்:

ஏட்டை - வறுமை,இளைப்பு,அவா,
              துன்பம்,எருமை, எருது

மயங்கொலிச் சொற்கள்

(இணையத்தில் பிடித்தது . எழுதியவர் யார் என்று தெரியவில்லை )

தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள் :

ண, ன பொருள் வேறுபாடு
அணல் - தாடி, கழுத்து
அனல் - நெருப்பு
அணி - அழகு
அனி - நெற்பொறி
அணு - நுண்மை
அனு - தாடை, அற்பம்
அணுக்கம் - அண்டை, அண்மை.
அனுக்கம் - வருத்தம், அச்சம்
அணை - படுக்கை, அணைத்துக்
கொள்ளுதல்
அனை - அன்னை, மீன்
அணைய - சேர, அடைய
அனைய - அத்தகைய
அண்மை - அருகில்
அன்மை - தீமை, அல்ல
அங்கண் - அவ்விடம்
அங்கன் - மகன்
அண்ணம் - மேல்வாய்
அன்னம் - சோறு, அன்னப்பறவை
அண்ணன் - தமையன்
அன்னன் - அத்தகையவன்
அவண் - அவ்வாறு
அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
ஆணகம் - சுரை
ஆனகம் - துந்துபி
ஆணம் - பற்றுக்கோடு
ஆனம் - தெப்பம், கள்
ஆணி - எழுத்தாணி, இரும்பாணி
ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
ஆணேறு -ஆண்மகன்
ஆனேறு - காளை, எருது
ஆண் - ஆடவன்
ஆன் - பசு
ஆணை - கட்டளை, ஆட்சி
ஆனை - யானை
இணை - துணை, இரட்டை
இனை - இன்ன, வருத்தம்
இணைத்து - சேர்த்து
இனைத்து - இத்தன்மையது
இவண் - இவ்வாறு
இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)
ஈணவள் - ஈன்றவள்
ஈனவள் - இழிந்தவள்
உண் - உண்பாயாக
உன் - உன்னுடைய
உண்ணல் - உண்ணுதல்
உன்னல் - நினைத்தல்
உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
உன்னி - நினைத்து, குதிரை
ஊண் - உணவு
ஊன் - மாமிசம்
எண்ண - நினைக்க
என்ன - போல, வினாச்சொல்
எண்ணல் - எண்ணுதல்
என்னல் - என்று சொல்லுதல்
எண்கு - கரடி
என்கு - என்று சொல்லுதல்
ஏண் - வலிமை
ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்
ஏணை - தொட்டில்
ஏனை - மற்றது
ஐவணம் - ஐந்து வண்ணம்
ஐவனம் - மலை நெல்
ஓணம் - ஒரு பண்டிகை
ஓனம் – எழுத்துச்சாரியை
கணகம் - ஒரு படைப்பிரிவு
கனகம் - பொன்
கணப்பு - குளிர்காயும் தீ
கனப்பு - பாரம், அழுத்தம்
கணி - கணித்தல்
கனி - பழம், சுரங்கம், சாரம்
கணம் - கூட்டம்
கனம் -பாரம்
கண்ணன் - கிருஷ்ணன்
கன்னன் - கர்ணன்
கண்ணி - மாலை, கயிறு, தாம்பு
கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு
ராசி
கணை - அம்பு
கனை - ஒலி, கனைத்தல்
கண் - ஓர் உறுப்பு
கன் - கல், செம்பு, உறுதி
கண்று - அம்பு
கன்று - அற்பம், இளமரம், குட்டி,
கைவளை
கண்ணல் - கருதல்
கன்னல் - கரும்பு, கற்கண்டு
காண் - பார்
கான் - காடு, வனம்
காணம் - பொன், கொள்
கானம் - காடு, வனம், தேர், இசை
காணல் - பார்த்தல்
கானல் - பாலை
கிணி - கைத்தாளம்
கினி - பீடை
கிண்ணம் - வட்டில், கிண்ணி
கின்னம் - கிளை, துன்பம்
குணி - வில், ஊமை
குனி - குனிதல், வளை
குணித்தல் - மதித்தல், எண்ணுதல்
குனித்தல் - வளைதல்
குணிப்பு - அளவு, ஆராய்ச்சி
குனிப்பு - வளைப்பு, ஆடல்
கேணம் - செழிப்பு, மிகுதி
கேனம் - பைத்தியம், பித்து
கேணி - கிணறு
கேனி - பித்துப் பிடித்தவர்
கோண் - கோணல், மாறுபாடு
கோன் - அரசன்
சாணம் - சாணைக்கல், சாணி
சானம் - அம்மி, பெருங்காயம்
சுணை - கூர்மை, கரணை
சுனை - நீரூற்று
சுண்ணம் - வாசனைப்பொடி
சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
சேணம் - மெத்தை
சேனம் - பருந்து
சேணை - அறிவு
சேனை - படை
சோணம் - பொன், சிவப்பு, தீ,
சோணகிரி
சோனம் - மேகம்
சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
சோனை - மழைச்சாரல், மேகம்
தண் - குளிர்ச்சி
தன் - தன்னுடைய
தணி - தணித்தல்
தனி - தனிமை
தாணி - தான்றிமரம்
தானி - இருப்பிடம், பண்டசாலை,
தாணு - சிவன், தூண், நிலைப்பேறு
தானு - காற்று
திணை - ஒழுக்கம், குலம்
தினை - தானியம், ஒருவகைப்
புன்செய்ப்பயிர்
திண்மை - உறுதி
தின்மை - தீமை
திண் - வலிமை
தின் - உண்
துணி - துணிதல், கந்தை
துனி - அச்சம், ஊடல் நீட்டித்தல்
தெண் - தெளிவு
தென் - தெற்கு, அழகு
நண்பகல் - நடுப்பகல்
நன்பகல் - நல்லபகல்
நணி - அணி (அழகு)
நனி - மிகுதி
நாண் - வெட்கம், கயிறு
நான் - தன்மைப் பெயர்
நாணம் - வெட்கம்
நானம் - புனுகு, கவரிமான்
பணி - வேலை, கட்டளையிடு
பனி - துன்பம், குளிர், சொல், நோய்
பணை - முரசு, உயரம், பரந்த
பனை - ஒருவகை மரம்
பண் - இசை
பன் - அரிவாள், பல
பண்ணை - தோட்டம்
பன்னை - கீரைச்செடி
பண்ணுதல் - செய்தல்
பன்னுதல் - நெருங்குதல்
பண்ணி - செய்து
பன்னி - சீப்பு, பனிநீர், மனை, சணல்
பண்மை - தகுதி
பன்மை - பல
பணித்தல் - கட்டளையிடுதல்
பனித்தல் - துளித்தல், தூறல், விரிந்த
பட்டணம் - நகரம்
பட்டினம் - கடற்கரை நகர்
பாணம் - நீருணவு
பானம் - அம்பு
புணை - தெப்பம்
புனை - இட்டுக்கட்டுதல், கற்பனை
புண் - காயம்
புன் - கீழான
பேணம் - பேணுதல்
பேனம் - நுரை
பேண் - போற்று, உபசரி
பேன் - ஓர் உயிரி
மணம் - வாசனை, திருமணம்
மனம் - உள்ளம், இந்துப்பு
மணை - மரப்பலகை, மணவறை
மனை - இடம், வீடு
மண் - தரை, மண்வகை
மன் - மன்னன், பெருமை
மண்ணை - இளமை, கொடி வகை
மன்னை - தொண்டை, கோபம்
மாணி - அழகு, பிரம்மசாரி
மானி - மானம் உடையவர்
மாண் - மாட்சிமை
மான் - ஒரு விலங்கு
முணை - வெறுப்பு, மிகுதி
முனை - முன்பகுதி, துணிவு,
முதன்மை
வணம் - ஓசை
வனம் - காடு, துளசி
வண்மை - வளப்பம், கொடை
வன்மை - உறுதி, வலிமை
வண்ணம் - நிறம், குணம், அழகு
வன்னம் - எழுத்து, நிறம்
வாணகம் - அக்கினி, பசுமடி
வானகம் - மேலுலகம்
வாணம் - அம்பு, தீ, மத்தாப்பு
வானம் - ஆகாயம், மழை
வாணி - கலைமகள், சரஸ்வதி
வானி - துகிற்கொடி
ல, ழ, ள பொருள் வேறுபாடு
அலகு - பறவையின் மூக்கு, அளவு,
ஆண்பனை
அழகு - வனப்பு
அளகு - சேவல், பெண்கூகை
அலகம் - திப்பிலி
அளகம் - வெள்ளெருக்கு, நீர்
அலகை - கற்றாழை, பேய்
அளகை - அளகாபுரி, பெண்
அழம் - பிணம்
அலம் - கலப்பை
அளம் - உப்பு
அலத்தல் - அலட்டல், அலைதல்
அளத்தல் - அளவிடுதல், மதித்தல்
அலவன் - ஆண்நண்டு
அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்
அழி - அழித்துவிடு
அலி - பேடி, காகம், விருச்சிகராசி
அளி - கருணை, கள், வண்டு
அல்லல் - துன்பம்
அள்ளல் - வாரி எடுத்தல்
அழை - கூப்பிடு
அலை - கடல், நீரலை, அலைதல்
அளை - தயிர், நண்டு, புற்று
அவல் - பள்ளம், உணவுப் பொருள்
அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)
அல் - இரவு
அள் - அள்ளி எடு, நெருக்கம்
உலவு - நட
உளவு - ஒற்று
உழவு - கலப்பையால் உழுதல்
உழி - இடம், பொழுது
உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
உலு - தானியப் பதர்
உழு - நிலத்தை உழு
உளு - உளுத்துப் போதல்
உலை - கொல்லன் உலை, நீருலை
உழை - பாடுபடு, பக்கம், கலைமான்
உளை - பிடரி மயிர், சேறு, தலை
உழுவை - புலி
உளுவை - மீன்வகை
எல் - கல், மாலை, சூரியன்
எள் - எண்ணெய்வித்து, நிந்தை
எலு - கரடி
எழு - எழுந்திரு, தூண்
ஒலி - சப்தம், நாதம், காற்று
ஒழி - அழி, தவிர், கொல், துற
ஒளி - வெளிச்சம், மறை(த்துவை)
ஒல் - ஒலிக்குறிப்பு
ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி
கலகம் - போர், அமளி, இரைச்சல்
கழகம் - சங்கம், கூட்டமைப்பு
கழங்கம் - கழங்கு, விளையாட்டுக்
கருவி
களங்கம் - குற்றம், அழுக்கு
கலி - கலியுகம், பாவகை, சனி
கழி - கோல், மிகுதி, உப்பளம்
களி - மகிழ்வு, இன்பம்
கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
கழை - மூங்கில், கரும்பு,
புனர்பூசம்
களை - அழகு, புல் பூண்டு, அயர்வு
கல் - மலை, பாறை, சிறுகல்
கள் - மது, தேன்
கலம் - கப்பல், பாத்திரம்
களம் - இடம், போர்க்களம், இருள்
காலி - ஒன்றுமில்லாதது,
வெற்றிடம்
காளி - துர்க்கை, மாயை
காழி - சீர்காழி (ஊர்)
காலை - பொழுது,
விடியற்பொழுது
காளை - காளைமாடு, இளைஞன்
காலம் - பொழுது, நேரம்
காளம் - எட்டிமரம், சூலம்
கிலி - அச்சம், பயம்
கிழி - கிழித்துவிடு, முடிப்பு
(பொன்)
கிளி - பறவை, வெட்டுக்கிளி
கிழவி - முதியவள், மூதாட்டி
கிளவி - சொல், மொழி
குலி - மனைவி
குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச்
சதுரம், வயிறு
குளி -நீராடு
குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம்,
குடி
குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி
குலை - கொத்து, மனம்
தடுமாறுதல்
குழை - குண்டலம், குழைந்துபோதல்
குலவி - மகிழ்ந்திருத்தல்
குழவி - குழந்தை, இளமை, யானைக்
கன்று அம்மிக்கல்
குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி
குலிகம் -சிவப்பு, இலுப்பை
குளிகம் -மருந்து, மாத்திரை
குவலை -துளசி, கஞ்சா
குவளை - குவளை மலர், சொம்பு,
ஒரு பேரெண்
கூலம் - தானியம், கடைத்தெரு
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி(யார்) - பேய், காளை, வீரர்,
படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்
கொலு - அரசசபை, திருவோலக்கம்
(தெய்வசபை), உல்லாசமாக
வீற்றிருத்தல்
கொழு - மழு, கலப்பையில் மாட்டும்
பெரிய இரும்பு, கொழு கொழுத்து
இருத்தல்
கொளு - புறப்பொருள்
வெண்பாமாலைத் துறை,
பொருந்துவாய்
கொலை - கொல்லுதல்
கொளை - கோட்பாடு, பயன்,
இசைப்பாட்டு, தாளம்
கொல்லாமை - கொலை செய்யாமை
கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை,
அடங்காமை
கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு
மலை
கொள்ளி - கொள்ளிக்கட்டை
கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்
கொள்ளை - திருடுதல், மிகுதி
கோலம் - அழகு, அலங்காரம்
கோளம் - உருண்டை, வட்டம்
கோலை - மிளகு
கோழை - வீரமற்றவன், கபம்
கோளை - குவளை, எலி
கோல் - மரக்கொம்பு, அம்பு,
குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
கோள் - கிரகம்
கோலி - இலந்தை, விளையாடும்
குண்டு
கோழி - உறையூர், விட்டில், பறவை
கோளி - பூவாது காய்க்கும் மரம்,
ஆத்தி, ஆலம்
சலம் - நீர், சிறுநீர், குளிர்
சளம் - பொய், துன்பம், வஞ்சனை
சாலை - பாடசாலை, பொது
மண்டபம், அறக்கூடம்
சாளை - கடல்மீன்
சாழை - குடிசை, குச்சு
சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்
சுளித்தல் - முறித்தல், சினத்தல்
சூலை - வயிற்று நோய்
சூளை - செங்கல் சூளை
சூல் - கர்ப்பம்
சூழ் - சூழ்ந்துகொள், சுற்று
சூள் - சபதம்
சேல் - மீன்
சேள் - மேலிடம்
சோலி - ரவிக்கை, காரியம்
சோழி - பலகரை
சோளி - கூடைவகை
தவளை - ஓர் உயிரி
தவலை - பாத்திரம்
தலம் - இடம், பூமி
தழம் - தைலம்
தளம் - மேடை, மாடி வீட்டின்
அடுக்கு
தழை - தாவர உறுப்பு
தலை - மண்டை
தளை - விலங்கு
தாலம் - உலகம், தேன்
தாளம் - இசைக்கருவி, ஜதி
தாலி - மங்கலநாண்
தாழி - கடல், குடம், பரணி
பெரியபாண்டம்
தாளி - தாளித்தல், பனைதால் -
நாக்கு, தாலாட்டு
தாழ் - தாழ்தல், குனிதல்
தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி,
காகிதம்.
துலக்கம் - ஒளி, தெளிவு
துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம்,
ஒளி
துலம் - கோரை, கனம்
துளம் - மாதுளை, மயிலிறகு
துலி - பெண் ஆமை
துழி - பள்ளம்
துளி - மழைத்துளி, திவலை,
சிறிய அளவு
துலை - ஒப்பு, கனம்
துளை - துவாரம், வாயில்
தூலி - எழுதுகோல், எழுத்தாணி
தூளி - புழுதி, குதிரை
தெழித்தல் - கோபித்தல், முழங்குதல்,
அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல்,
விதைத்தல்
தெல் - அஞ்சுதல்
தெள் - தெளிவான
தோலன் - அற்பன்
தோழன் - நண்பன்
தோலி - பிசின், ஒருவகை மீன்
தோழி - பாங்கி, நட்பால்
நெருக்கமானவள்
தோளி - அவுரி (ஒருவகை
குத்துச்செடி), அரக்கு
தோல் - சருமம், வனப்பு, விதையின்
மேல்பகுதி
தோள் - புயம், வீரம்
நலன் - நலம், அழகு, புகழ், இன்பம்,
நன்மை, குணம்,
நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்
நலி - நோய்
நளி - குளிர்ச்சி, பெருமை
நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்
நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்
நல் - நல்ல
நள் - இரவு, நடு, நள்ளிரவு
நாலம் - பூவின் காம்பு
நாழம் - இழிவுரை, வசவு
நாளம் - பூந்தண்டு, உட்துளை,
ரத்தநாளம்
நாலி - முத்து, கந்தை ஆடை
நாழி - உள்தொளையுள்ள பொருள்,
ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா,
பூரட்டாதி
நாளி - கல், நாய்
நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து
நாழிகை - வட்டம், கடிகாரம்
நால் - நான்கு
நாழ் - குற்றம், செருக்கு
நாள் - காலம், திதி
நீலம் - ஒரு நிறம், கருங்குவளை,
இருள்
நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்
நீல் - நீலம், காற்று
நீள் - நீளம், ஒளி
பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி,
சேனை, வன்மை, உறுதி, எடை
பழம் - கனி, முதுமை
பல்லி - சிற்றூர், இடையர் ஊர்,
உழுகருவி, ஓர் உயிரி,
வண்டியுறுப்பு
பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில்,
குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை,
பள்ளிக்கூடம்
பலி - பலியிடுதல், பலியுயிர்
பழி - குற்றம்
பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
பாழ் - வீண், வெறுமை
பீழை - துன்பம்
பீளை - கண் அழுக்கு
புலி - காட்டு விலங்கு
புளி - புளியமரம், புளியங்காய்
புலை - புலால், ஊன், கீழ்மை
புழை - துளை, வாயில், நரகம்
புகல் - அடைக்கலம்
புகழ் - பெருமை
புல் - அற்பம், கலவி, புல்பூண்டு
புள் - பறவை
பூலம் - புற்கட்டு
பூளம் - பூவரசு
பூழை - துவாரம், கோபுரவாயில்
பூளை - பூளைச்செடி, இலவம்
பஞ்சு
பாலி - தானியக் குவியல், தூற்றாத
தானியம்
பாழி - கொடுத்தல், ஈதல்
பாளி - வரப்பு, எல்லை
பாலிவு - அழகு, நிறைவு
பாழிவு - பொழிதல், மேன்மை
போலி - பொய், வஞ்சகம், ஒப்பு
போளி - இனிப்புப் பண்டம்
பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்
பொழிதல் - ஈதல், கொடுத்தல்,
சொரிதல், பெய்தல், நிறைதல்
மலம் - அழுக்கு, பாவம்
மழம் - இளமை, குழந்தை
மலை - குன்று, பொருப்பு,
வெற்பு,சிகரம்
மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்
மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
மழைத்தல் - மழை பெய்திருத்தல்,
குளிர்ந்திருத்தல்
மல்லிகை - மாலை, கழுத்தணி,
வரிசை
மாளிகை - அரண்மனை, கோயில்
மாலை - அந்திப்பொழுது,
பூமாலை
மாழை - மயக்கம், இளமை, அழகு
மாளை - புளியம்பட்டை
மால் - திருமால், மயக்கம், அருகன்,
இந்திரன், பெருமை, மேகம்
மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)
முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
முழை - குகை
முளை - முளைத்தல், தறி, ஆப்பு,
அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
முழி - விழி (விழித்தல்)
முளி - மரக்கணு, விரல்முளி,
வாட்டம்
மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை,
கோணம்
மூலை - இரு கோடுகள் சந்திக்கும்
இடம்
மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர்
உறுப்பு(முதன்மைப் பகுதி)
மெல்ல - மென்று தின்பது
மெள்ள - மெதுவாக
மாலி - மொளலி கிரீடம்
மாழி - மேழி, கலப்பை
மாளி - துணிமூட்டை
வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
வளம் - வளமை, அழகு
வலவன் - திருமால்
வளவன் - சோழன், வேளாளன்
வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
வளன் - செழுமை, வளப்பன்
வழப்பம் - வழக்கம், இயல்பு
வளப்பம் - வளமை, செழிப்பு
வலி - நோய், வலிமை, துன்பம்
வழி - நெறி, பாதை, தடம், உபாயம்
வளி - காற்று
வலை - மீன் முதலியன பிடிக்கும்
ஒரு கருவி
வழை - சுரபுன்னை, புதுமை,
இளமை
வளை - கை வளையல், எலி வளை
வல் - வலிமை, விரைவு, திறமை
வள் - ஒலிக்குறிப்புச் சொல்
வல்லம் - வாழை, ஓர் ஊர்
வள்ளம் - மரக்கலம், படகு, அளவு,
தொன்னை
வல்லி - பூமி, பெண், பிரிதல், படர்
கொடி
வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம்,
சந்திரன்
வலு - வலிமை, பலம், பற்று
வழு - குற்றம், தவறு, பழிப்புரை,
கேடு
வளு - இளமை, இளைய
வாலி - கிஷ்கிந்தை அரசன்
(இராமாயணம்)
வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்)
வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு
காதணி
வாலை - இளம்பெண், திராவகம்
வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
வாழை - வாழைமரம்
வாளை - வாளை மீன்
வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு
வாழ் - வாழ்வாயாக (என்று
வாழ்த்துதல்)
வாள் - போர்வாள், நீண்டகத்தி
விலா - விலா எலும்பு
விழா - திருவிழா, கொண்டாட்டம்
விளா - இளமை, வெண்மை, நிணம்
விழி - கண், கருவிழி
விளி - கூப்பிடு, அழை,
ஏழிசையில் ஒன்று
விலை - மதிப்பு, விலைக்கு விற்றல்
விழை - விரும்பு, ஆசைப்படு
விளை - ஒரு மீன்வகை, விளைவி
(விளைச்சல்)
விலக்கு - விலக்கி விடு, தவிர்
விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம்
விலங்கு - பூட்டு, கை, கைகளைப்
பிணிக்கும் கருவி, மிருகம்
விளங்கு - திகழ் (திகழ்தல்),
சிற்றரத்தை (மூலிகை வகை)
வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி
வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு
வேலம் - வேலமரம், தோட்டம்
வேழம் - யானை, கரும்பு, மூங்கில்
வேல் - வேலாயுதம்
வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன்,
ஆசை
வேலை - பணி, கடல்
வேளை - பொழுது, நேரம்,
ஒருவகைக் கீரை
ர, ற பொருள் வேறுபாடு
அர - பாம்பு
அற - தெளிய, முற்றுமாக
அரவு - பாம்பு
அறவு - அறுதல், தொலைதல்
அரம் - ஒரு கருவி
அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம்,
கடமை, அறநூல், துறவறம்
அரி - திருமால், அரிசி, அழகு,
அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு,
சிவன்
அறி - அறிந்துகொள்
அரிய - கிடைத்தற்கு அரிதான,
கஷ்டமான
அறிய - அறிந்துகொள்ள,
தெரிந்துகொள்ள
அரன் - சிவன்
அறன் - தர்மம், அறக்கடவுள்
அரிவை - பெண் (7 பருவத்துள் ஒன்று.
18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட
பெண்)
அறிவை - அறிவாய்
அருகு - புல்வகை (அருகம்புல்),
அண்மை
அறுகு - குறைந்து போதல்
அக்கரை - அந்தக் கரை
அக்கறை - ஈடுபாடு
அரை - பாதி, மேகலை, வயிறு, ஒரு
மரம்
அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி,
ஒலி, பாசறை, சொல், குகை,
வஞ்சனை, மாளிகை
அரைதல் - தேய்தல்
அறைதல் - அடித்தல், சொல்லுதல்
அப்புரம் - அந்தப் பக்கம்
அப்புறம் - பிறகு
அர்ப்பணம் - உரித்தாக்குதல்
அற்பணம் - காணிக்கை செலுத்துதல்
அரு - உருவமற்றது
அறு - துண்டித்துவிடு,
அறுத்துவிடு
அருமை - சிறப்பு, அன்பு, இன்மை,
சுலபத்தில் கிடைக்காதது
அறுமை - நிலையின்மை, ஆறு
ஆரு - குடம், நண்டு
ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை,
நதி, ஒழுக்கம், பக்கம், நிலை
ஆர - நிறைய, அனுபவிக்க
ஆற - சூடு ஆற (குறைய)
ஆரல் - ஒருவகை மீன்
ஆறல் - சூடு குறைதல்
இரத்தல் - யாசித்தல்
இறத்தல் - இறந்துபோதல், சாதல்
இரகு - சூரியன்
இறகு - சிறகு
இரக்கம் - கருணை
இறக்கம் - சரிவு, மரணம்
இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழிறங்கி வா
இரவம் - இரவு
இறவம் - இறால் மீன்
இரவி - சூரியன், எருக்கு, மலை,
வாணிகத்தொழில்
இறவி - இறத்தல்
இரவு - இரவு நேரம், யாசித்தல்
இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி,
தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்
இரை -ஒலி, உணவு
இறை - கடவுள், அணு, அரசன், ரேகை,
சந்து, கடமை, தலைமை, விடை,
உயரம், மூலை
இரு - இரண்டு, பெரிய, உட்கார்,
அமர்ந்துகொள்
இறு - ஒடி, கெடு, சொல்லு
இரும்பு - கடிவாளம், கிம்புரி,
ஆயுதம், ஓர் உலோகம்
இறும்பு - வண்டு, சிறுமலை
இருப்பு - கையிருப்பு, இருப்பிடம்,
ஆசனம், நிலை, பொருள், முதல்
இறுப்பு - வடிப்பு
இருத்தல் - அமர்ந்திருத்தல்,
காத்திருத்தல்
இறுத்தல் - வடித்தல், செலுத்தல்,
எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல்,
முடித்தல், முறித்தல்
இருக்கு - மந்திரம், ரிக் வேதம்
இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு
இரைத்தல் - ஒலித்தல்,
மூச்சுவாங்குதல்
இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு
உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி,
ஞானம், விடம்
உறவு - நட்பு, சுற்றம், எறும்பு
உரவோர் - அறிஞர், முனிவர்
உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர்
உரி - தோல், மரப்பட்டை,
அரைப்படியளவு,
உரிச்சொல்,கொத்துமல்லி
உறி - உறிவெண்ணெய், தூக்கு
உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம்,
நிறம், அச்சம், பெருமை, மேன்மை
உறு - மிகுதி
உருக்குதல் - இளக்குதல், மெலியச்
செய்தல்
உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல்
உரை - புகழ், விளக்கவுரை, நூல்,
பொன்மாற்று, அறிவுரை, சொல்
உறை - இடம், பண்டம், பொருள்,
மருந்து, பாலில் இடும் பிரை, துளி,
மழை, ஆடை, துன்பம், பாம்பின்
விஷப்பை
உரைப்பு - தங்குதல், தோய்தல்
உறைப்பு - காரம், கொடுமை
உரையல் - சொல்லல்
உறையல் - மாறுபாடு, பிணக்கு
உரிய - உரிமையான
உறிய - உறிஞ்ச
ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப்
பறவை
ஊறல் - தினவு, ஊற்று, சாறு,
வருவாய், ஊறுதல், களிப்பு
ஊரு - அச்சம், தொடை
ஊறு - இடையூறு, துன்பம், காயம்
உறுதல், தீண்டல், குற்றம், புண்,
கொலை
எரி - தீ, கார்த்திகை, பிரபை,
இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை,
கந்தகம்
எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக்
கூறுதல்
ஏர - ஓர் உவமஉருபு
ஏற - மிகுதி, உயர (ஏறுதல்)
ஏரி - நீர்நிலை, குளம்
ஏறி - உயர்ந்த, மேலே ஏறி
ஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடு
ஒறு - தண்டி, அழி, இகழ்
ஒருத்தல் - ஆண் விலங்குகளின்
பொதுப்பெயர்
ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல்,
வருத்துதல், வெறுத்தல், கடிதல்,
இகழ்தல், குறைத்தல்
ஒருவு - நீங்கு
ஒறுவு - வருத்தம், துன்பம்
கரடு - மரக்கணு, மணிக்கட்டு,
முருடு, வளர்ச்சியற்றது
கறடு - தரமற்ற முத்து
கரம் - கிரணம், விஷம், செயல், கை,
கழுதை
கறம் - கொடுமை, வ📚 தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள் :
ண, ன பொருள் வேறுபாடு
அணல் - தாடி, கழுத்து
அனல் - நெருப்பு
அணி - அழகு
அனி - நெற்பொறி
அணு - நுண்மை
அனு - தாடை, அற்பம்
அணுக்கம் - அண்டை, அண்மை.
அனுக்கம் - வருத்தம், அச்சம்
அணை - படுக்கை, அணைத்துக்
கொள்ளுதல்
அனை - அன்னை, மீன்
அணைய - சேர, அடைய
அனைய - அத்தகைய
அண்மை - அருகில்
அன்மை - தீமை, அல்ல
அங்கண் - அவ்விடம்
அங்கன் - மகன்
அண்ணம் - மேல்வாய்
அன்னம் - சோறு, அன்னப்பறவை
அண்ணன் - தமையன்
அன்னன் - அத்தகையவன்
அவண் - அவ்வாறு
அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
ஆணகம் - சுரை
ஆனகம் - துந்துபி
ஆணம் - பற்றுக்கோடு
ஆனம் - தெப்பம், கள்
ஆணி - எழுத்தாணி, இரும்பாணி
ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
ஆணேறு -ஆண்மகன்
ஆனேறு - காளை, எருது
ஆண் - ஆடவன்
ஆன் - பசு
ஆணை - கட்டளை, ஆட்சி
ஆனை - யானை
இணை - துணை, இரட்டை
இனை - இன்ன, வருத்தம்
இணைத்து - சேர்த்து
இனைத்து - இத்தன்மையது
இவண் - இவ்வாறு
இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)
ஈணவள் - ஈன்றவள்
ஈனவள் - இழிந்தவள்
உண் - உண்பாயாக
உன் - உன்னுடைய
உண்ணல் - உண்ணுதல்
உன்னல் - நினைத்தல்
உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
உன்னி - நினைத்து, குதிரை
ஊண் - உணவு
ஊன் - மாமிசம்
எண்ண - நினைக்க
என்ன - போல, வினாச்சொல்
எண்ணல் - எண்ணுதல்
என்னல் - என்று சொல்லுதல்
எண்கு - கரடி
என்கு - என்று சொல்லுதல்
ஏண் - வலிமை
ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்
ஏணை - தொட்டில்
ஏனை - மற்றது
ஐவணம் - ஐந்து வண்ணம்
ஐவனம் - மலை நெல்
ஓணம் - ஒரு பண்டிகை
ஓனம் – எழுத்துச்சாரியை
கணகம் - ஒரு படைப்பிரிவு
கனகம் - பொன்
கணப்பு - குளிர்காயும் தீ
கனப்பு - பாரம், அழுத்தம்
கணி - கணித்தல்
கனி - பழம், சுரங்கம், சாரம்
கணம் - கூட்டம்
கனம் -பாரம்
கண்ணன் - கிருஷ்ணன்
கன்னன் - கர்ணன்
கண்ணி - மாலை, கயிறு, தாம்பு
கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு
ராசி
கணை - அம்பு
கனை - ஒலி, கனைத்தல்
கண் - ஓர் உறுப்பு
கன் - கல், செம்பு, உறுதி
கண்று - அம்பு
கன்று - அற்பம், இளமரம், குட்டி,
கைவளை
கண்ணல் - கருதல்
கன்னல் - கரும்பு, கற்கண்டு
காண் - பார்
கான் - காடு, வனம்
காணம் - பொன், கொள்
கானம் - காடு, வனம், தேர், இசை
காணல் - பார்த்தல்
கானல் - பாலை
கிணி - கைத்தாளம்
கினி - பீடை
கிண்ணம் - வட்டில், கிண்ணி
கின்னம் - கிளை, துன்பம்
குணி - வில், ஊமை
குனி - குனிதல், வளை
குணித்தல் - மதித்தல், எண்ணுதல்
குனித்தல் - வளைதல்
குணிப்பு - அளவு, ஆராய்ச்சி
குனிப்பு - வளைப்பு, ஆடல்
கேணம் - செழிப்பு, மிகுதி
கேனம் - பைத்தியம், பித்து
கேணி - கிணறு
கேனி - பித்துப் பிடித்தவர்
கோண் - கோணல், மாறுபாடு
கோன் - அரசன்
சாணம் - சாணைக்கல், சாணி
சானம் - அம்மி, பெருங்காயம்
சுணை - கூர்மை, கரணை
சுனை - நீரூற்று
சுண்ணம் - வாசனைப்பொடி
சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
சேணம் - மெத்தை
சேனம் - பருந்து
சேணை - அறிவு
சேனை - படை
சோணம் - பொன், சிவப்பு, தீ,
சோணகிரி
சோனம் - மேகம்
சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
சோனை - மழைச்சாரல், மேகம்
தண் - குளிர்ச்சி
தன் - தன்னுடைய
தணி - தணித்தல்
தனி - தனிமை
தாணி - தான்றிமரம்
தானி - இருப்பிடம், பண்டசாலை,
தாணு - சிவன், தூண், நிலைப்பேறு
தானு - காற்று
திணை - ஒழுக்கம், குலம்
தினை - தானியம், ஒருவகைப்
புன்செய்ப்பயிர்
திண்மை - உறுதி
தின்மை - தீமை
திண் - வலிமை
தின் - உண்
துணி - துணிதல், கந்தை
துனி - அச்சம், ஊடல் நீட்டித்தல்
தெண் - தெளிவு
தென் - தெற்கு, அழகு
நண்பகல் - நடுப்பகல்
நன்பகல் - நல்லபகல்
நணி - அணி (அழகு)
நனி - மிகுதி
நாண் - வெட்கம், கயிறு
நான் - தன்மைப் பெயர்
நாணம் - வெட்கம்
நானம் - புனுகு, கவரிமான்
பணி - வேலை, கட்டளையிடு
பனி - துன்பம், குளிர், சொல், நோய்
பணை - முரசு, உயரம், பரந்த
பனை - ஒருவகை மரம்
பண் - இசை
பன் - அரிவாள், பல
பண்ணை - தோட்டம்
பன்னை - கீரைச்செடி
பண்ணுதல் - செய்தல்
பன்னுதல் - நெருங்குதல்
பண்ணி - செய்து
பன்னி - சீப்பு, பனிநீர், மனை, சணல்
பண்மை - தகுதி
பன்மை - பல
பணித்தல் - கட்டளையிடுதல்
பனித்தல் - துளித்தல், தூறல், விரிந்த
பட்டணம் - நகரம்
பட்டினம் - கடற்கரை நகர்
பாணம் - நீருணவு
பானம் - அம்பு
புணை - தெப்பம்
புனை - இட்டுக்கட்டுதல், கற்பனை
புண் - காயம்
புன் - கீழான
பேணம் - பேணுதல்
பேனம் - நுரை
பேண் - போற்று, உபசரி
பேன் - ஓர் உயிரி
மணம் - வாசனை, திருமணம்
மனம் - உள்ளம், இந்துப்பு
மணை - மரப்பலகை, மணவறை
மனை - இடம், வீடு
மண் - தரை, மண்வகை
மன் - மன்னன், பெருமை
மண்ணை - இளமை, கொடி வகை
மன்னை - தொண்டை, கோபம்
மாணி - அழகு, பிரம்மசாரி
மானி - மானம் உடையவர்
மாண் - மாட்சிமை
மான் - ஒரு விலங்கு
முணை - வெறுப்பு, மிகுதி
முனை - முன்பகுதி, துணிவு,
முதன்மை
வணம் - ஓசை
வனம் - காடு, துளசி
வண்மை - வளப்பம், கொடை
வன்மை - உறுதி, வலிமை
வண்ணம் - நிறம், குணம், அழகு
வன்னம் - எழுத்து, நிறம்
வாணகம் - அக்கினி, பசுமடி
வானகம் - மேலுலகம்
வாணம் - அம்பு, தீ, மத்தாப்பு
வானம் - ஆகாயம், மழை
வாணி - கலைமகள், சரஸ்வதி
வானி - துகிற்கொடி
ல, ழ, ள பொருள் வேறுபாடு
அலகு - பறவையின் மூக்கு, அளவு,
ஆண்பனை
அழகு - வனப்பு
அளகு - சேவல், பெண்கூகை
அலகம் - திப்பிலி
அளகம் - வெள்ளெருக்கு, நீர்
அலகை - கற்றாழை, பேய்
அளகை - அளகாபுரி, பெண்
அழம் - பிணம்
அலம் - கலப்பை
அளம் - உப்பு
அலத்தல் - அலட்டல், அலைதல்
அளத்தல் - அளவிடுதல், மதித்தல்
அலவன் - ஆண்நண்டு
அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்
அழி - அழித்துவிடு
அலி - பேடி, காகம், விருச்சிகராசி
அளி - கருணை, கள், வண்டு
அல்லல் - துன்பம்
அள்ளல் - வாரி எடுத்தல்
அழை - கூப்பிடு
அலை - கடல், நீரலை, அலைதல்
அளை - தயிர், நண்டு, புற்று
அவல் - பள்ளம், உணவுப் பொருள்
அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)
அல் - இரவு
அள் - அள்ளி எடு, நெருக்கம்
உலவு - நட
உளவு - ஒற்று
உழவு - கலப்பையால் உழுதல்
உழி - இடம், பொழுது
உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
உலு - தானியப் பதர்
உழு - நிலத்தை உழு
உளு - உளுத்துப் போதல்
உலை - கொல்லன் உலை, நீருலை
உழை - பாடுபடு, பக்கம், கலைமான்
உளை - பிடரி மயிர், சேறு, தலை
உழுவை - புலி
உளுவை - மீன்வகை
எல் - கல், மாலை, சூரியன்
எள் - எண்ணெய்வித்து, நிந்தை
எலு - கரடி
எழு - எழுந்திரு, தூண்
ஒலி - சப்தம், நாதம், காற்று
ஒழி - அழி, தவிர், கொல், துற
ஒளி - வெளிச்சம், மறை(த்துவை)
ஒல் - ஒலிக்குறிப்பு
ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி
கலகம் - போர், அமளி, இரைச்சல்
கழகம் - சங்கம், கூட்டமைப்பு
கழங்கம் - கழங்கு, விளையாட்டுக்
கருவி
களங்கம் - குற்றம், அழுக்கு
கலி - கலியுகம், பாவகை, சனி
கழி - கோல், மிகுதி, உப்பளம்
களி - மகிழ்வு, இன்பம்
கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
கழை - மூங்கில், கரும்பு,
புனர்பூசம்
களை - அழகு, புல் பூண்டு, அயர்வு
கல் - மலை, பாறை, சிறுகல்
கள் - மது, தேன்
கலம் - கப்பல், பாத்திரம்
களம் - இடம், போர்க்களம், இருள்
காலி - ஒன்றுமில்லாதது,
வெற்றிடம்
காளி - துர்க்கை, மாயை
காழி - சீர்காழி (ஊர்)
காலை - பொழுது,
விடியற்பொழுது
காளை - காளைமாடு, இளைஞன்
காலம் - பொழுது, நேரம்
காளம் - எட்டிமரம், சூலம்
கிலி - அச்சம், பயம்
கிழி - கிழித்துவிடு, முடிப்பு
(பொன்)
கிளி - பறவை, வெட்டுக்கிளி
கிழவி - முதியவள், மூதாட்டி
கிளவி - சொல், மொழி
குலி - மனைவி
குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச்
சதுரம், வயிறு
குளி -நீராடு
குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம்,
குடி
குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி
குலை - கொத்து, மனம்
தடுமாறுதல்
குழை - குண்டலம், குழைந்துபோதல்
குலவி - மகிழ்ந்திருத்தல்
குழவி - குழந்தை, இளமை, யானைக்
கன்று அம்மிக்கல்
குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி
குலிகம் -சிவப்பு, இலுப்பை
குளிகம் -மருந்து, மாத்திரை
குவலை -துளசி, கஞ்சா
குவளை - குவளை மலர், சொம்பு,
ஒரு பேரெண்
கூலம் - தானியம், கடைத்தெரு
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி(யார்) - பேய், காளை, வீரர்,
படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்
கொலு - அரசசபை, திருவோலக்கம்
(தெய்வசபை), உல்லாசமாக
வீற்றிருத்தல்
கொழு - மழு, கலப்பையில் மாட்டும்
பெரிய இரும்பு, கொழு கொழுத்து
இருத்தல்
கொளு - புறப்பொருள்
வெண்பாமாலைத் துறை,
பொருந்துவாய்
கொலை - கொல்லுதல்
கொளை - கோட்பாடு, பயன்,
இசைப்பாட்டு, தாளம்
கொல்லாமை - கொலை செய்யாமை
கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை,
அடங்காமை
கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு
மலை
கொள்ளி - கொள்ளிக்கட்டை
கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்
கொள்ளை - திருடுதல், மிகுதி
கோலம் - அழகு, அலங்காரம்
கோளம் - உருண்டை, வட்டம்
கோலை - மிளகு
கோழை - வீரமற்றவன், கபம்
கோளை - குவளை, எலி
கோல் - மரக்கொம்பு, அம்பு,
குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
கோள் - கிரகம்
கோலி - இலந்தை, விளையாடும்
குண்டு
கோழி - உறையூர், விட்டில், பறவை
கோளி - பூவாது காய்க்கும் மரம்,
ஆத்தி, ஆலம்
சலம் - நீர், சிறுநீர், குளிர்
சளம் - பொய், துன்பம், வஞ்சனை
சாலை - பாடசாலை, பொது
மண்டபம், அறக்கூடம்
சாளை - கடல்மீன்
சாழை - குடிசை, குச்சு
சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்
சுளித்தல் - முறித்தல், சினத்தல்
சூலை - வயிற்று நோய்
சூளை - செங்கல் சூளை
சூல் - கர்ப்பம்
சூழ் - சூழ்ந்துகொள், சுற்று
சூள் - சபதம்
சேல் - மீன்
சேள் - மேலிடம்
சோலி - ரவிக்கை, காரியம்
சோழி - பலகரை
சோளி - கூடைவகை
தவளை - ஓர் உயிரி
தவலை - பாத்திரம்
தலம் - இடம், பூமி
தழம் - தைலம்
தளம் - மேடை, மாடி வீட்டின்
அடுக்கு
தழை - தாவர உறுப்பு
தலை - மண்டை
தளை - விலங்கு
தாலம் - உலகம், தேன்
தாளம் - இசைக்கருவி, ஜதி
தாலி - மங்கலநாண்
தாழி - கடல், குடம், பரணி
பெரியபாண்டம்
தாளி - தாளித்தல், பனைதால் -
நாக்கு, தாலாட்டு
தாழ் - தாழ்தல், குனிதல்
தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி,
காகிதம்.
துலக்கம் - ஒளி, தெளிவு
துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம்,
ஒளி
துலம் - கோரை, கனம்
துளம் - மாதுளை, மயிலிறகு
துலி - பெண் ஆமை
துழி - பள்ளம்
துளி - மழைத்துளி, திவலை,
சிறிய அளவு
துலை - ஒப்பு, கனம்
துளை - துவாரம், வாயில்
தூலி - எழுதுகோல், எழுத்தாணி
தூளி - புழுதி, குதிரை
தெழித்தல் - கோபித்தல், முழங்குதல்,
அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல்,
விதைத்தல்
தெல் - அஞ்சுதல்
தெள் - தெளிவான
தோலன் - அற்பன்
தோழன் - நண்பன்
தோலி - பிசின், ஒருவகை மீன்
தோழி - பாங்கி, நட்பால்
நெருக்கமானவள்
தோளி - அவுரி (ஒருவகை
குத்துச்செடி), அரக்கு
தோல் - சருமம், வனப்பு, விதையின்
மேல்பகுதி
தோள் - புயம், வீரம்
நலன் - நலம், அழகு, புகழ், இன்பம்,
நன்மை, குணம்,
நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்
நலி - நோய்
நளி - குளிர்ச்சி, பெருமை
நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்
நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்
நல் - நல்ல
நள் - இரவு, நடு, நள்ளிரவு
நாலம் - பூவின் காம்பு
நாழம் - இழிவுரை, வசவு
நாளம் - பூந்தண்டு, உட்துளை,
ரத்தநாளம்
நாலி - முத்து, கந்தை ஆடை
நாழி - உள்தொளையுள்ள பொருள்,
ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா,
பூரட்டாதி
நாளி - கல், நாய்
நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து
நாழிகை - வட்டம், கடிகாரம்
நால் - நான்கு
நாழ் - குற்றம், செருக்கு
நாள் - காலம், திதி
நீலம் - ஒரு நிறம், கருங்குவளை,
இருள்
நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்
நீல் - நீலம், காற்று
நீள் - நீளம், ஒளி
பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி,
சேனை, வன்மை, உறுதி, எடை
பழம் - கனி, முதுமை
பல்லி - சிற்றூர், இடையர் ஊர்,
உழுகருவி, ஓர் உயிரி,
வண்டியுறுப்பு
பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில்,
குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை,
பள்ளிக்கூடம்
பலி - பலியிடுதல், பலியுயிர்
பழி - குற்றம்

பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
பாழ் - வீண், வெறுமை
பீழை - ?

தெய்வம்


(மேலும் அறிய படியுங்கள்,
நூல்: வேரும் விரிவும் 2
ஆசிரியர் : ப.அருளி)

                                                   தெய்வம்

துய் - பொருத்துதல் கருத்து மூலவேர்

துய்தய்தை = பொருத்து
தய்தெய்தேய் = பொருத்து, உராயு
தேய்கல் = உரைகல்
தேய்தேய்தீ = உரசலினால்
                             உண்டாகும் நெருப்பு
தீதீவுதீவம் = தீவிளக்கு
      (செம்பொன் தீவங்களும் மலிதர)
இத் தீவம் என்ற சொல்லினின்று வடபால் மொழிகளில் ஏற்றப்பட்டுள்ள சொற்கள்.

தீப/தீய/தேவ்/திவா/தியா/தீவ

தீயை வணங்கிய மாந்தன், தீயின் செந்நிற அடிப்படையில் கடவுளை உருவாக்குகின்றான்.

அர் = சிவப்பு கருத்து மூலம்
அரக்கு = செம்மெழுகு
அரத்தம்= குருதி
அரன் = சிவன் (செந்நிறத்தவன்)

செய்:(சிவப்பு நிறக் கருத்தின்
             முதனிலை)
செய்செய்ம்செம்~செம்மை=சிவப்பு
செய்~சேய்=செங்குருதியோடு
          வெளிவரும் பிறந்த குழந்தை
சேய் =சிவந்தவன்
சேயன் ~சேயோன்
சேயோன் =சிவன்
சேய்ந்தோன்சேய்ந்தன்சேந்தன்=சிவன்

(சிவந்தவன் என்ற பொருள்பட்ட சேய் என்ற சொல் சிவனை குறித்து வழங்கிவந்த போது, அதற்குரிய மற்றொரு பொருளான குழந்தை என்பதனோடும் அதனை பிறழ எண்ணிய பிற்கால தமிழர், அச்சிவனின் மகனான குறிஞ்சி நிலக்குமரனை நேர்நிறுத்தினர்)

அரன் என்பதன் பெண்பால் கடவுட் பெயர் அரி. இரண்டும் ஒன்றுதான் வேறுவேறில்லை என்ற பொருளில் அரியும் அரனும் ஒன்று என்ற பழமொழி உருவாகியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

அரன்~ ஹரி (சமற்கிருதம்)

அரன் என்ற சொல்லின் திரிபான "ஹர" என்பதை அரி (அழி) என்னும் வடமொழிக்கண் சென்று திரிபடைந்த ஹர என்ற அழித்தற் பொருட்சொல்லோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. ஆகையாலே "சிவன் அழித்தல் கடவுள்" என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டிருக்கலாம்.

தேய்தீய்தீ
தேய்தேய்வுதெய்வு =தீ
தெய்வம்=தீ, நெருப்பு கடவுள், சிவன்

கழக(சங்க) கால இலக்கியங்களுள்
நூற்றுக்கும் மேற்பட்டு பரந்து நிற்கும் நிலைத்த தெளிந்த பதிவுகள் தமிழக தெய்வத்திற்கு உள்ளன. மேலும் தெய்வக்கம்மியன்,தெய்வக்காப்பு,தெய்வச்செயல்,தெய்வத்தீர்வை,தெய்வப்பிறவி,தெய்வப்பவகை என்று பல்வேறு கூட்டுச்சொற்கள் பயில்வுறுகின்றன.

தெய்வம்~ தெய்வ (சமற்கிருதம்)
தேய்வுதேவுதேவன்

(கழககால பெயர்கள் சில: இளந்தேவனார், பூதன் தேவனார், பெருந்தேவனார்,நாகன்தேவனார்,வாயிலோன் தேவன்)

வடபால் மொழிகளில் தேவன்:
பாலி=தேவ
கரோட்டி=தேவ
பிராகிருதம்=தேவ,தேய,தேவய
அசுக்கன்=தேய்
வைகலி=தே
அவெசுத்தன்=தயேவ்ய
கலசா=தேவ
லகண்டா=தியோ
பஞ்சாபி=தியு
சான்சாரி=தியே
குமேனி=த்யோ
இந்தி=தேவ்
குசராத்தி/மராத்தி=தெவ்

தேவன்~ தேவி (இறைவி)

(சமற்கிருதத்திலும் இச்சொல் திரிபடையாமல் உள்ளது என்பதை நோக்குக)

பாலி/பிராகிருதம்=தேவி
பஞ்சாபி/மார்வாரி=தெயீ
குமேனி=தே
கரோட்டி=தெவி

அரசியை சுட்டவும் தேவி என்ற சொல் பயன்பட்டுள்ளது. அரசியை சுட்டுவதற்கு வடபால் மொழிகளில் சொற்கள்:

பிராகிருதம்=தேவி
ஒரியா=தெயீ
மராத்தி=தெய்

தெய்வு என்னும் தெய்வத்தை குறிக்கும் சொல் கிரேக்க, இலத்தீனத்திலும் மிகநுண்ணிய மெலுக்கான திரிபு நிலையில் பதிவெய்தியுள்ளது.

தெய்வு:
Greek=theos
Latin= deus, deiwos
English=theos
(thoelogy, athiesm, pantheon)

deus~deiwos~divus (Latin)
dei gratia = by god's grace

theos ~thestes (Greek)
deites (Latin) deite (old french)
Deity (english)
Devin (old french)~ devine (middle english)~divine (english)

நம் தெய்வமும் தேவனுமே உலகெங்கும் மக்கள் வாயில் படிந்துள்ளனர். இத்தெய்வக்கருத்து நம் தமிழர்கள் படைத்து வழங்கியது.
ஆனால் நாமோ "தேமே" என்று இருக்கின்றோம்.

(தெய்வமே~தேமே)

"தெய்வமே நீயே பார்த்துக்கொள்!"
என்ற பொருளில் திரிபடைந்த தேமே என்ற சொல் , 1. கடவுளே துணையாக,
2. பிறர் செயலில் தலையிடாமல் 3. எதிலும் ஈடுபடாமல் வெறுமனே இருத்தல் என்றவாறு பயன்படுத்தப்படுகிறது.