திங்கள், 27 ஜூலை, 2020

பாசம்


"தமிழ் - சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின்  

ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய உரைகள் (தொகுதி-2) "

 நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
                                                
                                                                பாசம்
சொல் மூலம்:
            பய் > பாய், >பாய் + அம்> பாயம் > பாசம்.

சொற்பொருள்கள் :
            பாசம் : 1. அன்பு 2. பற்று 3. தளை 4. கயிறு 5. தையல் 6. சுற்றம்

பய்: பசுமைக் கருத்து மூலவேர்.
            (இப் "பய்" என்னும் மூலத்தின் வளர்ச்சிகளையும் விளர்ச்சிகளையும்
 "பை" என்னும் உரைக்கட்டுள் கண்டு கொள்ளுக!)

            பசுமைக் கருத்தின் கிளை வளர்ச்சியாக, ஒட்டுதல் கருத்து நிரம்பி, அதனின்றும் பலபடியான சொல்லாக்கங்கள் செழிப்பெய்தின. பசுமையும் ஈர்மையும் (ஈரத்தன்மையும்) உடைய ஒன்றே, ஒட்டுறவுக்கு இயல்வதாகையும், வறட்சியும் உலர்ச்சியும் உடைய ஒன்று, இயைவுக்கு இயலாததாகையும்,ஈண்டுக் கருத்தில் கொள்ள வேண்டிய உண்மைகளாகும்.
பய் > பயின் = பசை, அரக்கு, பிசின்

            (1-1) "பயினொடு சேர்த்திய கல்போல்"
                                                                        (அகம்: 256:9-10)
            (1-2) “பல்கிழியம் பயினும் " (சீவக : 250)
            (1-3) “பிசின் பயினொன்றே பேர்" (சூடா . 6:21:4)

பயின் = பாலேடு (திவாகரம்)
(துளு) Bine = Sticky, adhesive. (
கன்ன டம்) Paginu = gum, resin. (paginu>haginu)
                   Pagil = to be sticky, adhesive

பய்+இர் > பயிர்+பு> பயிர்ப்பு = பசை, பிசின், அழுந்த ஒட்டும் பசை.

(1-1)           "பலவின் பயிர்ப்புறு தீங்கனி" (கலி: 50:12)
(1-2)           “ பயிர்ப்புறு பலவின் எதிர்சுளை அளைஇ"
                                                (அகம். நித்தி. 308.4)

பயிர்ப்பு = பிற ஆடவர் மேனி, தன் மேற்படுங்கால், பெண்டிர்க்கு இயல்பாகவே
                  மனத்துள் தோன்றும் அருவருப்புணர்வு; அருவருப்பு. (திவா),
                  மகடூஉக் குணம் நான்கனுள் ஒன்று.

பய் >பயி >, பசி = உணவின்மையால் வயிறு ஒட்டும் நிலை,
                                    அதனைத் தீர்க்க வேட்கையுறும் உணர்ச்சி.
            “பசியட நிற்றல் பசலை பாய்தல்" (தொல் : 6:22-3)

            “பயி” என்னும் பழந்தமிழ் வடிவம், மலையாளத்தில் பசிய வடிவங்களில்
பரக்கக் கிடக்கின்றது.
 (மலை) பயி, பய், பய்க்கம், பயிப்பு = பசி
(கன்னடம்) பசி = பசி                                                            (தெலுங்கு) பஸ்து.

பயிர் +கை >பயிர்கை = பறவை விலங்கு முதலியன தமக்கு
                                           உடல் வேட்கை எழும்போது, தம் எதிர்பால் இனவுயிரை                                                            விளித்தழைக்க வெளிப்படுத்தும் ஓசை, குரல்.

 பய் +இர்> பயிர் + தல்> பயிர்தல்
             (1-1) ''வீழ்துணை பயிரும் கையறு முரல்குரல்"
                                                                                    (நற்:71:9)
             (1-2) ''புணர் துணை பயிர்தல் ஆனா பைதலங் குருகே"
                                                                                    (நற்:3 88:12)
பய் + இல் > பயில் = ஒட்டு, நெருங்கு
             “மஞ்ஞை ஆலும் மரம்பயில் இறும்பின்"
                                                                                    (பெரும்பாண் : 395)
பயில் + தல் பயிறல் = நெருங்குதல், ஒன்றுதல்,
                                                ஒன்றிப் பழகுகை
. ஒ.நோ : “மெய் தொட்டுப் பயிறல்"
                                                (தொல். பொருள் : 3:11:1)
 பயில்+சி, பயிற்சி = பழகிப் பெறும் கல்வி, பழக்கத் தொடர்ச்சி.

பய் > பயை>  பசை = ஒட்டுதற்குரிய பொருள், கஞ்சி,கூழ்ப்பொருள்.

 ஒ.நோ: நய்> நயை > நசை.                                     இய் > இயை> இசை.
 (துளு): பச = பசை
(மலை) பச்சு, பச, பய = பசை

 "சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி"
                                                                        (மலைபடு : 26)
            (இம் மேற்கண்ட இலக்கிய வரியுள் பற்றியிருக்கும் பசையென்னும்
 சொல்லுக்கு நச்சினார்க்கினியர், 'பற்று" என்று பொருள் குறிப்பார்.)

            (உணவு சமைத்த கலத்தின் அடிப்புறத்தில் படிந்து ஒட்டிப்போயிருக்கும்
தவசப் பசையைப் பற்று” (பத்து) என்னும் சொல்லால் ஊர்ப்புறமக்கள் சுட்டுவர்.)

பசை = ஒட்டும் பசைபோன்றிருக்கும் கஞ்சி.
             ''நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்து"
                                                                                    (குறுந்: 330:1)
பசை = ஒட்டு, ஒட்டிக்கொள், பற்றிக்கொள்

                        "அசைஇய பொழுதில் பசைஇ வந்து" (அகம்: 379:21)
                        (பசைஇ வந்து - பற்றிக் கொண்டு வந்து)

 பசை= பற்று, உள்ளப்பற்று, உள்ள ஒட்டுறவு, அன்பு
பசை = விழைவு.
            "பசைஇய பசந்தன்று நுதலே" (குறுந்:87:4)
(நுதல் பசைஇய பசந்தன்று = நெற்றி, அவர் எம்மை விழைதல் வேண்டிப்
பசந்து காட்டுவதாயிற்று)

பசை+ தல்> பசைதல் = விரும்புதல்
            “ நோக்கிப் பசைதல் பரியாதாம் மேல்"
                                                                        (நாலடி: 60: 3-4)
பசைதல் = நட்புக் கொண்டிருத்தல்
            "பசைந்த துணையும் பரிவு ஆம்" (நாலடி: 187:1-2)

பசை = அன்பு, நெகிழ்வு.
            “அசையியற்கு உண்டு ஆண்டுஓர் ஏஎர் யான்நோக்கப்
 பசையினள் பைய நகும்"                                        (குறள் : 1098)

பய்> பாய்> பாய் +அம் >பாயம் = விருப்பம், விழைவு, அன்பு, புணர்ச்சி
                                                                                                 விருப்பம்.
பாயம் : விருப்பம்.
             "பளிங்கு சொரிவு அன்ன பாய்சுனை குடைவுழி
            நளிபடு சிலம்பில் பாயம் பாடி"                  (குறிஞ்சிப் : 57-58)
(நச். உரை: பாயம் பாடி = மனத்துக்கு விருப்பமானவற்றைப்பாடி......)

பாயம் = புணர்ச்சி, விருப்பம்.
                        "ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்
                        பன்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது"
                                                                        (பெரும்பாண் : 341-342)
            (நச். உரை: ஈரத்தையுடைய சேற்றை அளைந்த, கரிய பலவாகிய குட்டிகளையுடைய , பலவாகிய மயிர்களையுடைய பெண்பன்றிகளுடனே, புணர்ச்சியைக் கருதும் கருத்தாற் போகாமல் ………..)

பாயம் > பாசம் = அன்பு, வேட்கை, உறவன்பு
             ஒ.நோ: தேயம்> தேசம்.                                           நேயம் >நேசம்
                        ஈயல் > ஈசல்                                                  நெயவு > நெசவு.
பாசம் = அன்பு
                        "பாசமாகிய பந்து கொண்டாடுநர்” (சீவக:1320)
பாசம் = பற்று.                       “மனைப்பாசம் கைவிடாய்" (நாலடி:130)

பாசம் = பற்றிமை.                “பாசம் பரஞ்சோதிக் கென்பாய்"
                                                                                                (திருவாச: 7:2)
            தன்னைப் பொருந்திய அன்புடைய சுற்றத்தினர், “பாசம்” என்ற
சொல்லாலேயே குறிக்கப் பெற்றனர்.
                                                                                    (பாசம் = சுற்றம்)
            "ஆசை பிறன்கண் படுதலும், பாசம்
            பசிப்ப மடியைக் கொளலும்"                      (திரிகடு: 20)

            அன்பையும் விழைவையும் வேட்கையையும் குறித்தவாறு வளர்ந்து பயிலப்பெற்றதாகிய, "பாசம்” என்னும் சொல் தமிழ்மொழியில் மட்டுமே
தோன்றிய ஒன்றாகும். தொடர்ந்த பரவலான வழக்காற்றிலும் உள்ளதாகும்.

            இம் மேற்கண்ட பொருள்களையுடைய பாசம்" என்னும் தூய
செந்தமிழ்ச்சொல், சமற்கிருதத்தில் அறவேயில்லை. தமிழ்மொழிப்
 புலவர்கட்கும் பொது மக்கட்கும் உற்ற வடமொழி மயக்கமும்,
தன்னுணர்வின்மையும், அச்சொல்லை வடமொழியென்றே பிழைத்தெண்ணிப்
 பயின்று வருமாறு நேர்வித்துள்ளன.

            “பய்" என்னும் ஒட்டுதல், ஒன்றுதல் கருத்து மூல வழியாகப், பிணித்தல்
 கருத்தும், கட்டுகைக் கருத்தும் விளர்ந்தன.


 பய்>பாய் பாய்+அம்> பாயம்> பாசம்:
            “பாசம்" என்பது, ஒன்றைப் பற்றிப் பிணிப்பதாகிய கயிற்றுக்கும்
ஆகிவந்தது.

பாசம் = கயிறு.
             “விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
            பாசம் தின்ற தேய்கால் மத்தம்" (நற்:12:1-2).
             (உரை: கயிறு ஆடித் தேய்த்தலாலே தேய்ந்த தண்டினை உடைய
பெருமத்து)
பாசத்தளை = பற்றிப் பிணிக்கும் தளைக்கயிறு.
            “பற்று என்னும் பாசத் தளையும், பலவழியும்
            பற்று அறாது ஓடும் அவாத் தேரும்”                        (திரிகடு:22:1-2)

            உயிர் என்று, ஏதோ ஒரு அருவ ஆற்றல்,- உடலுள் ஒளிந்திருக்கின்றது
என்றும், காலங்குறித்து ஒருவன் தன் கையில் வைத்திருக்கும் கயிற்றால்
 அவ்வுயிரைக் கட்டிப் பிணித்துக் கவர்ந்து போகின்றான் என்றும்,- ஒரு
கற்பனையான மூடக் கருத்து, இங்கு நிலவியிருந்தது.

யாமம் = நள்ளிருள், நள்ளிருள் நேரம். யாமன் > யமன்= நள்ளிருள் நேரத்துள்
வந்து உயிரைக் கவர்ந்து போகின்றவன். (ஒரு கற்பனை இல்லுருவோன்.)
(யமன்> எமன்). (யமன்> நமன்).

(கால் = பொழுது, நேரம்.                  கால் + அம் > காலம் = பொழுது.
 கால் + அன் > காலன் = பொழுது அறிந்து வந்து உயிரைக் கவர்ந்து
போகின்றவன். (பகுத்தறிவற்ற பேதையர் ஆக்கிய தமிழ்ச்சொல்)

            அக் கற்பனையுருவோன் கையகத்திருப்பதாகக் கருதப் பெற்ற கயிறு,
 "பாசம்” என்னும் கிளைப் பொருண்மைச் சொல்லோடு பிணிக்கப்பெற்று, ஓர் இருபெயரொட்டுச் சொல்லாகப் 'பாசக்கயிறு" என்றும் பயிலப்பெற்றது.

            அச்சவுணர்ச்சியால் பேதையர் உள்ளத்தே தோன்றிய "பேய்" என்னும் ஒரு கற்பனையுருவும், உயிரைக் கயிற்றில் பிணித்துக் கவர்ந்து செல்கின்றதென்று, மடத்தனமாகக் கருதி,- கயிற்றை வைத்திருப்பது என்ற அடிப்படையில், "பாசம்" என்ற சொல்லாலேயே அப் பேயும் குறிக்கப்பெற்றது.

(பாசம் = பேய்)
 ஒ.நோ: "பலிகொண்டு பெயரும் “பாசம்” போல”
                                                                        (பதிற்: 71:23)
 பாசம் = பாசக் கயிறு
(1-1) “கைக் கொள் பாசத்துக் கைப்படுவோர்"
                                                                        (சிலம்பு: 5:132)
 (1-2) “கறைகெழு பாசத்துக் கையகப் படுதலும்
            பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு
            கட்டிய பாசத்துக் கடிது சென்றெய்தி"
                                                                        (சிலம்பு: 15:79)
(1-3) - கட்டா துன்னையென் கடுந்தொழிற் பாசம்"
                                                                        (மணி: 22; 71)
            பிணிக்கும் கயிற்றைக் குறித்த ''பாசம்" என்னும் சொல், சமற்கிருதத்தில் “
Pasa' எனத் திரிந்தது. "பாசம்" என்ற செப்பவடிவம் அம்மொழிக்கண் இல்லை.

            சமற்கிருத அகராதிகளில், “Pāsa” என்ற செரல்லுக்கு,வலை, கண்ணி,
சுருக்கு, கயிறு, தொடரி, அதனைக் கட்டுவிப்பது என்றவாறான பொருள்களைப்
பரக்கப் பட்டியலிட்டுள்ளனர்.

            அச்சொல்லுக்கு நேரே ,- அன்பு, விழைவு, விருப்பம், அன்புறவு, என்றவாறு, தமிழ்ச்சொல்லாகிய பாசத்துக்குரிய ஒருபுடைப் பரவலான செழும் பொருள்களில் ஒன்றுதானும் குறிக்கப் பெறவேயில்லை.

            பிணித்துத் தளைக்கும் கயிறாகிய "பாசம்” என்னும் தமிழ்ச் சொல்லின், திரிபுகளை, அதன்வழி வடபாலியர் வளர்த்துக்கொண்ட கிளைக் கருத்துகளுடன் கீழ்வரும் பட்டியலில் காணலாகும்.

பாசம் (Sanskrit)           Pāsa = noose,
                                    Pāsaka (Lex), Pāsi = rope (கயிறு)
                                    Pasika = leather strap on plough
 Pali:                 Pāsa = tie                     Pāsiya = little do.          
 Katei:               Pos = trap. (கண்ணி )
Khohistani:        Pas = noose (சுருக்கு, முடிச்சு)
Nepali:              Pāso= net
Oriya:                Pāsa = net
Bengali:             Pās= noose
Mythili:              Pās=net (வலை )
                        Kes-Pās = lock of hair
Hindi:                Pās, Pāsa= noose.
Old Gujarati;      Pāsu= noose.
 Konkani:           Pāsu
Sinhalese:          Pasa= net.


மின்னெழுத்தில் வடித்தது,

பெஞ்சமின் பிராங்கிளின்பி
10 கடகம்  2051
௧०//௨०௫௧]
(25-07-2020)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக