"எழுதி எழுதிச்
செல்கின் றேன்நான்!என்ன பயன்என
எண்ணிப் பார்க்கிலேன்!
உழுது விதைத்தவை
ஒருநாள் விளையுமோ?
ஊமை விதைகளாய்ச்
சாவியாய் ஒழியுமோ!
புழுதியுள் மறையுமோ?
பூக்களாய் மலருமோ?
அழுகியும் உலுத்தும்
அமுங்கிப் போகுமோ?
பழுதென் றுரைத்துஅவை
பழித்திடப் படுமோ?
பயன்ப டாதுஎன
விலக்கிடப் படுமோ?
தொழுது போற்றுமோர்
காலம் தோன்றுமோ?
துயரச் சுமைக்கொரு
தூண்என நிற்குமோ?
பசித்த அறிவினால்
புசித்திடு வார்களோ?
பரபரப் புணர்வொடு
கொறித்திடு வார்களோ?
விசித்து விசித்துநான்
அழுத அழுகையும்
விடிய விடியநான்
வடித்த கண்ணீரும்,
மக்கள் இனத்தின்
கடைசி மாந்தனின்
ஒக்க அழுகையொ(டு)
ஒன்றாய்இணையுமோ?
ஒழுகுகண் ணீரொடு
ஓடிக் கலக்குமோ?
எழுதி எழுதிச் செல்கின் றேன்நான் !
என்ன பயன்என எண்ணிப் பார்க்கிலேன்!
===========================
-- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக