ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

வேள்வியும் யாகமும்

                                              வேள்வியும் யாகமும்

(உசாத்துணை நூல்: வேத வெறி இந்தியா.  ஆசிரியர் பொழிலன்)

யக்ஞம் என்னும் சங்கத சொல்லின் திரிபு சொல் யாகம் என்பதாகும். இதனை தமிழில் வேள்வி என்று அழைக்கிறார்கள். அது சரியா இல்லை பிழையா என்ற கேள்விக்கான பதில்தான் கீழ்க்காணும் பதிவு.


 வேள்வி என்ற சொல் தமிழ்ச்சொல். வேள் என்ற முதனிலையிலிருந்து பிறந்தது. வேள் என்றால் விருப்பம் என்று பொருள்.

தமிழிய மொழிகளான மலையாளத்திலும், தெலுங்கிலும் வேள்வி என்றும், கன்னடத்தில் பேளுவெ என்றும் வழங்கப்படுகிறது.

விரும்பிச் செய்யும் பல வினைகளை அது குறிக்கும். திருமணம், விருந்தினர் படையல், தெய்வப் படையல், பேய்ப் படையல், கொடை போன்ற வினைகளுக்கு அச்சொல் கையாளப்பட்டிருக்கின்றது.

"நாம்முன்பு தொண்டு கொண்ட வேள்வியில்"

(பெ.புராணம், தடுத்தாட்கொண்டது-127)

என்பதில் திருமணம் என்ற பொருளில் வருகிறது.

"இணைத்துணைத்(து) என்பதொன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்"
                            (குறள் 87)

"பரித்தோம்பிப் பற்றற்றோம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்"
                           (குறள் 88)

என்பனவற்றில் விருந்தினர்க்கு படையலாகவும் பொருள்படும்.

" வேள்வியினழகில் விரும்புவோரும்"
                          (பரிபாடல் 19-43)

இதில் தெய்வத்திற்கு படையல் என்ற பொருளில் வந்துள்ளது.

" பண்ணியதைஇய பயங்கெழு வேள்வியின்"
                                  (அகநானூறு 13-43)

இங்கு பேய்கட்கான படையலாக காட்டப்பட்டுள்ளது.

தமிழர்தம் வேள்வியை 'விருப்பம்' என்றும் 'விருப்ப வேண்டுகை' என்றும் ' விருப்பப் படையல்' என்றும் ' விருப்பப் பூசை' என்ற அளவில் கருதலாமேயன்றி கொலைப்பலியிடல் என்று கருத இயலாது.

இவை ஒருபுறம் இருக்க, பலியிடுதல் தொடர்பான வழக்கங்களையும், பதிவுகளையும் அறிதல் வேண்டும்.

சிறுதெய்வ வழிபாட்டில் பலியிடுதல் இன்றும் உள்ளது. விழாக்காலங்களிலும், வேண்டுதல் நிறைவேறவும் பெரும்பாலும் ஆடுகளை பலியிடுதல் வழக்கமான ஒன்றே. மாடுகளை பலியிடுதல் கூட குறைவாகவே அதுவும் மருதநிலம் தவிர்த்து, முல்லை, குறிஞ்சி பகுதியிலே நடந்திருக்க வேண்டும்.

ஆயினும் பழந்தமிழ் இலக்கியங்களில் பலியிடுதல் என்பது ஆடு, மாடுகளை பலியிடுவதான பொருளில் அமைந்திருக்கவில்லை.

காட்டாக,

"துவெள் ளரிசி, சில்பலிச் செய்து'
          (திருமுருகாற்றுப்படை 233, 234)

"தளிர்ஏர் மேனித் தொல் கவின் அழிய
பலிபெறு கடவுட் பேணி, கலி சிறந்து"
                   -பெருமருதிள நாகனார் 
                          (நற்றிணை 251)

"அணங்கல் ஓம்புமதி வாழியநீ! என
கணம்கெழு கடவுட்கு உயர்பலி தூஉய்
பரவினம் வருகம் சென்மோ- தோழி"
             - நக்கீரர்(நற்றிணை 358)

"மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி,
பலிக்கள் ஆர்கைப் பார்முது குயவன்
இடுபலி நுவலும் அகன்தலை மன்றத்து
விழவுத் தலை கொண்ட பழவிறல் மூதூர்"
             -கயமனார் (நற்றிணை 293)



"வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு
மாற்று அருமரபின் உயர்பலி கொடுமார்"
              (மதுரைக் காஞ்சி 457)

" காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகு பலிவெண் சோறு போலத்
தூவவும் வல்லன் அவன் தூவுங்காலே"
                 -உறையூர் முதுகூத்தனார்
                           (புறநானூறு 331)

போன்ற பாடல்கள் பலி என்பது பூக்களிடுவதாகவும், தவசங்களிடுவதாகவும், சோறு தூவுவதாகவுமே இடம்பெற்று இருக்கின்றன.

காக்கைக்கு பலியிடுதல் (நற்றிணை 343), காக்கை பலிச்சோற்றை உண்ணுதல் (நற்றிணை 281), தெய்வத்திற்கு பூப்பலி செய்தல் (கலித்தொகை 93-24) போன்ற பழ வழக்கங்களின் பதிவுகளில் கூட பலியிடல் என்பது விலங்குகளை பலியிடுவதாகக் கூறப்பெறவில்லை.

மணிமேகலையில் வரும்,

"வெண்பலி சார்ந்த மெய்ம் முழுதுறீஇ" (13-108)

"நெல்லும் பொரியும் சில்பலி அரிசியும்" (6-95)

"கடவும் பீடிகைப் பூப்பலி கடைகொளக் கலம்பகம் பீடிகைப் பூப்ப பூப்பலி" (7-12)

என்று பல இடங்களில் வெண்ணீறு பூசிக்கொள்வதை பலி என்றும், நெல்லும் பொரியும் அரிசி மாத்தூவுதலை சிறுபலி என்றும் , மலர்களால் செய்யப்படும் பூசனைகளை பூப்பலி என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பூசை செய்யப்படும் வேண்டுகை நிலைகளும், விருந்து நிலைகளுமே பெரும்பாலும் பலியென்னும் பொருளிலேயே பழந்தமிழ் இலக்கியங்களில் கையாளப் பெற்றிருக்கின்றன.

இக்காலும் கோயிலுக்குள் பூக்களிடும் மேடையை பலிமேடை (பலிபீடம்) என்று கூறும் வழக்கு உள்ளது.

பெரும்பாலும் மருதநில மக்கள் வழிபாட்டிற்கு பூசொரிதல், நெல்மணி உள்ளிட்ட தவசங்களை, சோறு உள்ளிட்ட உணவுப் பொருட்களை பலியிடுதலாகவே இருந்துள்ளது.
முல்லை நில மக்களிடம் ஆடு, மாடுகளைப் பலியிட்டு சமைத்து உண்ணும் பழக்கம் இருந்திருக்க வேண்டும்.

இவைதான் வேள்வி, பலி போன்றவை பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவன.


ஆரிய இலக்கியங்களில் பலியிடுவதைப் பற்றி இப்போது காணலாம்.

யாகங்கள் குறித்த வேதமாக இருப்பதே யசூர் வேதம். யக்ஞ வேதமே யசூர் வேதமாக மருவியது.
அதில் அஸ்வமேதம், கோமேதம், நரமேதம், சர்வமேதம் என்பன குறிப்பிடத்தக்க பலிகள் ஆகும்.

மேதம் என்றால் கொலைப்பலி.

அஸ்வமேத யாகம் என்பது குதிரைக்கொலை பலி என்பதாகும்.
குதிரையை பலியிட்டு அதனுடன் பட்டத்து அரசியை படுக்கவைத்து துணியால் மூடுகின்றனர். பின்னர் அரசியை எழுப்பிவிட்டு , அரசரின் மனைவியர் குதிரையை துண்டு துண்டாக வெட்டுகின்றனர். இப்படியாக மூன்று நாட்கள் சடங்குகள் நடைபெறுகின்றன.
  (யசூர் வேதம் சதபத பிராமணம் 13.3 .4.1,2)


மாட்டுக்கொலைப் பலி:
    வேத காலங்களில் விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் விருந்திற்கு கோக் நஹ என்று பெயர்.

மாந்தக் கொலைப் பலி:
       மாந்தர்களைக் கொன்று நடத்தப்பட்ட தீப்பலி புருஷமேதம் என்று அழைக்கப்பட்டது. யசூர் வேதத்தில் இது குறித்த பதிவுகள் உள்ளன.

அனைத்துவகைக் கொலைப் பலி:
          இருக்கு வேதம் 10ம் மண்டலம் 81-1 ம் பிரிவில் சர்வமேதம் குறித்து குறிப்புகள் உள்ளன.
" தெய்வமும் பூசாரியுமான விஸ்வகர்மா, தம் பொருள்களை எல்லாம் பலியாக்கிய பின்னர், தானே தீப்பலி நடத்தி , அதில் தாமாகவே வீழ்ந்து மடிவான்"
   என்று இருக்கு வேத பாடல் சுட்டுகிறது.

இவையெல்லாம் ஆரிய இலக்கியங்களில் காணப்படும் யாகம் குறித்த சிறு விளக்கம் ஆகும்.

வேள்விக்கான விளக்கமும், யாகத்திற்கான விளக்கமும் பார்த்தாயிற்று.

இப்பொழுத கூறுங்கள்! யாகம் என்கிற சங்கதச் சொல்லிற்கு வேள்வி என்ற தமிழ்ச்சொல்லை பயன்படுத்தலாமா?
உயிர்ப்பலியே இல்லாத வேள்வி என்ற தமிழ்ச்சொல்லை, உயிர்ப்பலி உடைய அதிலும் மாந்தப் பலியையே கொண்ட யாகம் என்ற சங்கத சொல்லிற்கான தமிழ்ச்சொல்லாக கையாளுதல் ஏற்புடையதா?
யாகம் என்பதற்கு வேறு புதிய சொல்லை உருவாக்குவதே சரியானதாகும்.



மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
05 சுறவம் 2051
(19-01-2020)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக